இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் மற்றோர் அடி!

 


இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இங்கிலாந்து அணி 2:1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இந்திய அணியில் கடந்தப் போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் டக் அவுட் ஆகி ராகுல் ஏமாற்றம் அளித்தார். இஷான் கிஷன் 4, ரோகித் சர்மா 15 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன் பின்னர் சிறப்பாக விளையாடி வந்த ரிஷாத் பந்த் 25 ஓட்டங்களில் அநாவசியமாக ரன் அவுட் ஆனார். தொடர்ந்து ஸ்ரேயாஸ் அய்யரும் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்து கொண்டே வந்தாலும் தனி ஆளாக அணித் தலைவர் விராட் கோலி அதிரடி காட்டினார்.

 தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய விராட் பின்னர் விஸ்வரூபம் எடுத்தார். ஜோர்தன் ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி அரைசதம் கடந்த பின்னர், அவர் ஆர்ச்சர் ஓவரில் இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசினார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களை எடுத்தது. அதிரடியாக விளையாடிய விராட் கோலி 46 பந்துகளில் 77 ஓட்டங்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

இதில், 4 சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடங்கும். விராட் கோலிக்கு இறுதியில் ஒத்துழைப்பு அளித்த ஹர்திக் பாண்டியாவும் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.

157 ஓட்டம் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் ஜேஸன் ரோய் 9 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, டேவிட் மலன் 18 ஒட்டங்களில் பெவிலியன் திரும்பினார். 

விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சற்றும் தளராமல் தொடர்ந்து தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை திக்குமுக்காட வைத்தார் ஜோஸ் பட்லர். 

அவரது அதிரடி இந்திய அணியின் வெற்றி கனவு தகர்ந்தது. அவருக்கு துணையாக ஜானி பெயர்ஸ்டோவும் அதிரடி காட்டினார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 158 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் 52 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 83 ஓட்டங்களையும், பெயர்ஸ்டோ 28 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்களையும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.