வெற்றி, தோல்வியின்றி நிறைவடைந்த முதல் போட்டி!
சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுபெற்றுள்ளது.
இலங்கை - மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையில் தற்சமயம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்தது.
கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமான இப் போட்டியில் முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 69.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 271 ஓட்டங்களை பெற்றது.
102 ஓட்டங்களினால் பின்னிலை வகித்த இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸுக்காக மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 149.5 ஓவர்களை எதிர்கொண்டு 467 ஓட்டங்களை குவித்தது.
அணி சார்பில் பதும் நிஷாங்க 103 ஓட்டங்களையும், லஹிரு திரிமான்ன 76 ஓட்டங்களையும், ஓசத பெர்னாண்டோ 91 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 96 ஓட்டங்கைளயும் மற்றும் தனஞ்சடிய டிசில்வா 50 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
375 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
ஜோன் காம்ப்பெல் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, கிரெய்க் பிராத்வைட் 8 ஓட்டங்களுடனும், போனர் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இந் நிலையில் போட்டியின் இறுதியும் ஐந்தாம் நாள் ஆட்டமும் நேற்றைய தினம் ஆரம்பிக்க மேற்கிந்தியதீவுகள் அணியினர் அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுக்காது பாதுகாத்துக் கொண்டனர்.
அதனால் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் 100 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 236 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.
கிரெய்க் பிராத்வைட் 23 ஓட்டங்களுடனும், ஜோன் காம்ப்பெல் 11 ஓட்டங்களுடனும், கைல் மேயர்ஸ் 52 ஓட்டங்களுடனும், ஜெர்மைன் பிளாக்வுட் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, போனர் 113 ஓட்டங்களுடனும், ஹோல்டனர் 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக போனர் தெரிவானார்.
இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அதே மைதானத்தில் ஏப்ரல் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
கருத்துகள் இல்லை