பதவி விலகிய ரெலோ தவிசாளர்!


கூட்டமைப்பு வசம் உள்ள வவுனியா தெற்குதமிழ் பிரதேச சபையில் தவிசாளராக இருந்த து.நடராஜசிங்கம் (ரவி) பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் ஆட்சியினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.

அதற்கமைய சபையின் தவிசாளர் பதவியினை ஆட்சிகாலப் பகுதியில் இரண்டரை வருடங்கள் என பங்கிட்டு வகிப்பதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளட் மற்றும் ரெலோ கட்சிகளிற்கிடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன், அது தொடர்பாக அவர் கையெழுத்திட்ட கடிதம் இன்றைய தினம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திடம் கையளிக்கப்பட்டு பிரதேச சபையின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அது மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவியிலும் மாற்றம் ஏற்ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.