முழு ஊரடங்கு: மாநிலங்களுக்கு

 


கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் மக்கள் கவனமுடன் இருந்தால், முழு ஊரடங்குக்கு அவசியமில்லை என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி, படுக்கை வசதி இல்லாமல், தடுப்பூசி, ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து மாநில அரசுகளுடனும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடனும் பிரதமர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், நேற்றிரவு (ஏப்ரல் 20) பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, “இந்தியா மீண்டும் கொரோனாவுக்கு எதிரான ஒரு போரை தொடங்கியிருக்கிறது. கொரோனாவால் உயிரிழப்பைச் சந்தித்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் இழப்பை எனது இழப்பாகவே கருதுகிறேன். கொரோனாவுக்கு எதிரான போரில், சிறப்பாகப் பணியாற்றி வரும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தைரியத்தோடும், நமக்கு இருக்கும் அனுபவத்தோடும் இந்த கொரோனாவை எதிர்கொள்ள முடியும். சில மாநிலங்களில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நோயாளிகளுக்கும் தேவைப்படும் ஆக்சிஜனைக் கிடைக்க செய்ய மத்திய, மாநில அரசுகளும், தனியார் துறையும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. விரைவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்.

மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளைத் தயாரிக்கும் பணி அதிகரிக்கப்படவுள்ளது.

தற்போது வரை, 12 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், நாட்டின் ஒவ்வொரு மூலை, முடுக்கிலும் தடுப்பூசி சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, குறைந்த விலையில் அளிக்கும் நாடு இந்தியாதான்.

பொது முடக்கம் என்பதை கடைசி ஆயுதமாக மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டும். கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் முழு முடக்கத்தை தடுக்கலாம். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றினாலே, ஊரடங்கு விதிக்க வேண்டிய அவசியம் இருக்காது. கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

சிறு கட்டுப்பாட்டு மண்டலங்களை அமைத்து நோய் பரவலைக் கட்டுப்படுத்துங்கள். மக்கள் பீதி அடைய வேண்டாம். தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்துங்கள். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தீர்வாகாது. நம் அனைவரின் ஒட்டுமொத்த முயற்சியின் மூலம் கொரோனா இரண்டாவது அலையை வென்றெடுப்போம்” எனப் பேசினார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.