கொழும்பில் காடழிப்புக்கு எதிராக ஐ.தே.க.வினர் ஆர்ப்பாட்டம்!


இலங்கையில் இடம்பெறும் காடழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலகம் முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன உட்பட கட்சியின் உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மேலும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸிற்கு இது தொடர்பாக ஐக்கியத் தேசியக் கட்சி அதிகாரபூர்வமாக கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

இந்தக் கடிதம் இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியிடம், கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இயற்கை சூழலை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிங்கராஜ வனம் பாதுகாக்கப்பட்ட வலயமாக 1978ஆம் ஆண்டில்  அறிவிக்கப்பட்டதாகவும் இந்த வனப் பகுதியில் எவ்வித அழிவினையும் ஏற்படுத்தும் செயற்பாடுகளையும் செய்வதற்கு அனுமதிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டங்களின் ஊடாக மட்டுமன்றி சர்வதேச உடன்படிக்கைகளின் மூலமும் சிங்கராஜ வனம் பாதுகாக்கப்பட்ட வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வனப் பகுதியில் எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் முன்னெடுக்க அனுமதிக்கக் கூடாது எனவும் கடித்ததில் கோரப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்தக் கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.