இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பான விபரங்கள்!


கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளமையை தொடர்ந்து இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 634ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இறுதியாக பதிவாகிய மரணங்கள் தொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மொட்டுவ பிரதேசத்தைச் சேர்நத ஆணொருவர் (80 வயது) கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவர், மோசமடைந்த கொவிட் நியூமோனியா மற்றும் இதய நோய் ஆகியவற்றின் காரணமாக உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று கண்டியைச் சேர்ந்த ஆணொருவர், (63 வயது) அம்மாவட்ட போதனா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக சிகிச்சைப்பெற்று வந்த  நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிசிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 22ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவர் கொவிட் நியூமோனியா, நாட்பட்ட ஈரல் நோய் மற்றும் நுரையீரல் நோய் ஆகியவற்றின் காரணமாக உயிரிழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை பேலியகொடையைச் சேர்ந்த ஆணொருவர் (71 வயது), இத்தாபான மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கொவிட் நிமோனியா காரணமாக கடந்த 20 ஆம் திகதி உயிரழந்துள்ளார்.

மேலும் கொட்டமுல்லவைச் சேர்ந்த ஆணொருவர் (76 வயது) மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த வேளையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவரது உயிரிழப்புக்கு  நாட்பட்ட சிறுநீரக நோய், கொவிட் நியூமோனியா, இதயநோய், நீரிழிவு ஆகியவையே காரணமென பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே நாரஹேன்பிட்டவைச் சேர்ந்த பெண்ணொருவர் (77 வயது) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த வேளையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவர் கொவிட் நியூமோனியா, இதய நோய் ஆகியவை காரணமாக உயிரிழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது” என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று மாத்திரம் 657 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,722 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொற்றிலிருந்து இதுவரை 93,884பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.