திருநெல்வேலிப் பழமொழி - குறுந்தகவல்!


திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இது;

“மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு...
மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு...
சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு...
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு...”

இந்தப் பழமொழிக்கு விளக்கம் என்னெவென்று தெரியுமா?

மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு:

மணி மந்திரம் என்ற ஒரு மந்திரத்தை சொன்னால் படம் எடுத்து நிற்கும் பாம்பும் அப்படியேத் திகைத்து நின்று விடுமாம். மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால், படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மணி மந்திரத்தை உச்சரித்துப் பார்த்துச் சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு:

வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் கரிமருந்துதான், அந்த வெடியை வானத்துக்குத் தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாணவேடிக்கையைப் பாருங்கள் என்பதுதான் இதன் பொருள்.


சாஸ்திரம்தான் பொய்யானால் கிரகணம் பாரு:

ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகணக் காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிருப்பதைப் பார்த்து வியப்படைந்திருப்பர். எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதைக் கிரகணம் குறித்துப் பஞ்சாங்கம் சொல்லியுள்ளதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என்பது அதன் பொருள்.

சாமிதான் பொய்யானால் சாணம் பாரு:

திருநெல்வேலி மாவட்டத்துக் கிராமங்களில் முன்பெல்லாம் செம்மண் கலந்து வீட்டு சமையலறையில் அவ்வப்போது அடுப்பு செய்வார்கள். அதன்மீது சாணத்தை பூசுவார்கள். ஒரு அடுப்பு உடைந்தவுடன் புதிதாக அடுப்பு உருவாக்கும்போது, பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வைத்து வணங்குவார்கள். அதன்பிறகே, அடுப்பு செய்வார்கள். இப்படி விநாயகர் உருவம் பிடித்தச் சாணத்தைப் பிறகு தூக்கிப்போட்டு விடுவார்கள். அதில்தான் ஆச்சரியம். விநாயகர் என்று வணங்கிய அந்தச் சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி, அதைச் சாப்பிடும். விநாயகர் என்று உருவாக்கி வழிபட்ட அந்தச் சாணத்தில் கரையான் இருக்காது. இதனைக் கொண்டு, கடவுள் இருப்பதைப் பாமரனும் சாணத்தைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.