கமல் அடுக்கும் புகார்கள்!
ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு குறித்து திமுக கூட்டணிக் கட்சிகள் கடுமையான புகார்களை கூறி வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றி மர்ம கன்டெய்னர்கள், ஸ்ட்ராங் ரூம் அருகே வைஃபை வசதிகள் செய்யப்படுவது குறித்து திமுக தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.
இந்த நிலையில் இந்த புகார்களை மக்கள் நீதி மய்யமும் முதல் முறையாக எழுப்பியிருக்கிறது. தேர்தல் முடிந்ததும் தனது வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடத்திய கமல்ஹாசன், இன்று (ஏப்ரல் 20) தமிழகத்தின் தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவை சந்தித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது தன் கவனத்திற்கு வந்த சில பிரச்சனைகள், வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பில் நீடிக்கும் மர்மங்கள் குறித்து ஒரு விரிவான மனுவை அளித்தார் கமல்ஹாசன்.
அந்த மனுவில், “ நடந்த தேர்தலில் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்களித்த சம்பவங்கள் நடந்துள்ளதாக கேள்விப்படுகிறோம். எங்களுக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.
ஒரே வார்டில், ஒரே முகவரியில் வசிக்கும் ஒருவருக்கு அவரது பெயர் , முகவரி, போட்டோ உள்ளிட்ட தகவல்களுடன் ஒன்றிற்கு மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வெவ் வேறு எண்களுடன் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம். வெவ்வேறு வழிகளில் விண்ணப்பித்து ஒன்றிற்கும் மேற்பட்ட அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்பவர்கள் தேர்தல் நாளன்று வெவ்வேறு வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்கிறார்கள். எனக்குத் தோல் ஒவ்வாமை உள்ளது என்று சொல்லி நகத்தில் மட்டும் மை வைத்துக் கொள்கிறார்கள். பின்னர், அதை ரிமூவர் மூலம் அழித்து விட்டு வாக்கு இருக்கும் இன்னொரு வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கிறார்கள் என்று எமது கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.
வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையததிற்கு இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சிகள் பெருகிவிட்ட சூழலில், விதிமுறைகளை செயல்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் அல்லது முறைகேடுகள் நடப்பதை கண்டறிவதற்கும் எளிய வழிகள் பல இருக்கின்றன”என்று கூறியிருக்கும் கமல்ஹாசன், தேர்தலுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடக்கும் விதிமீறல்கள் பற்றியும் தன் புகாரில் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார்.
“வாக்கு எண்ணும் முறையை எளிதாக்குவதற்கும், செல்லாத போலி வாக்குகளைத் தவிர்க்கவும் வாக்கு இயந்திரங்கள் வந்த பிறகும், வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைத்ததற்காக சொல்லப்படும் காரணங்கள் ஏற்புடைய தல்ல. ஏறக்குறைய ஒருமாத கால காத்திருப்பு என்பது அநாவசியமானது. ஆபத்தானது.
ஈ.வி.எம். மெஷின்கள் வைத்திருக்கும் ‘ஸ்ட்ராங் ரூம்’ வளாகங்களில் சி. சி.டி.வி. கேமராக்கள் அடிக்கடி வேலை செய்யாமல் நின்றுபோவதும், மடிக்கணினிகளோடு சில நபர்கள் அப்பகுதிகளில் நடமாடுவதும், யாருக்கும் தெரியாதபடி இரவு நேரங்களில் கண்டெய்னர் போன்ற மூடப்பட்ட வாகனங்கள் ஸ்ட்ராங் ரூம் வளாகங்களுக்குள் கொண்டு வரப்படுவது போன்ற நிகழ்வுகள் வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து பெரும் அச்சத்தையும் குழப்பதையும் ஏற்படுத்துகின்றன. பாதுகாப்பு அறைகளில் நடந்த விதிமீறல்கள்:
13.4.2021 அன்று நள்ளிரவில் கோயம்புத்தூர் ஜிசிடி கல்லூரி வளாகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை வளாகத்திற்குள் திடீரென மூடப்பட்ட வாகனம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
14.4.2021 அன்று நள்ளிரவில் திருவள்ளூரில் உள்ள பெருமாள்பட்டு ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள பாதுகாப்பு அறை வளாகத்திற்குள் சந்தேகப்படும்படியாக மூடப்பட்ட வாகனம்ஒன்றுகொண்டு வரப்பட்டுள்ளது.
16-04.2021 அன்று நள்ளிரவில் சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை வளாகத்திற்குள் சந்தேகப்படும் படியாக லாரி ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் உள்ள பாதுகாப்பு அறை வளாகத்திற்குள் மடிக்கணினியுடன் 31 பேர் அத்துமீறி நுழைந்துள்ளார்கள்”என்று பட்டியலிட்டுள்ள கமல்ஹாசன்,
மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரைகளையும் வழங்கியுள்ளார்.
“தமிழ்நாட்டில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (கண்ட்ரோல் யூனிட்ஸ், பேலட் யூனிட்ஸ், விவிபிஏடி) வைக்கப்பட்டுள்ள ஸ்டாரங் ரூம் முழுமையாகப் பாதுகாத்திட வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகங்களில் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கக்கூடாது. ஈ.வி.எம் மெஷின்கள் வைக்கப்பட்டுள்ள “ஸ்ட்ராங் ரூமின்’ உட்பகுதிகள் அனைத்தும் தெளிவாக தெரியும் வகையில் சிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். ஈ.வி.எம் மஷின்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூமின்’ பின்பகுதி உள்ளிட்ட நாற்புறமும் கண்காணிக்கப் படும் வகையில் டிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணும் மையத்தில் கட்சியின் முகவர்களை ஓரிடத்தில் அடைத்து வைத்தது போன்ற சுகாதாரமற்ற முறையை கடைபிடிக்காமல், தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு முகவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு முன் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். நம்பகத் தன்மையை உறதி செய்யும் வகையில் வாக்கு எண்ணிக்கையின் போது விவிபாட் எண்ணிக்கையை யும் 100% ஒப்புநோக்கி முடிவுகளை அறிவிக்க வேண்டும். விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணித்து, விதிமீறல் நடப்பதை தவிர்க்க முறையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வாக்காளர் பட்டியல் குறித்து வீடுகளுக்குச் சென்று சரிபார்க்கலாம். அப்படியே இல்லை என்றாலும் ஆதார் கார்டு எண் அல்லது மொபைல் எண் ஆகியவற்றின் உதவியோடு டூப்ளிகேட் வாக்காளர் அடையாளர் அட்டை எண்ணைக் கண்டறிந்து உடனடியாக நீக்க வேண்டும்.
சமீபத்திய தேர்தல்களில் 17 வாக்குகள் வித்தியாசத்தில் சட்டமன்ற தேர்தலிலும், 44 வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்ற தேர்தலிலும் முடிவு வருகிறது. இப்படியான சூழலில், தேர்தல் ஆணையம் மேலும் மிகுந்த கவனத்துடன் வாக்காளர் பட்டியல், அடையாள அட்டைகளை இறுதி செய்ய வேண்டும். தொழில்நுட்பத்தின் துணையுடன் மேலும் துல்லியமாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
மாறிவரும் காலச் சூழல் களுக்கு ஏற்ப விதிகளும் திட்டமிடல்களும் தேர்தல் அட்டவணையும், வாக்கு எண்ணிக்கைக்கான காத்திருப்பும் மாற வேண்டி யது அவசியம். ஜனநாயக கடமையாற்றுவது மக்களின் உரிமை. அவர்களின் உரிமைகள் மதிக்கப்படும் வகையில் தேர்தல் ஆணையம் நேர்மையாக திறமையாகச் செயல்படுவதே ஜனநாயகத்திற்கு பெருமை சேர்ப்பதாய் அமையும். இது போன்ற விதிமீறல்கள் , குளறுபடிகள் நடக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்”என்று வலியுறுத்தியுள்ளார் கமல்ஹாசன்.
-ராமானுஜம்
கருத்துகள் இல்லை