பிரான்சு எவ்றி குக்குரோன் மாநகரில் மே18 கவனயீர்ப்பு நிகழ்வு!

 


பிரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்புப் போராட்டமும் பல மாவட்டங்களில் நினைவேந்தப்பட்டு வருகின்றன.

இன்று 14.05.2021 வெள்ளிக்கிழமை 91 மாவட்டம் எவ்றி குக்குரோன் (Evry courcouronne) மாநகரத்தின் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினரால் மாநகரசபை முன்பாக இன்று காலை 11.00 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கத்துடன் கவனயீர்ப்பு ஆரம்பமாகியது.

நிகழ்வின் தொடக்கத்திலேயே இப்பிரதேசத்தின் துணை முதல்வர் Pascal CHATAGNON மற்றும் மாநகரசபை பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவரும், தமிழ்ச்சங்கங்களின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளருமான திரு. பாலகுமாரன் தாயகத்தில் 12 ஆண்டுகள் சென்ற நிலையிலும் சிங்களம் தொடர்ந்தும் தமிழினப்படுகொலையை பல்வேறு வடிவங்களில் நடாத்திவருவதையும், நேற்று முன்தினம் தமிழ்மக்களின் இனவழிப்பு நினைவுச்சின்னத்தை அடித்து உடைத்ததையும் தொடர்ந்தும் தமிழ் மக்களை மனவுழைச்சலுக்குள் துன்பத்திற்குள் வைத்திருப்பதையும் தெரிவித்திருந்தார். காலநிலை இன்று மழைபெய்த போதும் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினரும், இளையோர்களும் அங்கு வாழும் தமிழ்மக்களும் அருகில் உள்ள தொடருந்து நிலையம் முன்பாகவும், சனநடமாட்டம் கொண்ட இடத்திலும் நின்று துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.


இப்பிரதேசத்தில் மாநகரசபைத் தேர்தலில் சிறுவர் ஆலோசகராக 2018இல் ((Conseillers municipaux enfants) தெரிவுசெய்யப்பட்ட சிறுமி லெனிசா பாலகுமாரன் அவர்களும் கலந்து துண்டுபிரசுரங்களை மக்களுக்கு வழங்கியிருந்தார். இப்பிரதேச முதல்வர்கள் கடந்த சுனாமி நேரத்திலும் ஏனைய இடர் ஏற்பட்ட காலத்திலும் தமிழீழ தாயகத்திற்கு உதவி செய்யதவர்கள் என்பது குறிபிடத்தக்கது இந்தத் தடவையும் தம்மால் முடிந்த உதவியை செய்ய முன்வந்துள்ளதாகவும் துணை முதல்வர் தெரிவித்திருந்தார். 13.30 மணிவரை இக்கவனயீர்ப்பு நடைபெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.