நெருக்கடியில் தனுஷ்

 


நடிக்க நேரம் கிடைக்கிறதோ இல்லையோ, படத்தை ஒப்பந்தம் மட்டும் செய்துகொண்டே செல்கிறார் தனுஷ். இந்த வருடம் தனுஷூக்கு மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் , கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம் படங்கள் வெளியானது. அதோடு, மூன்று புதுப் படங்களையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் `நானே வருவேன்`, மாரிசெல்வாஜ் இயக்கத்தில் மீண்டுமொரு படம் மற்றும் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கும் படம். இவற்றில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகிவரும் `டி-43` படத்துக்குப் பிறகு துவங்க வேண்டிய படம் செல்வராகவனின் `நானே வருவேன்`. ஆனால், அடுத்தடுத்து இரண்டு புது அறிவிப்பு செல்வராகவனையும், தயாரிப்பு நிறுவனத்தையும் கலக்கம் கொள்ள வைத்திருக்கிறது.

ஏனெனில், தெலுங்கில் தனுஷ் நடிக்கப் போகும் படத்தின் பட்ஜெட் மட்டுமே 125 கோடி என்கிறார்கள். அதோடு, தனுஷூக்கே 25 கோடி சம்பளம். தனுஷ் பெறும் அதிகமான சம்பளமாக இது இருக்கிறதாம். அதனால், செல்வராகவன் படத்தை ஓரம் கட்டிவிட்டு தெலுங்கு படத்தை தனுஷ் துவங்குவார் என்றெல்லாம் தகவல் வெளியானது.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான செல்வராகவன் ட்விட்டரில்,` ஏமாற்றங்களை சகித்துக் கொண்டால் கவலைப் பட என்ன இருக்கின்றது?` என்று பதிவிட்டு சூட்டைக் கிளப்பினார். அப்பட்டமாக, தனுஷை மனதில் வைத்தே இந்தப் பதிவு என்று சொல்லப்பட்டது.

இன்னும் தாமதிக்கக் கூடாதென, `நானே வருவேன்` படமானது ஆகஸ்ட் 20ஆம் தேதி படப்பிடிப்புடன் துவங்குகிறதென, பட அப்டேட்டை தனுஷின் பார்வைக்கே செல்லாமல் வெளியிட்டிருக்கிறார்கள். படப்பிடிப்பு தேதி முன்னரே திட்டமிட்டதென்பதால், அறிவிப்பை முதல் ஆளாக வெளியிட்டுவிட்டார் தயாரிப்பாளர் தாணு. இதனால், தனுஷின் தெலுங்கு திட்டத்துக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

- ஆதினி


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.