அங்கர் வெண்ணெய் பொதியிலும் தமிழ் மொழி புறக்கணிப்பு!!

 


இலங்கையில் தயாரிக்கப்படும் அங்கர் வெண்ணெய் பொதியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பொதியில் சிங்கள மற்றும் சீன (மாண்டரின்) மொழிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஃபோன்டெர்ரா பிராண்ட்ஸ் லங்கா நிறுவனத்தின் தயாரிப்பே அங்கர் வெண்ணெய் பொதியாகும்.

இந்த விவகாரம் குறித்து கொழும்பு ஊடகமொன்று கேள்வியெழுப்பிய போது,

“இலங்கையின் விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்குகிறோம். பொதியில் பயன்படுத்தப்படும் மொழிகள் குறித்த சமீபத்திய கவலைகளை நாங்கள் புரிந்துகொண்டு உணர்கிறோம்” என்று ஃபோன்டெரா பிராண்ட்ஸ் லங்கா கூறியுள்ளது.

அங்கர் வெண்ணெய் என்பது பல நாடுகளில் சந்தைப்படுத்தும் தயாரிப்பு ஆகும், இது நியூசிலாந்திலிருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று ஃபோன்டெரா பிராண்ட்ஸ் லங்கா குறிப்பிட்டுள்ளது.

“அதே பொதி இலங்கைக்கும் கிடைக்கிறது. எனவே, தயாரிப்பு பொதியில் இந்த நாடுகளில் பொதுவாக பேசப்படும் மொழியை உள்ளடக்கியுள்ளோம். நாங்கள் பன்முகத்தன்மையை மதிக்கிறோம், எங்கள் வாடிக்கையாளர் தேவைகளை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக வைக்கிறோம், ”என்று ஃபோன்டெரா பிராண்ட்ஸ் லங்கா கூறியுள்ளது.

அங்கர் வெண்ணெய் தயாரிப்பில் காட்டப்பட்டுள்ள லேபிள் குறித்து இதுவரை எந்த முறைப்பாடும் தமக்கு அளிக்கப்படவில்லை என்று இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் சாந்த திசானநாயக்க, “தயாரிப்பை வாங்கிய நுகர்வோர் புகார் அளித்தவுடன், இது குறித்து உடனடியாக விசாரணை தொடங்கப்படும்“ என்றார்.

அண்மைக்காலமாக இலங்கையில் பெயர்ப்பலகைகளில் சிங்களத்துடன், சீன மொழியே இடம்பெறுவதும், தமிழ் புறக்கணிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.