நான்கு மெழுகுவர்த்திகள்!!
ஒரு இருட்டு அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன. அவை ஒன்றோடொன்று பேசி சிரித்தபடி மகிழ்ந்து இருந்தன.
அப்போது அந்த அறையின் சன்னல் வழியாக காற்று வீசத் தொடங்கியது.
அதனைக் கண்ட நான்கு மெழுகுவர்த்திகளும் அச்சமடைந்தன.
அந்த நான்கு மெழுகுவர்த்திகளுள் அமைதி என்ற மெழுகுவர்த்தி, காற்று வீசுகிறது... நான் அணைந்துவிடுவேன் போலிருக்கிறது என்றது.
அடுத்து வீசிய காற்றில் அந்த மெழுகுவர்த்தி அணைந்து போனது.
இரண்டாவதாக, அன்பு என்ற மெழுகுவர்த்தி, காற்றை எதிர்த்து என்னாலும் ஒளி தரமுடியாது, நானும் அணைந்து போய்விடுவேன் போலிருக்கிறது என்று சொன்னது.
அடுத்து வந்த காற்றில் இரண்டாவது மெழுகுவர்த்தியும் அணைந்து போனது.
இரண்டு மெழுகுவர்த்திகள் அணைந்து போனதைக் கண்ட அறிவு எனும் மூன்றாவது மெழுகுவர்த்திக்கும் பயமேற்பட்டது. தன்னாலும் காற்றினை எதிர்க்க முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தது.
அப்போது வந்த காற்றில் மூன்றாவது மெழுகுவர்த்தியும் அணைந்தது.
மூன்று மெழுழுகுவர்த்திகள் அணைந்து விட்ட நிலையில், அதற்கடுத்து வந்த காற்றினை எதிர்த்து நான்காவது மெழுகுவர்த்தி சிறிது நேரம் போராடியது. அந்தப் போராட்டத்திற்குப் பின்பு அந்த மெழுகுவர்த்தி பிரகாசமாக எரிந்தது.
அப்போது அந்த அறைக்குள் நுழைந்த சிறுவன், நான்கு மெழுகுவர்த்திகளுள் மூன்று அணைந்து போய்விட்டதே... என்று வருத்தப்பட்டான்.
அதனைக் கண்ட நான்காவது மெழுகுவர்த்தி அவனிடம், “தம்பி, கவலையடையாதே... நானிருக்கிறேன்... என்னைக் கொண்டு மற்ற மூன்று மெழுகுவர்த்திகளையும் எரிய வைத்துவிடலாம்” என்றது.
அதனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த சிறுவன், அந்த மெழுகுவர்த்தியிடம் உன் பெயரென்ன என்று கேட்டான்.
அந்த நான்காவது மெழுகுவர்த்தி ‘தனது பெயர் நம்பிக்கை’ என்று சொன்னது.
உடனே அந்தச் சிறுவன், நான்கு மெழுகுவர்த்திகளுள் நீ மட்டும் எப்படி அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறாய் என்று இப்பொழுதுதான் தெரிகிறது என்றான்.
ஆமாம், நம்பிக்கை என்று ஒன்றிருந்தால், நாம் வாழ்க்கையில் எதையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெறலாம்...
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #W orld News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை