ஆவேசம் - சிறுகதை!!

 


கன்னடம்: டாக்டர் பி. டி. லலிதா நாயக்  தமிழ்: முனைவர் க. மலர்விழி & மதுமிதா


இயற்கை நெருப்பை உமிழ்வது போல, மொத்தச் சுற்றுப்புறமும் வெயிலில் அனலாய்க் கொதித்துக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் விரிசலும் வெடிப்புமாய் உலர்ந்து கிடக்கின்ற தரை. மறுகணமே வெடித்துவிடுமோ என்று தென்படுகின்ற கரும்பாறைகள்.


இவைகளுக்கு இடையில், தானும் ஒரு எரிகின்ற கொள்ளியாக, தன்னுடைய இடதுபுறத் தோள் மீது கோடரியை வைத்துக் கொண்டு வேகவேகமாய் நடந்து கொண்டிருந்தாள் ’ராமி’.


ஒவ்வொரு அடிக்கும், அவளது கால் கொலுசின் சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தாலும், அவளுக்கு அதில் கவனமில்லை. தன்னுடைய கொலுசின் சத்தத்துக்குத் தானே புல்லரித்துக் கொண்டிருந்த காலம் ஒன்றும் முன்பு இருந்தது.


ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அவள் ‘கீரு’வைக் கைப்பிடித்த போது, அது போன்ற சுகத்தை அனுபவித்திருந்தாள். தாய் வீட்டில் கொடுத்த சில வெள்ளி நகைகளை அணிந்து கொண்டு மகிழ்ச்சியுடன் ஓடித் திரிந்து கொண்டிருந்தாள். சந்தோஷமாக இருந்த காலத்தில் நிகழ்காலத்தைத் தவிர, தவறியும் இறந்த கால,எதிர்காலங்களை அவள் சிந்தித்தும் பார்த்ததில்லை.


வருடங்கள் உருண்டன. அவள் மீண்டும் மீண்டும் கர்ப்பமாகி, பிரசவித்து நாலைந்து குழந்தைகளுக்குத் தாயுமானாள்.


அவளுக்குள் இருந்த பொங்கிப் பெருகும் சுக உல்லாச ஊற்றொன்று, இருந்ததற்கான அடையாளமே இன்று இல்லை. அது காணாமல் போய்விட்டது. அது அவளிடம் இப்போது இல்லையென்ற கவலையும் அவளுக்குத் தோன்றவில்லை.


மனைவியை அடித்து உதைத்துத் தொல்லை கொடுக்கும் வேறு கணவன்மார்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, கீரு அவர்களை விட எவ்வளவோ நல்லவன்.


அதிகமாக கோபம் வந்தபோது தவிர, வேறு ஒரு போதும் அவன் அவள் மீது கை வைத்ததில்லை. சொந்த நிலம் இல்லாததால், கூலி வேலைக்குப் போய் மனைவி, குழந்தைகளுக்கு வயிறாரச் சோறு போடக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான்.


ராமி ஐந்தாவது பிரசவத்தில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பிறகு, இனி குழந்தை பிறந்துவிடும் என்ற பதற்றம் இல்லாமலிருந்தது. இனி இருவரும் சேர்ந்து குழந்தைகளை வளர்க்கலாம் என்று தைரியம் உண்டானது. ஆறு மாதக் குழந்தைக்கு வயிறு நிறைய தாய்ப்பால் ஊட்டி, எட்டு, ஒன்பது வயது நிரம்பிய மூத்தமகளிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு கணவனுடன் கூலி வேலைக்குப் போவாள்.


அந்தக் காலம் கழிந்து, குழந்தைக்கு ஒன்றரை வயது ஆகியது. தாயின் தாய்ப்பால் அதற்குப் போதவில்லை. சாப்பிடுகின்ற ஆறு, ஏழு வாய்களில் இதுவும் ஒரு வாயாகக் கூடியது. இப்படி இருக்கையில், சாப்பிடுவதற்கானக் கணக்கும் அதிகமானது, உழைக்கும் கையோ முறிந்து மூலைக்குப் போய்ச் சேர்ந்தது.


கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு கீரு, பண்ணையார் நிலத்திற்கு உரம் போட ஒத்துக் கொண்டிருந்தான். குப்பை மேட்டிலிருந்து ஒரு மைலுக்கு அப்பால் இருக்கும் நிலத்திற்கு, நெடுஞ்சாலை வழியாகப் போக வேண்டியிருந்தது. வண்டியில் இருக்கும் உரத்தைக் கொட்ட எட்டு, பத்து அடி தூரம் இருக்கும் போது பின்புறமிருந்து வந்த ஒரு லாரி, வண்டியின் ஒரு பகுதியில் இடித்து வண்டியை உருட்டித் தள்ளிவிட்டு வந்த வேகத்தில் முன்னால் போய்விட்டது.


மயக்கமடைந்து கீழே விழுந்து கிடந்த கீருவை, பண்ணையார் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, முதலுதவி செய்து, வீட்டில் விட்டுவிட்டு, தன்னுடைய வேலை முடிந்ததென்று கை கழுவிக் கொண்டார். பக்கவாட்டு விலா எலும்புப் பகுதியில் வலி என்று வேதனைப்பட்ட கணவனை, ராமி மருத்துவரிடம் அழைத்துக் காட்டியபோது ‘அந்த விலா எலும்பு முறிந்திருக்கலாம், இங்கே வெச்சிருந்தால் குணமாகாது, பட்டணத்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போங்கள்’ என்று ஆலோசனை சொன்னார்கள். ராமிபண்ணையாரின் காலைப் பிடித்து உதவிக்காகக் கெஞ்சினாள்.




"சரி விடு. நீ சொல்றாப்படி அவனுக்கு நல்லபடியானால், என் வீட்டில் வேலை செய்து தீர்ப்பான். ஆனா செத்துப் போனால் யார் தீர்ப்பாங்க? நீயோ புள்ள குட்டிங்களோட இருக்கிற. அவங்களப் பாத்துக்கறதே போதும் போதும்னு ஆயிடும். இனி என் கடனோட கதி என்ன?"


"எப்படியாச்சும் தீர்த்துடறேன்யா. இந்தக் கஷ்ட காலத்துல கைகுடுங்க அய்யா!" என்று ராமி பலவிதமாகக் கெஞ்சியது வீண் புலம்பலாகி, பண்ணையாரிடமிருந்து திட்டு வாங்கித் திரும்ப வேண்டியதாகி விட்டது...


தன் முன்னால் இருக்கும் பாதை இரண்டாகப் பிரிந்திருப்பதைப் பார்த்த அவள் நடையை நிதானப்படுத்தி யோசிக்கத் தொடங்கினாள்.


எந்த வழியைத் தொடரட்டும்? நதியின் கரைக்கா அல்லது மலைப்பகுதிக்கா? எதையும் சீக்கிரமாக முடிவு செய்யமுடியாமல், அவள் குழப்பத்தில் இருந்தாள். இதுவரையிலும் அவள் என்றும் தனியாக மலையோரக் காட்டுக்குப் போனதில்லை.


‘தாண்டா’ (லம்பாடிகள் இருக்கும் பகுதி) பெண்கள், ஆண்கள் ஒன்றாகப் புறப்படும் போது அவளும் அவர்களுடன் போய் விறகுக்கட்டை கட்டிக்கொண்டு கூட்டத்தோடு திரும்புவாள். ஆனால், இன்று இந்த நேரம், கூட இருந்தவர்களெல்லாம், விறகுக்கட்டைக் கட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டனர்.


சிலர், அச்சமயத்தில் நகரத்துக்குப்போய் விறகுக்கட்டை விற்றுவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.


‘தாண்டா’ பகுதியின் அருகில் யாரோ ஒருவன் வேகமாக வந்து கொண்டிருப்பதைப் போலத் தெரிந்த போது, மலைப்பக்கம் போகிறவனாக இருப்பானோ என்ற நம்பிக்கையில் அந்தப் பக்கம் வைத்த கண் இமைக்காமல் பார்க்கிறாள்.


வந்து கொண்டிருப்பவன், ‘காளு’ என்பதை அறிந்து அவள் முகம் ஓரளவுக்கு மலர்ந்தது. ஆனால், அவனுடைய கையில் கோடரி இல்லாததைப் பார்த்து அவள் ஏமாற்றமடைந்தாள்.


"என்ன தங்கச்சி. ஒத்தையில போற? விறகு எடுத்துட்டு வரவா?" என்று காளு விசாரித்தான்.


"என்ன செய்வேன் அண்ணா. என் தலையெழுத்து படுமோசமா இருக்கே. அவருக்கு வேற இன்னும் ஒடம்பு சரியாகல. பக்கவலிக்கு ஒரேயடியா புலம்பிட்டிருக்கான். சின்ன குழந்தைக்குக் காய்ச்சல். அதுக்குதான் காலம்பற எல்லோரோடயும் சேர்ந்து போகமுடியல. தனியாக் கிளம்ப வேண்டியதாகிடுச்சு" என்று தன்னுடைய வேதனையை அவனிடம் சொன்னாள்.


"ஒலகத்துல யாரும் வண்டியிலயிருந்து கீழே விழறதில்லியா தங்கச்சி. நல்லாஇருந்த மோட்டர் வண்டியிலிருந்து விழுந்தப்ப கூட, ஒரு வாரத்தில சரியாகி ஏர் ஓட்டிட்டிருக்கான் அந்த பீமப்பனோட புள்ள. இவனுக்கு என்ன ஆச்சுங்கறேன்"


"எப்படித்தான் இது நடந்ததோ தெரியல, பெரிய ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போலாம்னா கையில பணம் வேற இல்ல. பண்ணையாருட்ட கேட்கப்போனா திட்டி அனுப்பிட்டாரு"


"ஒடம்பு முறிய வேலை செஞ்சவங்களுக்குக் கூட பணம் குடுக்கமாட்டேங்கறான் அந்த எம் மவன். இனி ஒனக்கு எப்பிடி குடுப்பான். சரி விடு. எப்படியாவது போகட்டும். ‘சேவாலாலனுடைய கோயிலுக்குப் போயி கீருவுக்கு ஒரு விபூதி பிரசாதம் வாங்கிக்குடு. எங்க தாத்தா, கொள்ளுத்தாத்தா எல்லாம் ஒடம்பு சரியில்லைன்னா ஆசுபத்திரிக்கா போயிட்டிருந்தாங்க. எந்த நேரமா இருந்தாலும் அந்த சாமிட்டதான் போயி நிப்பாங்க. அப்படித்தான் இல்லியா"


’இப்ப நான் கூட அததானச் செய்திருக்கேன் காளண்ணா. வரப்போற அமாவாசக்கி ‘கத்யம்மா’க்கு ஒரு சேவல் குடுக்கிறேன்னு நேர்ந்துட்டிருக்கேன்.‘மடதய்யா’ வுக்கு காணிக்கை முடிச்சுக் கட்டியிருக்கேன்’


‘பாபண்ணன் கிட்ட கொஞ்சம் மந்திரம் போட வெச்சிடு தங்கச்சி. பேய்… கீய்… புடிச்சிருக்கோ என்னமோ...’ என்று அவன் மற்றொரு புது யோசனை கூறிய போது அவள் அதை நிராகரிக்கும் சூழ்நிலையில் இருக்கவில்லை. ஏற்கனவே, தன்னுடைய மூக்கில் இருந்த புல்லாக்கைக் கணவனுக்காக விற்று விட்டாள். இப்போது இருப்பது இது ஒன்றுதான் என்று தன் கால் கொலுசைப் பார்த்தாள்.


"ரோடு போடுற வேலை ஆரம்பிக்கும்னு அன்னிக்கு நீ சொன்னியே அண்ணா?" என்று அவள் கேட்ட போது,


"வரப்போற திங்கக்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப் போறாங்க. அதப்பத்திக் கேக்கத்தான் மேஸ்திரியப் பாக்கப் போயிட்டிருக்கேன். எத்தனை ஆளு வேணும்னு கேட்டு பேர் குடுத்துட்டு வரேன்" என்றான் ‘காளு’.


"அப்படின்னா ஒனக்கு புண்ணியமாப் போகும். என் பேரையும் குடுத்துட்டு வாங்கண்ணா. என் பாடு என்னான்னு ஒனக்கு நல்லாவே தெரிஞ்சிருக்குதே" என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாள்.


"ஏன் நீ சொல்லாட்டா எனக்குத் தெரியாதா தங்கச்சி. நம்மள மாதிரி இருக்கிற ஏழைங்களோட தலையெழுத்தெல்லாம் இவ்வளவுதான் பாரு. ஏழுமலையச் சுத்தி ஒரு சின்ன துணுக்கு ரொட்டிய எட்டிப் பாக்க வேண்டியிருக்கு" என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே, "நீ என்ன இப்ப நதியோரத்துக்குப் போயிட்டிருக்கியா?" என்று கேட்டான்.




"இல்லைண்ணா. மலைப்பக்கம் போலாம்னு நெனைக்கிறேன்’ என்று அவள் கூறியவுடனே, காளு பதற்றத்தோடு கூறினான், "வேண்டாம் தங்கச்சி. தனியா அங்க போகாத. காட்டுக்கு ஓநாய், நரி, கரடி எல்லாம் வருதாம். மனுஷன புடிச்சி எடுத்துட்டுப் போக ஆரம்பிச்சிருச்சின்னு ஜனங்க பேசிக்கறாங்க. இந்த ரத்னி பாயி, தீரா பாட்டி எல்லாரும் கண்ணால பாத்துட்டு வந்திருக்காங்களாம்! சும்மா நதி ஓரத்துக்கு மட்டும் போ" என்று ஆலோசனை சொல்லி அவன் தன் வழியேப் போய்விட்டான்.


ராமி மறுபடியும் குழப்பத்துக்குள்ளானாள். அருகில் இருக்கும் நதிக்கரைக்குப் போனால் பருத்த விறகுக்கட்டைகள் கெடைக்காது, வெறும் சின்னஞ்சிறு சுள்ளிகளை மட்டும் பொறுக்கி வரணும். வாங்குகிற கிராக்கிகள் அதை ஒன்றிரண்டு ரூபாய்க்கு மேல வெலைக்குக் கேக்குறதில்ல. அவ்வளவு கம்மிப் பணத்துல சோளத்த எப்பிடி வாங்க முடியும். உப்பு, மிளகுக்குக் கூட பத்தாது. மலைப்பக்கமா போனா, தடிமனான பருத்த வெறகு கொண்டுட்டு வரலாம். ஐந்து ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம்! நரி, கரடின்னு வேற பயமுறுத்தறாங்களே. பட்டப்பகல்ல அவை நம்மள என்ன செய்ய முடியும்? அப்படி எதையாவது பார்த்தால், ஓடி வந்துட்டால் முடிஞ்சது. ராமி திடமாக முடிவு எடுத்துவிட்டு, சரசரவென நடக்க ஆரம்பித்தாள்.


அவளுக்கு நன்றாகத் தெரிந்த பாதை அரைமணி நேரத்தில் முடிந்து, காய்ந்து போன நிலத்தில் சின்னஞ் சிறு செடி கொடிகள் தெரிந்தன. உயர உயரமாக வளர்ந்து நின்ற வெவ்வேறு வகையான மரம், செடி, முள்வேலி, முட்புதர்கள் அதிகமாகத் தெரிந்தது. அவளின் நடை நிதானமானது. வளைந்து நெளிந்த, மேடு பள்ளம் உள்ள கடினமான பாதையை அதிஜாக்கிரதையாகக் கடந்து, நல்ல விறகுக்கட்டையாகத் தேடத் தொடங்கினாள்.


அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடக்கும் கண்ணில் பட்ட விறகுத்துண்டுகளை மகிழ்வோடு சேகரிக்கத் தொடங்கினாள். பெரிய புதரின் அருகில் செல்லரித்த உலர்ந்த மரம் ஒன்றைக்கண்டு வேகமாக அதன் அருகில் போனாள். கைக்கு எட்டும் கிளைகளையெல்லாம் கோடரியால் வெட்டி வெட்டி ஓரிடத்தில் குவிக்கும் போது, புதருக்குள் ஏதோ மிருகம் ஒன்று நடந்தது போல் தோன்றியதைக் கண்டு, அவளுடைய இதயத்துடிப்பு இரட்டிப்பானது.


பயத்தால் பின்னால் குதித்து, கண்ணைப் பெரிதாக்கிப் பார்க்கிறாள். உடல் முழுவதும் அடர்த்தியான ரோமம் நிறைந்த ஆளுயர மிருகம் ஒன்று அவளை நோக்கிப் பார்க்கத் தொடங்கியது! ராமியினுடைய முழு தைரியமும் ஒடுங்கிப் போனது. தொண்டை வறண்டு உடலெங்கும் வேர்த்துக் கொட்டியது. குரல் கொடுப்பதற்கோ, ஓடுவதற்கோ இயலாமல் நடுங்கி நின்றாள்.


கரடி மனுஷங்களைப் பார்த்தாச் சும்மாவிடாது. ஆனா ஆண் கரடி கைக்கு பொண்ணுங்க யாராவது மாட்டிக்கிட்டா அவ்வளவுதான் கத. அது மானபங்கப்படுத்திப் படுத்தியே சாகடிச்சுடும்!’ என்று மக்கள் கூறியதைக் கேட்டு அறிந்திருந்த அவளுக்கு, தனக்கே அந்த துர்மரணம் அருகில் வந்துவிட்டதோ என்னும் முடிவுக்கு வந்தாள். மக்கள் கூறியிருந்த அறிவுரையைக் கேட்டிருக்க வேண்டும். பட்டினி கிடந்திருந்தாலும் பரவாயில்ல. தன்னந்தனியே இங்கே வந்திருக்கக்கூடாது என்று தனக்குள்ளேயேப் புலம்பிக் கொண்டாள்.


ஒரு குடிசையின் மூலையில் சுருண்டு படுத்துக்கிடக்கும் கணவன், தன் வருகைக்காக வாசலில் பசித்து உட்கார்ந்திருக்கும் ஏழைப் பிள்ளைகளை நினைத்து அவளின் கண்கள் ஈரமாயின. கரடி தன் மீது பாய இருப்பதை அறிந்தவுடன், ராமி எச்சரிக்கையானாள். தனது குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காவது தான் வாழவேண்டும் என்ற ஆசை அவளை அங்கிருந்து தப்பித்துக்கொண்டு ஓடத் தூண்டியது.


பிடியிலிருந்து நழுவும் கோடரியைத் தோளில் போட்டுக்கொண்டு ஊரை நோக்கித் திரும்பி ஓடத் தொடங்கினாள்.


அந்தச் சமயத்தில் நகரத்து நாகரீக இளைஞனைப் போலத் தோற்றமளிக்கும் ஒருவன் மிக அருகில் வருவதைப் பார்த்ததும், அவளுக்குச் சற்றே தைரியம் வந்தது. ‘அய்யோ! அப்பா! கரடி!’ என்று சத்தமாகக் கத்தினாள். அதைக் கேட்ட இளைஞன் உடனே அங்கேயே நின்று, கரடி அவள் அருகில் வருவதைப் பார்த்துத் திகைத்தாலும், கணநேரத்தில், சுதாரித்துக் கொண்டு, தன்னுடைய பேண்ட் பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியை எடுத்து உடனே நெருப்பைப் பற்ற வைத்தான். தோள்பையிலிருந்து வெளியேத் தொங்கிக் கொண்டிருந்த பத்திரிகை ஒன்றை வெளியில் எடுத்து அதற்கு நெருப்பை வைத்தான். காகிதம் சடசடவென பற்றிக் கொண்டது.


கண் இமை மூடுவதற்குள் கரடி எங்கோ மாயமானது. ராமி புனர்ஜென்மம் அடைந்தது போல் பெருமூச்சு விட்டாள். "எனக்கு நீ சாமியப் போலவே வந்தே. இல்லைன்னா இன்னிக்கு என் கத முடிஞ்சிருக்கும்!" என்று கூறியவாறே கை கூப்பினாள்.


"தனியா வந்தியா. இல்ல, கூட யாராவது வந்திருக்கிறாங்களா?" என்று அவன் கேட்டபோது, உண்மையைச் சொல்லலாமா வேண்டாமா என்று அவள் மனம் குழம்பியது, இவனுடைய முகத்தைப் பார்த்தால் நல்லவனாகத் தோணுது உண்மையைச் சொல்லலாமென்று எண்ணி,


"ஒத்தையிலதான் வந்திருக்கிறேனுங்க, என் வீட்டுக்காரருக்கு ஒடம்பு சரியில்லாத காரணத்தாலதான் அவரு என் கூட வரல" என்று காரணம் கூறினாள்.


அவன் நாக்கால் ’உச்’ சுக்கொட்டி அவளை பரிதாபமாகப் பார்த்து, ‘‘உன் கணவனுக்கு என்ன வியாதி?” என்று வினவிய போது,’ நீங்க டாக்டராங்க ஐயா?’ என்று மறுகேள்வியைக் கேட்டாள் ராமி.


‘இல்லம்மா. நான் டாக்டர் இல்ல. நான் ஒரு பத்திரிக்கை நிருபர். இந்த மலைப்பிரதேசத்தைப் பார்க்க வந்தேன்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். ராமியை ஓரிரு போட்டோ எடுத்துக் கொண்டான். ’அதைக் கொண்டு போய் என்ன செய்வீங்கய்யா’ என்று ராமி கேட்டபோது,’பேப்பரில் போடுவோம். ஒங்களைப்போல ஏழைமக்களின் சுக, துக்கங்களை அறிந்து அதைப் பேப்பரில் எழுதுவது எங்களின் வேலை. சில சமயங்களில் இது அரசாங்கத்துடைய கவனத்துக்கு வந்து, உங்களுக்கு ஏதாவது சலுகைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கு!’ என்று அவன் விவரித்த போது, ராமிக்கு அவன் மீது மரியாதை ஏற்பட்டது. தன் குடும்பத்தில் எப்போதும் உள்ள கஷ்ட சங்கடங்களை அவனிடம் மனம் திறந்து கூறினாள்.


"உன் கணவன் - கீரு - பண்ணையார் நிலத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது விபத்து நடந்ததால், அவனே (பண்ணையாரே) நஷ்ட ஈடு கொடுத்துக் காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால், பண்ணையார் குற்றவாளி ஆவான். இதையெல்லாம் நான் பத்திரிகையில் எழுதுகிறேன். நீ கவலைப்படவேண்டாம்!" என்று அவன் தைரியமளித்தபோது,


இன்றிலிருந்து தன்னுடைய கஷ்டங்களெல்லாம் தீர்ந்தது போல எண்ணி ராமியின் மனம் லேசானது.


அவள் விறுவிறுப்பாக விறகை சேகரித்துப் பெரிய கட்டாகக் கட்டியதை, பத்திரிகை நிருபர் மிகுந்த சிரமத்துடன் அவளுடைய தலையின் மேல் ஏற்றி வைத்தான்.




அவள் நன்றியோடு கைகூப்பி அவனை விட்டுத் திரும்பி வந்தாள். இரண்டு பேர் தூக்க வேண்டிய சுமையை அவள் சுமந்திருந்தாலும், அவளுடைய முகத்தில் ஆயாசத்தின் சுவடு கூட தெரியவில்லை. 'அந்த பத்திரிகை எழுதற மனுஷன் வரலைன்னா இந்த பேய் சுமைய நான் ஒருத்தியே தலையில தூக்கி வெச்சிருக்கமுடியாது. எங்கேருந்துதான் வந்தானோ புண்ணியவான் சாமி போல... அவனுடைய பொஞ்சாதி புள்ளைங்க நல்லாருக்கணும். இன்னிக்கு இந்த சுமைய அஞ்சு ரூபாய்க்கு கம்மியாக் குடுக்கவேக் கூடாது. கடையிலேருந்து ரெண்டு கிலோ சோளம் வாங்கி, சுண்ணாம்பு போல நைசா மாவரச்சி புருஷன் புள்ளைங்களுக்கு வெள்ளையா ரொட்டி தட்டிக் குடுக்கணும். காலணா பணங் குடுத்து வெள்ளைப்பூண்டு வாங்கணும். புருஷனுக்கு பூண்டு காரம்னா ரொம்பஇஷ்டம்... அப்படியே பணம் மிச்சமானா ஒரு அரை பாட்டில் சாராயத்தை வாங்கிட்டுப் போகணும். அதைக் குடிச்சிட்டுப் படுத்துட்டால் ஒடம்பு வலியெல்லாம் போயிடும். பாவம்! அப்படியாவது கொஞ்ச நேரம் வலி மறக்கட்டும்!’


சட்டென்று அவளுக்கு எதிரில் இரு மனிதர்கள் குறுக்கே வந்து நின்று,’ஏய்! தலயில இருக்குற சுமயக் கீழே போடு’ என்று சத்தமான குரலில் கட்டளையிட்ட போது, ஆகாயத்தில் ரெக்கை விரித்துக் கொண்டிருந்த பறவை, அரை கணத்தில் ரெக்கை முறிந்து தரையில் விழுவதைப் போல ராமி அழகான கற்பனை உலகத்திலிருந்து யதார்த்த உலகுக்கு வந்தாள்.


கழுத்துவரை முடியை விட்டு, அடர்த்தியான தாடி, மீசையோடு, பூப்போட்ட சட்டை, தொள தொள பேண்ட் அணிந்திருந்த அந்த நடுவயது ஆண்கள் இருவரும் குடித்திருந்ததால், போதை ஏறி அவளையே விழுங்கி விடுவதைப் போல் பார்ப்பதைக் கண்டு, இரண்டாவது முறையாக கரடியைப் பார்த்ததைப் போல ராமி பயந்து அலறினாள்.


‘என்ன பாத்துட்டிருக்கிறே? சுமைய எறக்கி கீழே போடுன்னு சொன்னது கேக்கலியா?’ என்று மற்றுமொருமுறை அரட்டியபோது, ‘ஏன் கீழ போடணும்? இருட்டாகிட்டு வருது. சீக்கிரமா நான் வீட்டுக்குப் போகணும்’ என்று சுமையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு கூறினாள்.


"இலவசமா இந்த மரத்த வெட்டி, ‘ம்ம்ம்’ கொட்டி, கட்டு கட்டறே.


சீக்கிரமா வீட்டுக்குப் போகாம என்ன செய்துகிட்டிருக்கிறே?" என்றவாறே ஒருத்தன் அவள் சுமந்திருந்த கட்டையை இழுத்துத் தரையில் வீசினான். மற்றொருவன் அவள் கையிலிருந்த கோடரியைப் பிடுங்கிக் கொண்டான்.


"தினமும் இப்படி வந்து வந்து திருட்டுத்தனமா மரத்தை வெட்டி வெறகு எடுத்துட்டுப் போறீங்களே. குத்தகை வாங்கி இருக்கிற நாங்க என்ன வாயில மண்ணு போட்டுக்கிட்டு போகணும்னு நெனக்கிறீங்களா?" ஒருவன் ரோஷமாக நிந்தித்தான்.


"அய்யோ ரொம்ப ஒண்ணும் வெட்டலைய்யா. கீழே விழுந்து கெடந்ததைத்தான் எடுத்திருக்கிறேன். பத்திரிகையில எழுதற அய்யா இங்கதான் இருக்காங்க. வேணும்னா அவங்கள கேட்டுப் பாருங்க."


"எந்த அய்யாவோட சாட்சியும் வேண்டாம் எங்களுக்கு. எங்க அனுமதி இல்லாம இந்தக் காட்டுக்கு வந்திருக்கிறே; பின்னே கையில இந்தக் கோடரிய வெச்சிருக்கிற; இந்தச் சாட்சி போதும். பணத்த எடு. ஒரு கோடரி எடுத்து வந்ததுக்கு உனக்கு தண்டப்பணம் இருபது ரூபாய். நீ அந்தப் பணத்தைக் கொடுக்கணும். அத கொடுத்துட்டு போ..."


ராமி பயந்தாள். "நாங்க ஏழைங்க அய்யா. இருபது ரூபாய் எங்கிருந்து நான் எடுத்து வரட்டும் அய்யா! இந்த ஒரு வாட்டி பெரிய மனசு பண்ணி விட்டுடுங்க. இன்னொருவாட்டி இந்தப் பக்கம் வரமாட்டேங்க" என்று தீனமான குரலில் வேண்டினாள்.


"விட்டுட்டோம். போ. விறகுக்கட்டையும், கோடாரியையும் தண்டப்பணத்துக்கு எடுத்துக்கிட்டோம்" என்றதைக் கேட்டு அவள் ஆவேசமாய்க் கத்திக் கதறினாள்.


"அய்யய்யோ. உங்கள வேண்டிக் கேக்கறேன் அய்யா. கோடரி என் வலது கையி மாதிரி. கடைசியில அத ஒண்ணையாவது குடுத்துடுங்க நான் போயிடறேன்"


"அதெப்படி போவே. நில்லு. நல்லா ஒரு முயல் வேட்டை கெடச்சிருக்கு. எப்படியும் உலர்ந்த வெறகுயெல்லாம் சேகரிச்சிருக்கிறே. அதில் இந்த முயலசுட்டு சாப்பிட்டு அனுபவிக்கலாமுன்னு"


"ஏய். உன் கால்ல இருக்கே அது வெள்ளியா"


இருவரும் விதவிதமாகப் பேச ஆரம்பித்தபோது ராமி பயத்தால் நடுங்கி நின்றாள்.


"உன்னோட பையையாவது வெளியே எடு. அஞ்சு, பத்து ரூபாயாவது கெடைக்குதான்னு பாக்கலாம்", என்று சொல்லிக் கொண்டே, அவர்கள் இருவரும் அந்தப் பையை இழுக்கும் சாக்கில், அவளுடைய பாவாடையின் நாடாவை அவிழ்த்து, முந்தானையையும் பிடுங்கி வீசினார்கள்.


"விடுங்க. என்னய விட்டுடுங்க’ என்று கூக்குரலிட்டு அவள் மறுத்த போது, ‘நீ இப்படி கத்துனா இந்த கோடாரி வெறகு கட்டைங்களையும் எடுத்துட்டு போயிடுவோம்பாரு" என்று பயமுறுத்தினார்கள்.


"எடுத்தா எடுத்துட்டு போங்க. என்ன விட்டுடுங்க. நான் போறேன்" என்று ராமி கெஞ்சினாள்.


"விடுறதா. அப்படி விடுறதா இருந்தா பிடிச்சே இருக்கமாட்டேன். இந்தக் காட்டுல நீ எவ்வளவு கத்தினாலும் எந்தப் பயனும் இல்ல" என்று அராஜகமாக அட்டகாசமான சிரிப்போடு அவளின் மேல் பாய்ந்து விழுந்தார்கள்.




எத்தனையோ நேரமான போது, ராமி துஷ்டரிடமிருந்து விடுதலையாகி, கஷ்டப்பட்டு எழுந்து தன் கோடரி, விறகு கட்டைகளைத் தேடினாள்.


அவை இரண்டும் மாயமானதோடு அவள் காலின் கொலுசுகளும் காணாமல் போயிருந்தன. ராமியினுடைய இதயம் முழுக்க ரோஷம் தலை தூக்கியது. முஷ்டிகள் இறுகின.


‘நீங்க எந்தக் குகையில போயி மறைஞ்சிட்டாலும் நான் விடமாட்டேண்டா! என்னோட கோடாலியை எப்படியாவது பிடுங்கி, அதால உங்கள சின்னச்சின்ன துண்டு துண்டமா வெட்டின பெறகுதான் நான் வீட்டுக்குப் போவேண்டா’ என்று காடே நடுங்குமாறு கூப்பாடு போட்டுக் கொண்டு அடர்த்தியான காட்டுக்குள் ஓடத் தொடங்கினாள்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.