பிலிப்பைன்ஸ் இராணுவ விமான விபத்தில் பலி எண்ணிக்கை 45 ஆக அதிகரிப்பு

 


பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் போக்குவரத்து விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையை கடந்து சென்று ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் தென் பகுதியில் உள்ள ஜோலோ தீவில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு (கிரீன்விச் சராசரி நேரப்படி காலை 3.30) இந்த விபத்து நடந்துள்ளது.

ஜோலோ தீவில் உள்ள விமான ஓடு பாதையின் எல்லையைக் கடந்து இந்த விமானம் ஓடியபோது இந்த விபத்து நேரிட்டது. அப்போது விமானத்தில் 92 பேர் இருந்தனர்.

விபத்து நடந்த இடத்தில் உடனடியாக 17 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. உயிர் பிழைத்தவர்கள் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறைந்தது 45 என்று பிறகு தெரியவந்தது.

C130 ஹெர்குலஸ் என்ற இந்த விமானம் விபத்தில் சிக்கிய இடத்துக்கு மேலே பெரிய அளவுக்கு கரும்புகை சூழ்ந்தது.

பல கட்டுமானங்கள் உள்ள பகுதிக்கு அருகே, மரங்களுக்கு மத்தியில் விமான பாகங்கள் எரிந்துகொண்டிருப்பதைக் காட்டும் படங்களை அரசு செய்தி முகமை பகிர்ந்துள்ளது.

விபத்து நடந்த இடம் ஜோலோ நகரத்துக்கு சில கிலோ மீட்டர் அருகே அமைந்துள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மின்டானோ தீவில் உள்ள ககயான் டீ ஓரோ என்ற இடத்தில் இருந்து ராணுவத் துருப்புகளை ஏற்றிக்கொண்டு இந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.