மேலுமொரு பதவி உயர்வு பெற்றார் அஜித் ரோகண!!

 


அண்மையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, பொலிஸ் குற்றவியல் மற்றும் போக்குவரத்து விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் சட்ட பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக அஜித் ரோஹன கடமையாற்றிய நிலையில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக அவர் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவிக்கு மேலதிகமாக குற்றவியல் மற்றும் போக்குவரத்து விவகாரங்கள் தொடர்பிலான பிரதானியாக அஜித் ரோஹன நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. இதனிடையே, வடக்கின் பொலிஸ் பிரதானியாக செயற்பட்ட சஞ்ஜீவ தர்மரத்ன அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டு, வடக்குக்கான புதிய பொலிஸ் பிரதானியாக அண்மையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ஒட்டுமொத்த பொலிஸ் திணைக்களத்தினதும் நிர்வாக பிரிவின் பிரதானி பதவி வெற்றிடமாக இருந்த நிலையில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தன ஓய்வுபெற்றதனையடுத்து பொலிஸ் பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் மா அதிபருக்கு அடுத்தபடியாக உள்ள பிரதான பதவியான நிர்வக பிரிவின் பிரதானி பதவி வெற்றிடமாக இருந்த நிலையிலேயே அப்பதவியில் நந்தன முனசிங்க தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வடக்கிலிருந்து இடமாற்றப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ தர்மரத்ன, வட மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் வட மத்திய மாகாண பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹனவிடம் கையளிக்கப்பட்டுள்ள குற்றவியல் மற்றும் போக்குவரத்து விவகார பிரதானியாக இதுவரை கடமையாற்றிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, சமூக பொலிஸ் மற்றும் சூழல் விவகார பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை அண்மையில் பதவி உயர்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு சப்ரகமுவ மாகாணத்தின் பிரதானியாகவும் ஊவா மாகாண பதில் பொலிஸ் பிரதானியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.டி.ஆர்.எல். தமிந்த தென் மாகாண பொலிஸ் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த விஜேசேனவும் அங்கிருந்து மாற்றப்பட்டு அநுராதபுரம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.