மட்டக்களப்பு மண்ணுக்குப் பெருமையும் சிறப்பும்!

 


உலகலாவிய ரீதியில் யுனிசெப் நிறுவனத்தால் நடாத்தப்படும் Cities Inspire awards நிகழ்வுக்கு உலகலாவிய ரீதியில் தெரிவாகியுள்ள 05 மாநகர முதல்வர்களுள் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் அவர்களும் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டு மட்டக்களப்பு மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் Cities Inspire awards நிகழ்வானது எதிர்வரும் நவம்பர் 17ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அந்நிகழ்வில் அன்று உரையாற்றுவதற்காக உலகின் 05 மாநகர முதல்வர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த அந்த நிகழ்வில் உரையாற்றுவதற்காகத் தெரிவு செய்யப்பட்ட ஐவருள் ஒருவராக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபன் அவர்களும் தெரிவாகியுள்ளார்.

யுனிசெப் நிறுவனத்தின் சிறுவர் நேய மா நகர திட்டத்தினை இலங்கையில் அமுல்ப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மாநகர சபையானது கடந்த வருடம் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த திட்டத்தினை மிகவும் ஆக்க பூர்வமாகச் செயற்படுத்தியமைக்காக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவனுக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் பங்கு கொள்வதற்காக உலகலாவிய ரீதியில் 05 மாநகர சபை முதல்வர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தெற்காசியாவில் இருந்து தெரிவாகியுள்ள ஒரே ஒரு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மாநகர முதல்வர் தெரிவிக்கையில், இந்த கௌரவத்தினை மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்கள் , பலவிதமான தடைகள் எல்லாவற்றையும் தாண்டி குறித்த திட்டத்திற்காக உழைத்த மாநகர சபை உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் எமது சபையின் முதுகெலும்பாக திகழும் ஊழியர்களுக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

குறித்த சிறுவர் நேய மாநகர திட்டத்தினை நேர்த்தியான முறையிலே முன்னெடுத்துச் செல்வதற்கு உறுதுணையாக நின்ற மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்கள், பலவிதமான தடைகள் எல்லாவற்றையும் தாண்டி குறித்த திட்டத்திற்காக உழைத்த மாநகர சபை உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் எமது சபையின் முதுகெலும்பாக திகழும் ஊழியர்களுக்கு இந்த கௌரவத்தினை சமர்ப்பிப்பதோடு குறித்த திட்டத்தினை சிறப்பாக நடாத்துவதற்கு எமது மட்டக்களப்பு மாநகர சபைக்கு முழு ஆதரவினை வழங்கிய யுனிசெப் ( Unicef ) மற்றும் செரி ( Ceri) நிறுவனங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

-நிருபர் சரவணன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.