விவாகரத்தும் சமந்தாவின் அறிக்கையும்


 தன் மீது பரப்பப்படும் வதந்திகளுக்கு சமந்தா காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நாக சைதன்யா – சமந்தா இருவருமே தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தனர். இது திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் இருவருக்கிடையே பேசிய சமரசம் அனைத்துமே தோல்வியில் முடிந்துள்ளது.

இருவரின் பிரிவு துரதிஷ்டவசமானது என்று நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா தெரிவித்திருந்தார். இருவருடைய பிரிவு அறிவிப்புக்குப் பிறகு, பிரிவுக்கான காரணங்கள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணமுள்ளன.

இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமந்தா தனது ட்விட்டர் பதிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“எனக்கு எதிராக பரப்பப்பட்ட வதந்திகளுக்கும், கதைகளுக்கும் எதிராக என்னைப் பாதுகாத்த அனைவருக்கும் நன்றி. என் மீது நீங்கள் காட்டிய கருணைக்கும் நன்றி. எனக்கு மற்றொருவருடன் தொடர்பு இருந்தது, நான் குழந்தை பெற எண்ணவில்லை, நான் கருவைக் கலைத்தேன், நான் ஒரு சந்தர்ப்பவாதி என்றெல்லாம் கூறினார்கள்.

விவாகரத்து வலி மிகுந்தது. தனியாக அதிலிருந்து நான் மீண்டு வர சிறிது நேரம் கொடுங்கள். என் மீதான இந்த தனிப்பட்ட தாக்குதல் இடைவிடாது தொடரும். நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன் அவர்கள் கூறும் எதுவும் என்னை உடைக்காது”

இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.