தாம்பூலம் - கவிதை!!
மருதாணிச் சிகப்பிற்கு
நிறைய கவிதைகள்
எழுதியாகி விட்டது
இப்போது வெற்றிலையின்
சிகப்பிற்கு ஒன்று
மருதாணி செடி
வெற்றிலையோ கொடி
மருதாணி செடியாக இருப்பதால்
சிவப்பதற்கு அதுமட்டுமே
போதுமானதாக இருக்கிறது
வெற்றிலையோ கொடியாக இருப்பதால்
படர பந்தக்கால் தேவைப்படுவதைப் போல
சிவக்க தேவைப்படுகிறது
பாக்கும் சுண்ணாம்பும்
மருதாணியின் உள்ளங்கை சிகப்பு
உள்ளங்கை நெல்லிக்கனி போல
நமக்கு நாமே பார்த்துக் கொள்ளலாம்
வெற்றிலையின் நாக்குச் சிகப்பைக்
கண்டுச் சொல்ல கண்ணாடியோ
முன்னாடி ஒரு ஆளோ தேவை
அப்பி விடுபவரைப் பொருத்து
மருதாணி சிவக்கிறதா?
இல்லை
மடித்து கொடுப்பவரை பொருத்து
வெற்றிலைச் சிவக்கிறதா?
என்பதெல்லாம் தெரியவில்லை
இரண்டும் பொதுவாக
அந்நியோன்யத்தின் அளவீடுகள்
பெட்டிக்கடையைக் கூட முன்பு
வெற்றிலைப் பாக்குக் கடை என்றுதான்
சொல்வார்கள்
கல்யாணப் பெண் மருதாணி பூசுகிறாள்
கல்யாணத்திற்கு வந்த
விருந்தினர்கள் எல்லாம்
வெற்றிலையையும் பாக்கையும்
போட்டுக் கொள்கிறார்கள்
மருதாணி ஆசையெல்லாம்
குமரிகளோடு நின்று விடும்
வெற்றிலை ஆசையோ
கிழவிகள் ஆனாலும் விடுவதில்லை
குதப்பிக் கொண்டே இருக்கிறது...
மு.ஆறுமுகவிக்னேஷ்
கருத்துகள் இல்லை