சூர்யாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் பாராட்டு!

 


நடிகர் சூர்யாவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அச்சுறுத்தல்கள வன்மையாகக் கண்டிப்பதுடன், அவருக்கு என்றும் துணை நிற்கும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளார் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பணம் சம்பாதிப்பதற்குத்தான் படம் எடுக்கிறோம். அதற்குத் தேவையான காட்சிகளை வைக்கிறோம். சமூகத்திற்கு கருத்துக்களை கொண்டு சேர்ப்பது எங்கள் வேலையல்ல” என்று பகிரங்கமாகவே திரைப்படம் தயாரிப்பவர்களும், நடிப்பவர்களும் பேசுகிறார்கள். இதில் விதிவிலக்காக இருக்கும் ஒரு சிலரில், நடிகரும் தயாரிப்பாளருமான  சூர்யா முக்கியமானவர்.



அதிகார வர்க்கத்தின் கொடூரத்தை எதிர்த்து போராடும் ஏதுமறியாத ஒரு பழங்குடிப் பெண்ணின் கதை ஆவணப்படம் போல் இல்லாமல், அலுப்புத்தட்டாத திரைக்காவியமாக “ஜெய்பீம்“ படம் வந்துள்ளது. அதைப் பலர் பாராட்டி வரும் நிலையில் இதனை ஏற்க மனமில்லாத சிலர் ஏதாவது காரணத்தைக் கற்பித்துக் கொண்டு சூர்யாவையும், அவரது குடும்பத்தையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்துக்கிறார்கள்.

நடிகர் சூர்யாவை உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக ஒரு அரசியல் கட்சியின் மாவட்டத் தலைவர் ஒருவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். படத்தில் வரும் காட்சியின் பின்புலம், ஒரு சமூகத்தைக் குறிப்பதாக கூறப்பட்டபோது, அது அறியாமல் நடந்ததாகப் பதிலளித்ததோடு மிகுந்த பொறுப்புணர்வோடு அந்தக் காட்சியையும் சூர்யா மாற்றியமைத்துள்ளார். அதையே குற்ற ஆதாரம் போலப் பயன்படுத்தி இழப்பீடு கோரி வழக்கு தொடரப்போவதாகத் தெரிகிறது.
பழங்குடியினரை மனிதராகவே மதிக்காமல் அதிகாரவர்க்கம் கொடுமைப்படுத்துவதை காட்சிப்படுத்தினால், தமது சமூகத்தை இழிவுபடுத்தி விட்டதாக பழங்குடியினர் பெயரில் இயங்கும் அமைப்பு கண்டிக்கிறது.

ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு சாதியை, மதத்தைச் சார்ந்தவராகவே நமது சமூகம் அடையாளப்படுத்துகிறது. ஒரு காட்சிப் பின்புலத்தில் வருவதைக் கூட தம்மைக் காயப்படுத்தி விட்டதாக வலிந்து காரணம் தேடினால், சமூகச் சாரமற்ற வெறும் மசாலாப் படங்களே தமிழுக்கு போதும் என்றே பொருளாகும். ஆனால் தமிழ்த் திரைப்பட வரலாற்றில், சமூக நீதியை வலியுறுத்துகிற, ஆளுகிற அதிகாரவர்க்கத்தை வலிமையாக எதிர்க்கிர பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. தற்போது சாதி, மதத்தை இழிவுபடுத்தி விட்டதாக குறைகூறுவதும், அத்துமீறி அச்சுறுத்துவதும் அதிகரித்துள்ளது.

நவீன வாழ்க்கை முறை சாதியக் கட்டமைப்புகளை சாரமற்றதாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான உத்தியாக சாதியும், மதமும் மறுகட்டமைப்புச் செய்யப்படுகின்றன. அந்தந்தச் சாதிகளைச் சார்ந்தவர்களே இந்த முயற்சிகளை அலட்சியப்படுத்தும் போது, பிற சமூகங்களிடமிருந்து தமது சாதி , மதத்தைச் சார்ந்தவர்களைத் தம்மால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற தோற்றத்தை ஏற்படுத்த, பொதுவான சமூகக் கருத்துக்களை கூறுவோரை அச்சுறுத்துவதும், சாதி, மத மோதல் போக்கை முன்னிறுத்துவதும் வாடிக்கையாகிக் கொண்டிருக்கிறது.

சூர்யா விளிம்பு நிலை மக்களின் அவலநிலையைப் படமாக முன்னிறுத்திக் காட்டியது மட்டுமின்றி, அம்மக்களின் பாதுகாப்புக்கு தமிழக முதல்வரிடம் ரூபாய் ஒரு கோடியும் நிதியளித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட நரிக்குறவ இனப் பெண்ணுக்கும் 10 இலட்சம் ரூபாய் நிதி தந்திருக்கிறார். இவை அனைத்துக்காகவும் சூர்யா பாராட்டப்படுவது மட்டுமின்றி, தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டிய படைப்பாளியாகியிருக்கிறார்.

அவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அச்சுறுத்தல்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சூர்யா, அவரது படங்களாலும், செயல்முறைகளாலும் தமிழ் மக்கள் மட்டுமின்றி இந்தியாவிலும், நாடு கடந்தும் கூட பெருமதிப்பு பெற்றிருக்கிறார். மனிதத்தை நேசிக்கும் மனிதர்கள் அனைவரும் தன்னோடு இருக்கிறார்கள் என்பதை அவர் நினைவில் கொண்டு, அச்சுறுத்தல்களைப் புறந்தள்ளி மென்மேலும் சமூக அக்கறையுள்ள படங்களைத் தர வேண்டும் என்றும் , இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ள சூர்யாவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்றும் துணை நிற்கும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.