ராமேஸ்வரம் மீனவர்கள் விடுத்துள்ள உறுதி!!

 


எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமேஸ்வரம் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என ராமேஸ்வரம் மீனவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

மீனவர்களிடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தடுக்கும் வகையில் இன்று காலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகே உள்ள மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்கும் அலுவலகத்தில் மீனவர்கள் மற்றும் மீன்வளத் துறையினர், மெரைன் பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது. 

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்தனர்.

அத்துடன் கடற்கரையிலிருந்து 5 நாட்டிகலுக்குள் கரையோரம் மீன் பிடிக்கும் விசைப்படகுகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவ சங்கத் தலைவர்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் அரசால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடிக்க மாட்டோம் எனவும், அப்படி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உறுதியளித்தனர்.

மேலும், இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்க இலங்கை அரசுடன் இந்திய அரசு உடனடியாக பேசி நடுக்கடலில் பிரச்சினையின்றி மீனவர்கள் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம் துறைமுகம் மிகவும் பழமையான துறைமுகம் என்பதால் சேதமடைந்துள்ளது.

இதனால் பேரிடர் காலங்களில் மீனவர்கள் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே தூண்டில் வளைவுகளுடன் கூடிய புதிய மீன்பிடி துறைமுகம் அமைத்துத் தர வேண்டும் என மீனவர்கள் அரசுக்குக் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.