இன்னும் தேவை இருக்கிறது

 வானம் கிழக்கே வெளுத்து வந்து கொண்டிருந்தது. வாசலில் நீர் தெளிக்க வெளியில் வந்தாள் பூபதி. கூட்டமாய் நாய்கள் குரைத்துக் கிடந்தன. எதிர்புறம் இருந்த பயணிகள் நிழல் குடையில் சுருட்டைப் பத்தவைத்து இழுந்துக் கொண்டிருந்தார் ஒருவர். அவரின் அருகில் இருந்த மற்றொருவர் காலையிலேயே இதுவொளுக்குத்தான் ஒன்னும் புரியல கொட கொழுக்க பல வூட்டு சோறதின்னுதுவொல்ல அடங்கிக் கெடக்க முடியல என்று திட்டிக்கொண்டேக் கல்லைத் தூக்கி எறிந்தார். குரைத்துக்கிடந்த பத்து பனிரெண்டு நாய்களில், ஒரு நாய் பேசியவரின் காலைப் பாதுகாப்பான இடமென நினைத்து காலருகில் நின்றுகொண்டு, இன்னொரு நாயை குரைத்து கொண்டிருந்தது. நாய் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் அந்தப் பேர்வழி அதை ஓங்கி உதைத்ததில் சுருட்டிக்கொண்டு குரைத்து சுற்றிய எதிரி நாயின் வாயில் போய் சரியாக விழுந்தது. அவருக்குக் காலையிலேயே யார் மீது கோபமோ அந்தக் கோபம் நாயின் மீது ஏறியிருந்து.

நாய்கள் ஒன்றோடொன்று குரைத்து பொரண்டு உருண்டுக் கிடந்தன. மீண்டும் அவற்றை அதட்டியதில் அவைகள் குரைத்துக்கொண்டே ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு ஓடின. மனித மனம் எதன் பொருட்டோ வக்கிரங்களைச் சுமம்பதில் தயக்கம் காட்டுவதில்லை. பூபதி இதைக் கவனித்துக்கொண்டே வாசலில் தண்ணியைத் தெளித்துக் கோலமிட்டாள். பின்னிப்பொரண்ட நாய்களின் குரைப்பு சத்தம் மெல்ல விலகியபோது கெழக்கிலிருந்து ஒற்றைக்குரலில் அழுகுரல் காற்றில் வந்து கொண்டிருப்பதைக் கவனித்தாள். நடை பயிற்சி போக வெளியில் வந்த அவள் மாமனார், யாரு கெழக்க அழுகுரல் கேக்குது என்று மெல்ல சொல்லிக்கொண்டே வாசல் படியை விட்டிறங்கி எதிர்புறம் இருந்த பேருந்து நிழற்குடையருகில் போயி, கண்ணையும் காதையும் கூராக்கிக் கேட்டுப் பார்த்தார். யார் என்பது சரியாகப் புடிபடல, இன்னும் இரண்டடி வைத்துக் கொண்டே யாரு அப்படின்னு தனக்குத்தானே கேட்கையில், நிழற்குடையில் அமர்ந்திருந்த குரல் "என்னத்தடா எட்டிப்பார்க்கிற பரியாரி பாலன் செத்துப் போயிட்டான்"என்றது. "அப்படியா நா வேற யாரோன்னு நெனச்சண்ணே" என்ற பதிலைச் சொல்லும் போதுதான் பூபதிக்கு மாமனார் முறையுடைய இன்னொருவர் அங்கு அமர்ந்திருப்பதை அறிந்தாள்.

செத்தது யாராக இருக்குமென ஆவலுடனும் சங்கடத்துடனும் எட்டிப் பார்த்த மாமனார். செத்தவன் நாவிதன் பாலன் என்றதும் பெரிதாய்ப் பாதிப்பு இல்லை என்பதை விட எதுவுமே இல்லாதது போல், கிழக்கேப் போகும் பூதலூர் சாலையில் நடைப் பயிற்சியைத் தொடங்கிப் போய்க்கொண்டிருந்தார். பூபதியை விட இரண்டு வயது மூத்தவன் பாலன் இருவரும் நரிமேட்டில் பிறந்தவர்கள். பாலனோ தொழிலாளிக் குடும்பத்தில் பிறந்தவன். பூபதி தெற்குத்தெருவில் பிறந்தவள்.

பாலனும் அதே ஊர்தான். பள்ளிக்கூடம் சில ஆண்டுகள் வந்தான். அப்போது ஊர்ப் பிள்ளைகள் அனைவரும் சைக்கிளில் ஒன்றாய்ச் சேர்ந்துதான் அருகில் உள்ள தஞ்சாவூர் டவுன் பள்ளிக்கூடத்திற்குப் போவார்கள். பெரும்பாலும் அந்தவூர் பிள்ளைகள் தஞ்சாவூர் அரசர் பள்ளியில்தான் படித்தனர். அப்போது பள்ளிக்கூடம் பாலனும் சேர்ந்துதான் வருவான். பெண் பிள்ளைகளை ரொம்ப மதிப்பான். கருணையும் நேசமும் வழிந்தோடும் மனதுக்குச் சொந்தக்காரன். எல்லா அம்மா அப்பாவும் ஆசப்படுற மாதிரி பஸ்டு மார்க்கு வாங்காட்டியும் நன்றாகப் படிப்பான். பள்ளிக்கூடம் ஒன்னாப் போகையில் சிரித்துப் பேசி பழகியபடி வருவான். படுச்சு பெரிய வேலைக்குப் போக முடியாட்டாலும் ஏதோ ஒரு வேலைக்குப் போய்விட வேண்டும் என்றுதான் வந்தான். ஆனால், படிப்பப் பாதியில முடுச்சுக்கிற மாதிரி சூழல் அவனை சுருட்டிக்கொண்டது. அவன் அப்பன மாதிரி சாராயம் குடிக்கிற ஆளப் பாக்க முடியாது. சாராயத்துலேயே மூஞ்சிக்கழுவி குளுச்சு எந்திரிக்கிறவன். குடுச்சே குடல் வெந்து வாதத்தில் கையும் வாயும் இழுத்து நோய் முற்றி உரிய வயதிற்கு முன்பாகவே இறந்து போனான். பிறகு அவனது ஒற்றை அக்காவையும், அம்மாவைக் காப்பாற்ற கத்திரிக்கோலையும் பிளேடையும் எடுத்துக் கொண்டான்.


பிறகு, எங்கேப் பள்ளிக்கொடம் போவது. அவன் வீட்டிற்கு மேற்கால் ஒரு அடர்ந்த வேப்ப மரம் இருக்கும் அதில் காலையில ஒரு எட்டு மணிக்கு கத்திரிக்கோலை எடுத்தான்னா ஒரு பதினோரு மணிவரைக்கும் குத்துக்கால் வச்சு ஒங்காந்த மேனிக்கு செரச்சு கொட்டுறதுதான் வேலை. மூனுபேரும் சாப்புடனும் அக்காவைக் காலத்துலக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கனும், இப்படி அவனுக்கு பொறுப்பானது எரியும் நெருப்பின் நிழலாய்க் கௌவிக்கொண்டது. அச்சூழலில் ஏனோ அவன் வேறு வேலைக்கு போகாது அவன் அப்பன் புடுச்ச சவரக்கத்தியையே புடிச்சுட்டான். அவன் கத்தியப் புடுச்சப் பொறவு பூபதிய சம்மந்தம் இல்லாத ஒரு ஆளு மாதிரிதான் பாப்பான். மத்த பள்ளிக்கூடத்துக் கூட்டாளிகளிடமும் அப்படித்தான் நடந்துகொண்டான். சவரத்தொழிலே அவனுக்கான தொழிலாக அவன் தீர்க்கமாய் முடிவு செய்துகொண்டான். அதனாலோ என்னவோ சிறுவர்கள் பெரியவர்களென அனைவருக்கும் முடியை வெட்ட ஆரம்பித்தான்.

காலத்துக்குத் தகுந்தாற் போல் முடியை வெட்டுவதற்கும் பயிற்சியைப் பெற்றுக் கொண்டவனாய் முடிவெட்டுவதில் புதுமையை புதுப்பித்துக் கொண்டான். இதனால் முடிய வெட்டிக்கிறவுங்களும் டவுன விட பணம் கொறவா பாலங்கிட்ட கொடுத்துக்களாமுன்னு இவனிடமே வந்தார்கள். சமயத்தில் பக்கத்துல இருக்கிற விடுதலை நகர்காரர்களும் அவனிடம் முடியை வெட்டிக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். கையில நாளு காசு வந்ததுல அவன் அக்காவுக்கு கல்யாணம் முடித்து வைத்தான். இதற்குள்ளான ஆண்டுகளில் பூபதி பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிக்கு நுழைந்துவிட்டிருந்தாள். காலங்கள் உருண்டன அவன் அம்மாவும் தானுமாக இப்படி பொழப்பு ஊரில் நடத்தியபடி இருந்தனர். ஒரு முறை கல்லூரி விடுமுறை நாளில் பூபதி அவ அம்மாச்சி வீட்டுக்குப் போய்ட்டு ஒருவாரம் கழுச்சு வந்தப்போ அவன் வீட்டில் புதிய பெண்ணொருத்தி இருந்தாள். அக்கம் பக்கம் கேட்டதற்கு பாலன் கல்யாணம் முடித்துக் கொண்டான், பாலன் பொண்டாட்டிதான் அவள் என்றார்கள்.

பாலன் வீடு அரசாங்கம் கட்டிக்கொடுத்த தொகுப்பு வீடு. வீட்டுக்கு முன்னாடி பத்து மூங்கில வச்சு பத்து தென்னங் கீத்தப்போட்டு சாப்பு மாதிரியெறுக்குன வீடு. ரோட்டுமேலயே கொஞ்சம் தள்ளுனாப்புல இருக்கும் பக்கத்து டவுனான தஞ்சாவூர் போகும்போது வீட்டைப் பார்த்துக்கிட்டேப் போகலாம். அதனால் தற்செயலாகவே அவ்வப்போது பாலனையும், பாலன் வீட்டையும் பூபதியால் பார்க்க முடிந்தது. அம்மாச்சி வீட்டிலிருந்து திரும்பியவள் அப்படித்தான் அவனைப் பார்த்தாள். மீசையை எதோ ஒரு நடிகனின் மீசை ஸ்டைலில் வைத்து முகமெல்லாம் மழிங்கப்பட்டு வித்தியாசமா, ஆனாலும் மாப்பிள்ளைக்களையில் இருந்தான். அப்பவும் அவன் எதிரில் யாரோ தலையைக் கொடுத்துக் கொண்டிருக்க முடியை வெட்டித் தள்ளிக் கொண்டிருந்தான். பள்ளி நாட்களில் தோழமையோடு பழகினாலும், இவள் கல்லூரிப் போனப்பொறவு அவனும் பேசுவதில்லை. இவளும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

ஒரு முறை சிறிய கொட்டகை ஒன்று போட்டான். பிறகுதான் தெரிந்தது மழைநாளில் முடியை வெட்டி விட மரத்தடி சரியாக வரவில்லை. அதனால் தினம் கிடைக்கும் வருமானம் இல்லாது போவதைத் தடுக்கத்தான் கொட்டகைப் போட்டான் என்று. நரிமேடு முன்னூறு தலகட்டுடையக் கொஞ்சம் பெரிய ஊர்தான். அதனால் முடிவெட்டுற வேலைத் தொடர் வேலையாக அவனுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது. இந்தத் தொழில்தான்னு முடிவு பண்ணிட்டான் போல என நினைப்பாள். அப்போ நாலு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். தஞ்சாவூரில் போயி இவன் ஏன் இதே கடைய சலூன் கடையா மாத்தி செய்யிர வேலைக்குத்தக்க கூலியப் பெறக்கூடாது. என்னதான் இருந்தாலும் ஊருகாரங்களுகிட்ட கறார இவனால காசு வாங்கவும் முடியல. ஊருக்காரர்களும் இவன் உள்ளூருக்காரந்தானே நம்ம முப்பாட்டன் பாட்டனுவ ஊருக்குத் தொண்டூழியம் செய்யத்தானே வச்சானுவ என்ற அலட்சியம் மெதப்புல இருக்குறதக் கொடுத்துட்டுப் போறாங்க, அது மட்டுமில்லாம முடியை வெட்டிக்கொண்டே பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளாலும் சொல்லித் திட்டி அவனைக் கேலி செய்துவிட்டுப் போவதும் அவ்வப்போது நடக்கத்தான் செய்தது. அதுவும் சாராய வாசத்தோடு முடி வெட்டிக்கிறவுங்களச் சொல்ல வேண்டியதில்ல.

அவர்கள் பேச்சில் பெண் உறுப்புகள் இலையின்றி விருந்து வைக்கப்படும். பல ஆண்களுக்கு தங்களின் கோபத்தை எரிச்சலை, வன்மத்தைத் தீர்த்துக் கொள்வதற்குத் தீனியாய் பெண் உறுப்புகள் பயன்பட்டன. அப்படி பயன்படுத்துவதை அதிகாரத்தின் மிடுக்கென நினைத்தனர். அவன் மனைவியோடு குடும்பம் நடத்துகிறான். அந்த வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து பேசும் இவர்களுக்கு முடியை வெட்டுற வேலைய ஏன் செய்கிறான். இதே வேலையை டவுனுக்குப் போயி இந்த மாதிரிப் பேச்சில்லாமலாவது வாழலாமில்ல என அவனோடு தோழமையாய் பழகியதற்கான உணர்வோடு நினைத்துப் பார்ப்பாள்.

இ்வனும் இவன் தொழிலும் இப்படிப் போய்க் கொண்டிருக்கையில் ஒருநா அவன் வீட்டிற்கு அருகில் குடியிருந்த இன்னொரு தொழிலாளிக் குடும்பமான சலவைத்தொழில் செய்யும் குடும்பம் ஊரைக்காலி செய்துவிட்டு டவுனுக்கு போயிருச்சு. ஊரார் கேட்டதற்கு அவர்கள் வீட்டில் இருந்த அவர்களின் அப்பாயி பார்த்துக் கொள்வாள். வாரம் ஒருமுறை வந்து துணியை வாங்கிக் கொள்வதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். சலவைத் தொழில் புரிந்த ராகுலுக்கும் பாலன் வயதுதான் அவன் மணம் முடித்தப் பெண் தையல் தொழில் கற்றவளாம். அவள் டவுனில் தையல் கடை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து, அவள் கணவனுக்கும் டவுனில் ட்ரைக்கிளினிங் வைத்துக் கொள்ளலாமென அறிவுரையையும் கொஞ்சம் பணத்தையையும் கொடுத்து அழைத்துக் கொண்டுப் போனாள் என்பது பிறகுதான் தெரிந்தது. தொழிலாளர் குடும்பமான இரண்டு குடும்பங்களுக்கும் ஊரில் நல்ல காரியம் கெட்டக்காரியம் இரண்டிலும் வேலை இருந்தது. வேலையை முடித்து விட்டு அம்பதோ நூறோ பணத்தோட அவர்கள் அள்ளித்தின்னது போக மீதி சோத்த, காய, கனிய அள்ளிக் கொடுப்பாக அத துணியிலையோ குண்டானுலையோ அள்ளிக்கிட்டுப் போவாக இப்படி இருந்த இரண்டு தொழிலாளிக் குடும்பங்களில் சலவை செய்யும் வண்ணார் குடும்பம் டவுனுக்குப் போன பொறவு அவர்கள் வீட்டிலிருந்த ராசம்மா தெருவுக்குள் நல்லது கெட்டதுக்கு போயி வந்தாள்.

நாளடைவில் அவளால் ஓடியாடி வேல செய்ய முடியல இரண்டொரு முறை ஊரில் உள்ளவர்கள் வந்துக் கேட்கையில், வர்றேம் போங்க என்பாள் ஆனா அவளாலப் போக முடியாது. பிறகு அவர்கள் கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு, ஏற்கனவே அங்கு வந்து காத்திருக்கும் பரியாரி பாலனை வைத்துக் காரியத்தை முடித்துக் கொள்வார்கள். நாளடைவில் முடியை வெட்டுவதோடு துணியையும் துவைத்துக் கொடுக்க ஆரம்பித்தான். ஒருபடி மேலேப் போயி ஊரில் நடக்கும் நல்லது கெட்டது திருவிழா ஊர் கூட்ட நிகழ்வு போன்றவற்றையும் பறையடித்துச் சொல்லும் வேலையையும் செய்தான்.

ஒரு முறை பாலன் வீட்டிற்கு பின்புறம் இருக்கும் மாந்தோப்பில் மாங்காய் அறுத்துக் கொண்டிருந்தாள் பூபதி. அப்போ பாலனின் மனைவி, நீ என்னா நெனச்சுக்கிட்டு இருக்கே ஊருக்கு ஊழியம் பண்ணுனா நமக்கான ஊழியம் மட்டும் பண்ணுனா பத்தாத இப்புடி எல்லாத்தையும் அள்ளிப்போட்டுக்கிட்டு வரவர குடிக்கிற வாயிகொள்ளாமல் பான்பிராக்க வேற போட்டு அடக்கிக்கிற நமக்கு புள்ள ஒன்னு வளந்து வாரான் அவனுக்கு வழிகாட்டனும் ஓம்மனசுல என்ன நெனப்புல இருக்கே என எரஞ்சு பேசுனா. அப்பொழுது அங்கு வந்த ஒருவர், பாலா நீங்க சத்தம் போட்டது இருக்கட்டும் மீசையக் கொஞ்சம் சரியாவச்சு மத்தத சேவிங் பண்ணிவிடு என்றான். எவன் குடி எங்குட்டுபோனா என்பதுபடி பாலனை அவன் அழைக்கவும், இவள் பேச்சைக் காதில் போடாதவனாய் கத்திப் பெட்டியை எடுத்துக்கொண்டு கொட்டகையில் ஒக்காரப்போனான்.

அவள் பேசிக்கொண்டே தொட்டியடி முள்ளுப் படலுமேல கழுவி மாட்டியிருந்த இட்டுலிக் குண்டான எடுத்துக்கிட்டு இட்லி துணிகளைத் தொட்டித் தண்ணியிலக் குனிந்து கழுவினா கழுவையில் முன்னாடி வந்து விழுந்த தாலிக்கையித்த 'ம்கும் தாலியும் குண்டும் தகதகத்து தொங்குது பாரு இதுவேற முந்தி முந்திக்கிட்டு வெளியவந்து இருக்குற மானத்தையும் வாங்குது'. செரச்சுக் கொட்டுறவன் கட்டுனது சீமையல இல்லாத தாலிங்கிறது இந்த மாதிரி வெறுங்கைத்ததான் இப்படிப் பழமொழியோடசொன்னாகன்னு கழுத்தில தாலியேறுனப்பொறவுதானே தெரியுது'என்று ஆத்திரத்தைக் கொட்டிக் கொண்டிருந்தாள். "டேய் பாலா என்ன ஒம்பொண்டாட்டி பனமட்ட மேல மூத்திரம் போனக் கணக்கா பேசிக் கிட்டேக் கெடக்கா" என்று முடியை வெட்டிக் கொள்பவன் சொல்ல, பாலனோ "அவ தொழிலாளிக் குடும்பத்திலப் பொறந்து வாக்கப்பட்டுட்டு தொங்குதாலியும் காதுக்கு மாட்டுலு போடனுமுன்னு கனவுகாணுறா நீங்க இங்குட்டு திரும்புங்க "என்றவாறு முடியை வெட்டிக் கொண்டிருந்தான்.

முடிவெட்டிக் கொண்டவன் பாலனிடம் பேசியது போதாதென "அடியே பாலம் பொண்டாட்டி என்னாது காலையிலையேக் கத்திக்கிட்டுக் கெடக்கே" என்றான். "அய்யா வந்தமா வெட்டுறத வெட்டுனமான்னு போங்க குடும்ப வெவகாரத்தில தலயிட வேண்டாம்" என்றதுதான் தாமதம். யாரெடி எதுத்துப் பதுலுபேசுற என்றவாறு ஓடிவந்த பாலன் ஓங்கி அவள அறைவொன்று விட்டது பூபதி காதில் பளீரென்று விழுந்தது. ஏதேதோ பேசிக்கொண்டு அழுகையும் ஆத்திரத்தோடு அங்கே அழுதுகிட்டு நின்ன அவ பிள்ளையையும் இழுத்துக்கிட்டு வீட்டிற்குள் போனாள். இவனும் பதிலுக்கு எதையோப் பேசிக்கொண்டு யாருகிட்ட என்பதுபோல் வெட்டுவதில் தீவிரமானான். ஓடியாடி குறும்போடும் கூட்டாளி உணர்வோடும் விளையாடிப் பள்ளிக்கூடம் வந்த பாலன் கிட்டத்தட்ட அவனுள் செத்துப் போய்விட்டதை பூபதியால் அன்று உணரமுடிந்தது. இவர்களோடு பள்ளிக்கூடம் வந்த ஊரு நண்பர்கள் தோழிகளென இவர்களில் இன்னும் பலர் கல்யாணம் கூட முடிக்காத நிலையில், இவன் பேச்சு நடவடிக்கை பான்பிராக் வாயி, மதியத்திற்கு மேலான போதையேறிக் கண்களென கிட்டத்தட்ட கிழவனுக்கானத் தோற்றத்தைப் பெற்றுவிட்டிருந்தான். பூபதி அவளின் கல்யாணத்துக்குப் பொறவு உள்ளூரில் நடக்கும் நல்லது கெட்டதற்கு போய்வரும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது பாலனின் நடவடிக்கைகள் இவளுள் மேலும் கவனம் பெற்றது. அவன் வீட்டுல முடிவெட்டுவதுடன், எந்த வீட்டுல நிக்கிறானோ அந்த வீட்டுப் புள்ளைவொ வெளிக்குப்பொயிட்டு வந்து நின்னா தொட்டியடிக்கோ வெளியில் இருக்கும் கக்கூசுக்கோ இழுத்துப்போயி காலக்கழுவி விடுவான். தொட்டியடில துணிகெடந்தா கசக்கி காயப்போடுவான். மாடு கட்டிக்கெடக்கும் கட்டுத்தறியில் சாணிகெடந்தா அள்ளிப்போடுவான். வாசலில் தாணிய மூட்டைக்கிடந்தால் தூக்கிப்போடுவான்.

அப்படியே வாசலில் நிக்கிற மரத்தை கழுச்சு அள்ளித் தோட்டத்துல போடுவான். புள்ளைகள் வாந்தியெடுத்துட்டா கழுவிவுடுவான். பெருசுக வீட்டுல நோய் வாய்ப்பட்டா பீ, மூத்திரம் கூட அள்ளிப் போட்டடான். அவர்களைக் குளிக்க வைக்கவும் தொணைக்கு நிப்பான். இப்புடி செய்யும் வேலைகளையும் முகம் சுளிக்காது. அத்தாச்சி, என்ன அக்கா, என்ன மாமா, சரியா செஞ்சுட்டனா என்று உறவுசொல்லி வேலைக்கு அங்கிகாரம் கேட்பான். அதற்குப் பதிலாக இந்தா என்று அஞ்சோ பத்தோ சிலமொற காசு கையில் பொத்தென்றுவிழும். சில மொற கஞ்சிக் குடிக்கிறியாடா என்று சொல்லிக்கொண்டே பழைய வட்டு ஒன்றில் சோறோ, கஞ்சோ வாசலுக்கு வரும். அத எடுத்துக்கிட்டு சில நேரங்களில் நா வரட்டா என்றபடி போய்க் கொண்டிருப்பான். தீபாவளி பொங்கலுக்குக் காசு வாங்க ஒவ்வொரு வீட்டிலும் வந்து நின்னுகிட்டு பாலன் வந்திருக்கேம்பான் உள்ளேயிருந்து சாப்பிட்டுக் கொண்டும், கொண்டாடிக்கொண்டும் இருப்பவர்கள் இப்ப என்ன? இப்பவே வந்து நிக்க. பொயித்துட்டு வா என்பார்கள். அது எந்த நேரமா இருந்தாலும் எந்த வீட்டிலும் அவன் மொத முறையிலேயே வாங்கியது இல்லை.

எதையும் ரெண்டாவது ரவுண்டுலதான் கொடுப்பார்கள். அதை வாங்கிப் பார்ப்பவன் இன்னம் பத்து ரூபா சேத்துக் கொடுங்கய்யாம்பான். எல்லாம் போதும் போதும் போ என்றபடி அவன் பதிலை எதிர்பார்க்காமல் வீட்டிற்குள்ளோ அடுத்த வேலைக்கோப் போய் விடுவார்கள். அவனும் கேட்டுப் பாத்துட்டு அடுத்த வீடு போய் விடுவான். எல்லார் வீட்டிலும் இதேதான். கல்யாணம், குடிபோறது, சீமந்தம், காதுகுத்து போன்றவை வீட்டுல செய்கையில் வேலை செய்ய எங்க பாலன் என்பவர்கள். சாப்பிடும் போது தேட மறந்து போவார்கள். இல்லையேல் மறந்தது போல் காட்டிக் கொள்வார்கள். அப்படியே அவன் வந்து ஓரமாக மரத்தடி அங்கும் இங்கும் நின்றாலும் கண்டும் காணாது பார்த்தும் பாராது இருந்து விட்டு .நேரம் கழித்துப் பார்த்து விட்டு, ஏ பாலா நீ இங்கதான் நிக்கியா வா குண்டா எடுத்தாந்தியா என்றுக் கேட்டுக்கொண்டே அவன் கொண்டு ஓடிவரும் குண்டானில் உணவைக் குப்பையாய் அள்ளிப்போடுவார்கள்.

பாத்திரம் இல்லேன்னா சவ்வுத்தாளில் எல்லாத்தையும் ஒன்னா அள்ளிப் போடுவார்கள். கிறுக்கன் பாலனும் இதோ வந்துட்டேன் அத்தாச்சி என்றோ, மாமா என்றோ ஓடிப்போய் வாங்கிக் கொண்டு தலையை குனிந்து சிரித்தவாறு போரில் வென்றவனைப் போல் போய்க் கொண்டிருப்பான்.

நாளும் முடிவெட்டிய நேரம் போக எதோ ஒரு வீட்டில் ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டே இருப்பான். சும்மா இருந்து பூபதி அவனைப் பார்த்ததில்லை. எல்லோருக்கும் முடியை மழித்துவிடும் அவன் பெரும்பாலும் மழிக்கப்படாத தாடியும் மீசையுடன் மடித்துத் தூக்கிக்கட்டிய வேட்டியுடன் போய்க் கொண்டிருப்பான். அவன் போகும் போதும் அவன் வாய் சும்மா கெடக்காது எதாவது கலகலவென ரோட்டில் பேசியபடிதான் போவான். பூபதி அறிந்தவரையில் அவன் பெரிதாய்த் தேவையைத் தேடி அலைந்ததில்லை. வேலை செய்துவிட்டு கஞ்சோ சோறோ சாப்பிடுவான் .தேவ, திருவிழா, நல்ல நாள், பெரிய நாள் என்றால் ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்கும் காசை வாங்கிக் கொள்வான். உரிமையா சிலரிடம் மட்டும் அய்யா இன்னொரு பத்து ரூபா சேத்துக்கொடு குடிக்கிறதக் கொஞ்சம் ஓம்பேரச் சொல்லிக் சேத்துக் குடிப்பேன் என்பான்.

ஒரு தீபாவளி அன்று பூபதியின் கணவனிடம் அவன் கொடுத்தப் பணத்துடன் ஒரு அம்பது ரூபாய் சேத்து வாங்க அவ்வளவு நேரம் போராடினான். பூபதி கணவனோ இந்தப் பணத்துல வீட்டுக்கு ஏதாவது நீ வாங்குனா பராவல்ல குடிக்க எதுக்கு இத கேக்குற போவென்றான். வீட்டுக்கு கொடுக்குறவ குறுகிய சிந்தனையுடையவன் நாட்டுக்குக்கு கொடுக்குறவன் பொது சிந்தனையாளன் இதுகூட தெரியாம எங்க வீட்டுப் பொண்ணக் கட்டிக்கிட்டு வந்துட்டேன்னு கிண்டலடித்தான் உரிமையோடு. ஊரில் எல்லொரிடமும் உரிமையாப் பழகுவான். ஆனாலும் ஒரு நூலில் அவன் விலக்கி வைக்கப்பட்டே இருந்தான் என்பதை மறுக்க முடியாது.

கல்யாண வீடுகளில் மகிழ்ச்சி கூடிக் கிடந்தாலும் பெரிதாய் அவனுக்கு ஒன்றும் செய்துவிட மாட்டார்கள். ஆனா ஊரில் யாரு உயிர் போனாலும் சரி மொத அழப்பு பாலனுக்குத்தான் போவும். இவனும் கூப்பிட்ட உடன் எந்தவேலை எப்படிக் கெடந்தாலும் அப்படியே போட்டுட்டு ஓடிருவான். சாவு ஊட்டுல முன்னாடி நிப்பான் கல்யாணத்திக்கு பொறவு உள்ளூர் சாவுக்குப் போகும் போதெல்லாம் பூபதி இதப் பார்த்ததுண்டு. செத்தப் பொணம் உயிரா இருக்கும்போது, தண்ணியக் கூட ஒடஞ்ச பிளாஷ்டிக் டப்பாவுளக் கொடுத்துருக்கும் நல்ல சோறுகூட போடாம பழையச் சோத்த போட்டுருக்கும். கறிச்சோறு சமச்சிருந்தாகூட அதவொருவாப் போடாம உப்பு மாங்காயும் கஞ்சியும் கூட ஊத்தி வச்சிருக்கும். ஆனா, இவன் எதையும் நெனைக்காது கொடுத்தவொ கொடுக்காதவொ. போட்டவொ போடாதொவோ எல்லாரையும் பொறுமையாத் தூக்கி, எடுத்துச் செய்வான். பொணத்தக் குளிக்க வச்சு, வாயக் கட்டி காலக்கட்டி தலமாட்டுல நெல்லள்ளிப்போட்டு பத்தி சூடம் ஏத்தி பொணத்துக்கு தேங்கா ஒடச்சு வழிவுடுற சடங்கென அனைத்தையும் முகம் சுளிக்காமச் செய்வான். வீட்டுக்காரவொல தொந்தரவு கொடுக்காது பொறுமையா எல்லாத்தையும் முடிச்சுட்டு அழுவுறவுக இப்ப அழுவுக. அடே யாருடா அது அங்க நிங்கிறது தப்படிங்க. பொணத்துக்கு உரிமையுடையவர்களை ய்யோ பெரியவரே, இல்லேன்னா ய்யோ சின்னவரே. ஏ அத்தாச்சி, இல்லாட்டி ஏ பெரியாயி, பொணத்த எப்ப எடுப்பிய சாயந்திரம்தானே இல்லே ஒடனேவா என்று கேட்டுத் தெரிந்து கொள்வான்.

ஏன்னா உறவுக்காரர்கள் கோடிகொண்டு வருவதை வேட்டுச்சத்தோட வாங்கியாறது. வாங்கி அத அங்கிருக்க அண்டாவுலக் கொட்டுறது எடுக்குறதென அந்த வீட்டுல அன்னைக்கு சடங்கு எல்லாம் அவன்தான். சாவு சடங்கா இருந்தாலும் அவனுக்கு முழுசா அங்கிகாரம் கிடைத்திருப்பதாக உணர்ந்தவனாய் மகிழ்ச்சியில் கால்கள் கீழே பாவாது. உயிராய் இருக்கும் போது பக்கத்தில் நெருங்க முடியாதவர்களின் தலைக்கு அரப்பு வைப்பதற்குக் கூட உதவியாய் நாம்தானே இருக்கோம் என்பது போல ஒரு மிடுக்கு அவனிடம் தென்படுவதை பூபதி பார்த்திருக்கிறாள். விடாது ஒன்னுவொன்னாக வீட்டுக்காரர்களைஅழைத்து பிணத்துக்கான சடங்கு சாமான்களை வாங்கிக் கொள்வான்.

ஒரு முறை இப்படித்தான் பக்கத்துத்தெரு சுந்தரவல்லி நோய்வாய்ப்பட்டு இறக்கக்கூடாத வயதில் இறந்து போனாள். அவ வாழ்க்க பலருக்கு அனுபவம் தந்த வாழ்க்கன்னுதான் சொல்லனும். பூபதியைப் போலவே உள்ளூரில் பிறந்து உள்ளூரில் சொந்த அத்தை மகனையேக் கல்யாணம் கட்டிக்கிட்டவ சுந்தரவல்லி. சுந்தரவல்லின்னா சுந்தரவல்லிதான், அடர்ந்த அழகு. பொண்ணுக்கு பொண்ணே ஆசவைக்கும் செஞ்சுவச்ச உறுப்பழகி. பிறரை இழுக்கும் குணத்தழகி. ஆனா அவ அத்த மவனோ உள்ளூரில் நர்சு வேலை பார்க்க வந்த ஒரு பெண்ணை சட்டத்துக்கு பொறம்பா மணம் முடித்துக் கொண்டு திருவாரூரில் அவளோடு குடும்பம் நடத்தினான். சுந்தர வல்லியோடு குடும்பம் நடத்தியது ஓரிரு ஆண்டுகள் என்றாலும் ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானாள். வாக்கப்பட்டது உள்ளூர் என்றாலும் வாழ்க்கைக்குப் பணம் போதாமையால் ஒற்றை மகனை அழைத்துக் கொண்டு பிழைக்க திருப்பூர் போய்விட்டாள். ஊருக்கு நல்லது கெட்டதுக்கு கூட வராது கிடந்தவள் மகன் கல்யாணத்துக்குத்தான் ஊருக்கு வந்தா. வந்து அவளுக்குன்னு விட்ட எடத்தில் அரசு மானியத்தோட வீடு ஒன்னுக் கட்டுனா. மகனுக்கு கல்யாணத்த முடுச்சவ ஊருக்குப் போயி சில மாதங்களில் திரும்பவும் ஊர் வந்தாள். மருமகளும் தானும் வீட்டில் இருக்க மவன் வெளிநாடு போனான். அவன் போயி இரண்டொரு மாத்தில் நாளும் இளைத்து வந்த சுந்தரவள்ளியை பரிசோதித்த மருத்துவர் முதுகெலும்புப் புற்றுநோய் இருப்பதை உறுதி செய்தார். அதுக்குப் பொறவு அவபட்ட கஷ்டம் பகவானுக்குத்தான் வெளுச்சம். நோய் முத்தி நாளும் வலியால் உடல் முழுக்க புண்பட்டு புரண்டவளை பாலன்தான் சளிக்காது தூக்கியெடுத்து எல்லாம் செய்தான். ஆறேழு மாதத்தில் இறந்து போனவளை, அவன் தான் தூக்கித் தொடச்சு வாயக்கட்டி காலகட்டி அதுவும் கொட்டாத மழ கொட கொடன்னு கொட்டுச்சு அவ செத்தன்னைக்கு. உறவுக்காரர்கள் பக்கத்திலக் கூட போக அருவருப்பு பட்டார்கள். பொணத்த தூக்குறத்துக்கு முன்னாடி வாய்க் கருசி போடும் சடங்கு பிணத்தை வாசலில் கிடத்தி நடந்தது. அப்போது பந்தலைப் பொத்துக்கொண்டு பேய் மழைக் கொட்டியது. எல்லோரும் வீட்டிற்குள்ளும் அங்கேயும் இங்கேயுமாக ஓடினார்கள். பாலன் பக்கத்தில் இருந்த பிளக்ஸ் தார்பாயை விரித்துப் பிடித்துக்கொண்டு அரமணி நேரம் அப்படியே நின்னான் எல்லோரும் பொணத்த மூடிட்டு உள்ளேவா மழவிட்டோன்ன போவலாமுன்னதை அவன் காதில் போட்டுக் கொண்டாலும் இருக்கட்டும் பரவால்லேன்னு அப்படியே பிடித்து நின்னு அவளுக்கு வாக்கருசி வாங்கி எல்லா சடங்கையும் செய்ததை மறக்கமுடியாது.

அவனுக்குள்ள அப்படிவொரு பிடிவாத நேயம் அப்பியிருந்தது. அது முதல் பூபதிக்கு அவமேல மேலும் மதிப்பு கூடுச்சு. அவனப் பாக்கும் போதெல்லாம் யாரையும் இவன் இந்த ஊரில் அனாதையாச் சாக விடமாட்டான் என்பதைப் புரிந்து கொண்டாள். உயிரோட இருக்கும் போது எவ்வளவு பேரு வேணுமுன்னாலும் கொண்டாடலாம். செத்தப் பொறவு கொண்டாட மனதாராளம் வேண்டும். வெறும் சடங்கும் கடமை கழிப்பும் வாழ்க்கையின் அர்த்தங்கள் ஆகா. ஆனா, இன்று பெரும்பாலும் அர்த்தமான உறவும் பாசமும் இருக்காங்கிறது கேள்வியாத்தான் நிற்கிறது. இறப்பை யாரும் கொண்டாட முடியாது. இறப்பையும் நிழல் படமென உற்று நோக்கி வெறுமென கடத்தல் என்பதற்கு மனதிற்குள் மனிதம் தேவையில்லை. அங்கே உயிர்ப்பை உள்நுழைக்கும் அதிபிரியம் தேவை என்பதை மறுக்க முடியாது. அப்படிபட்ட மரணத்தை சந்திப்பதும், உயிர்ப்பை உள்ளடக்கிப் பார்க்கும் உறவுகள் வாய்ப்பதும் சிக்கலாகவே இருக்கிறது.

இறுதிக்கால மரணங்களை இயல்பாகவே எடுத்துக் கொண்டாலும், அதுக்குள்ளும் பிடியளவு மனிதம் இருக்கையில்தான் வாழும் வாழ்க்கை ருசியுடையதாகிறது. ஆனால், பூபதி இப்படியான எதுவுமற்ற மரணங்கள் சிலவற்றை பார்த்திருக்கிறாள். அப்பொழுதெல்லாம் நானிருக்கிறேன் என்பதுபோல் சுந்தரவல்லியின் மரணங்கள் போன்ற மரணங்களைப் பாலன் நிறையவே முழுமையாக்கி இருக்கிறான். சுந்தரவள்ளியை பாடையில வச்சு தூக்கி முச்சந்தி கழிந்தம் பொறவு மழையில் நனையாது குடையோடு கூடிக்கழியும் கூட்டங்களை விலக்கிவிட்டு வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு காடு போயி சேரும்வரை, கண்ணீரின்றி கனத்த மனதுடன் நானிருக்கிறேன் என்பதுபோல், அவளைக் காடு சேர்க்க தொடர் மழையோடு பாலன் போனது ஒவ்வொரு உள்ளூர் இறப்பிலும் கண்ணுக்குள் வந்துபோகும் பூபதிக்கு. மனிதர்களை கடைசிவரை மனிதர்களாகப் பார்க்கும் பண்பாளனாக விளங்கினான். இறப்பைத் தொடர்ந்து இறப்புக்கு பிறகு வரும் அடுத்தடுத்த ஒரு நாளில் எட்டு முடிப்பார்கள் இந்து சடங்கு முறைப்படி. அன்றைய படையல் அவனுக்கானது என்றாலும், பதினைந்தாம் நாள் முப்பதாம் நாள் படையல் போல உயர்வான இனிப்பு வகைகளும் பழவகைகளும் படைக்கப்படுவதில்லை. காலையில் சுட்டு மாலை வாக்கிலோ மதிய வாக்கிலோ ஊசிப்போகும் போண்டா, வட, பச்சி, சாலையோரக் கடைகளில் சிறு துணுக்காய் தொங்கும் ரொட்டிவகை சிறுபழத்தோடு ஆணென்றால் சுருட்டு, பீடியென தினம் ஒருவர் ருசிக்கும் பண்டெங்களென அவற்றை மனதில் வைத்து அந்த மாதிரி உணவுகளைச் சேகரித்து படையலிடுவார்கள். படையல் முடிந்தபின் அங்கு கூடியிருக்கும் உறவுகளிடம் படையில் பிரித்து எடுத்துக் கொடுக்கையில் எனக்கு வேண்டாம், உனக்கு வேண்டாம் என்பதைப் பார்க்க முடியும். அந்தப் பலகாரங்களை அப்படியே வெள்ளை வேட்டியில் சுருட்டிக் கொடுப்பார்கள். அதை அவன் கொண்டு வந்திருக்கும் பெரிய குண்டானில் வைத்துச் சைக்கிளை தள்ளிக்கொண்டு போவதை ஒவ்வொரு எட்டு வீட்டு நிகழ்விலும் பார்க்கலாம்.

இத்தனைக்கும் காலையலையே எல்லார் வீட்டு வாசலிலும் போயி படையல் போடும் செய்தியை அவன்தான் சொல்லிட்டு போவான். அதுமட்டுமா சுடுகாட்டில் எரிக்கப்பட்ட பிணமாயின், பால் தெளித்து காடமத்தும் சடங்கில் மூட்டம் பிரிப்பது அதன் எலும்புகளைப் பொறுக்கி மண்கலயத்தில் இட்டு ஊருக்கு அருகில் இருக்கும் வெண்ணாற்றங்கரையில் விடுவது வரை பாலனுக்கானது. எதையும் அவன் இதைச் செய்யிறோமே என்ற வருத்தத்தோட அவன் செய்ததில்லை. அவம் பொண்டாட்டிக் கூட ஒரு வீட்டுல சாவுன்னா நீயேன் பொணத்தோடையே. ஒவ்வொரு வீட்டுலையும் படுகெடையா கெடக்குறியே இந்த ஊசுனப் பண்டத்த அள்ளிக்கிட்டு எதுக்கு வார. அவ்வோ சாதிசென சொந்தக்காரங்கல்லாம் கறி மீன் கருவாடுன்னு சமச்சுவச்சு சாமிகும்புட்டு சாப்புடுறன்னைக்கு கையில கிள்ளிக் கொடுக்குதுவொ. எலும்ப பொறுக்கி பூமியில சேக்குறவனுக்கு எறும்புகூட தின்னாதத அள்ளிக் கொடுக்குதுவ அத நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு அள்ளியார. இந்தம் பொலப்பு ஒன்னோட போவட்டும் எம்புள்ளையும் என்னையும் வுட்டுடு ஊரக்கட்டிக்கிட்டு நீயே அழுவென அவம் பொண்டாட்டி திட்டுவது பூபதிக்கு மட்டுமல்ல ஊரில் இருப்பவருக்கும் தெரிந்தே இருந்தது.

அவள் பேசுவது காதில் விழுந்தாலும் சிலர் சிரித்துக்கொண்டே கடப்பதையும் சிலர் "அடியேய்ப் பாலம் பொண்டாட்டி இனி சாவுவூட்டுல சொல்லிப்புடுறோம். பாம்பே ஸ்வீட்ஸ்டாலுல பாலனுக்கு வாங்கியாந்து கொடுங்கோன்னு" என்று நக்கலடிப்பார்கள். இது என்ன கதையா இருக்கு ஏம்புருசன நாகேக்குறதுக்கு உரும ஓட்டுலப் பறக்குதுன்னுட்டுப் போவா முனகியபடி. அவம்பொண்டாட்டி எத சொன்னாலும் பாலன் அவம் போக்குலத்தான் போகிட்டிருந்தான். ஒரு மொற அப்படித்தான் எட்டு வீட்டுல கொடுத்தப் பாலகாரத்த வேட்டிய போட்டு சுத்தி முடுஞ்சு அத அலுமினிய அன்ன குண்டானுல வச்சு சைக்கிளில் தள்ளிக்கிட்டு போனான். அப்போது நாளஞ்சு நாய்க குரைத்துக் கொண்டு சுத்தி வளச்சு அவன் மேலத்தாவுனுச்சுக நூறுநாள் வேலப் பாத்துகிட்டு இருந்த அவம் பொண்டாட்டி மண்வெட்டியத் தூக்கி வீசிட்டு ஓடுனா, பரட்ட தலையும் இப்படி பரதேசிக் கோலமாவும் வந்த நாயி சுத்தி புடுங்க வரமா என்ன பண்ணும் என்று சொல்லிக்கொண்டே இழுத்துப்போனவள் வீட்டுக்கு எதுத்தாப்புல வறண்டு கெடந்த வாய்க்காவுல தட்டிவுட்டா குண்டானுல அவன் கொண்டாந்தத" இதெல்லாம் ஒருபொலப்பா "என்றபடி."ஆமா இவ கலெக்டர் வேல பாத்துட்டுவாரா "என்று கூறிக்கொண்டே, ஏற்கனவே அங்கு காத்திருந்த நடேசன் மொகத்த மழிச்சு முடியவெட்ட கத்திரிக்கோல் பெட்டிய எடுத்தாந்து வச்சுக்கிட்டு ஒங்காந்து வெட்ட ஆரம்புச்சான். அப்போ பாலங்கிட்ட ஓடிவந்த அவனது அஞ்சுவயசு மகன் பாலனின் எண்ணை இல்லாத காத்துல பறக்கும் பறட்ட முடியை புடுஞ்சுக்கிட்டு களகொத்துனமாதிரி மொளஞ்சுகெடக்கும் தாடி மீசையை தடவி மொகத்தோட மொகத்த வச்சு பொறண்டான், பொரன்டவன எப்பா அங்குட்டுப்போ முடுச்சுட்டுவாறேன் என்றபடி மகனின் கையைப் பிடித்து விலக்கி அவனது அம்மா இருக்கும் பக்கம் அனுப்பிவிட்டான்.

முடியவெட்டக் கொடுத்துக்கிட்டு இருந்த நடேசன் விடு பாலா தொழில் கத்துக்கனுமுள்ள ஓம்மொவனும் என்றான். கேட்டுக்கிட்டு இருந்த பாலம் பொண்டாட்டி ஆமா செரச்ச மயிரள்ளி நானாங்கொட்டுறது பத்தாது எம்மருவொவளும் வந்துகொட்டனுமாக்கும் என்றபடி இழுத்துக்கிட்டுப் போனாளாம். ஒருநா இதையெல்லாம் பாத்துக்கிட்டும், கேட்டுக் கிட்டும் இருந்த பொண்டுகள் பேசிக் கொள்வதைக் அவ்வப்போது கேட்டதுண்டு பூபதி. அவனுக்குப் புடுச்சு பொண்டாட்டிக்குப் புடிக்காது பல வேலைகளையும் செஞ்சுகிட்டுதான் கெடந்தான் பாலன். இன்னைக்கு அவன்செத்துட்டான் என நெனக்கையில் பூபதி மனம் புழுதிகாட்டுல நடக்குற வேதனையைக் கொடுத்து.

காளித்தெரு சங்கரம்மா கிழவி செத்து அடுத்த நாளே பாலு தெளிக்கப் போவையில எப்போதும் போல எலும்புகலப் பொறிக்கி கலையத்தில போட்டு அத சாக்குலக்கட்டி எடுதுக்குட்டுசங்கரம்மா கெழவியின் பேரன் வண்டிவோட்ட கால வண்டியில ரெண்டுப்பக்கமும் போட்டு போனவன்தான். வண்டியவோட்டுனவன் எப்டிவோட்டுனா என்னான்னுதெரியல ஊருக்கு கெழக்கேயிருந்து சுடுகாட்டு ரோட்டவிட்டு மேற்கால திரும்புறப்போ தஞ்சாவூருலேர்ந்து வந்து திரும்பும் ஒரு திருப்பத்தில் ஏறுனவன எதுத்தாப்புல வந்தக்காரு மோதியதில் ரெண்டுபேரும் தூக்கி வீசப்பட்டனர். வீசியதில் வண்டியை ஓட்டியவன் அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்தான். பாலனோ இரத்தம் கொட்ட தார்சாலையில் கிடந்தான். ஊருக்கு ரொம்ப பக்கத்திலேயே ஏற்பட்ட விபத்து என்பதால் ஊரில் இருந்தப் பாதிக்கு மேலானவர்கள் ஓடி வந்துட்டாங்க. ஓடி வந்துப் பார்க்கையில் இருவருக்கும் உயிர் இருந்தது அன்னைக்கு தஞ்சாவூரு மருத்துவக் கல்லூரியில் கொண்டு போயிச் சேத்துவிட்டு அடிபட்ட இருவரையும் கவனித்து வந்தார்கள் .

ஒரு வாரத்தில் வண்டியோட்டியவன் உடல் தேறிப் போனான். அவனை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர். பாலனோ ஆறு மாசமா நெனவு இன்னைக்கு வரும் நாளைக்கு வருமுன்னு நம்பிக்கெடந்த அவனுக்கு வாங்கப்பட்டவள விட்டுட்டு அவன் புள்ளையையும் அப்பன் இல்லாதப் புள்ளையாக்கிட்டு இதோ போயிட்டான். அவள் மனைவிதான் ஒற்றைக் குரெலெடுத்து அழுகிறாள். இவன் மரணம் எந்தவகையுலும் தருமமாய் இல்லையே என்று நினைத்த பூபதி மரணத்தைக் கூறுபோடும் வழி தெரியவில்லையே என வருந்தினாள். தண்ணியை வாசலில் தெளித்துவிட்டு உள்ளே வந்தவள் அந்தப் புத்தகத்தைத் தேடினாள். கையில் அகப்பட்டது புத்தகம் அவள் பத்தாம் வகுப்புப் படிக்கையில் பேச்சுப் போட்டியில் பரிசாக வென்றது அந்தப் புத்தகம்.
இந்தப் புத்தகம் இங்கு இருப்பதை விட அங்கு இருந்தால் பல வீரிய விதைகளை இம்மண்ணிற்குக் கொடுக்கும் என்று நம்பியவளாய் முந்தானைக்குள் அதை மூடிக்கொண்டு பாலன் வீடு நோக்கி நடந்தாள். அந்த வழியே பலர் அவள் மாமனாரைப் போலவே எளிதாய் அவ்விடத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தனர். மங்கிய மின்சார ஒளியில் பாலன் வீட்டில், அவர்களின் உறவினர் ஒரிருவர் ஒக்காந்திருந்தனர். பாலனின் மனைவி மகனை ஒருகையில் அணைத்தபடி ,

‘கருணையில வெளஞ்சவனே
வெகுளியில வாழ்ந்தவனே
எங்களத் தவிக்விட்டு போனவனே
ஒத்தையில நாங்கெடந்து
பொலம்பி தவிக்கிறனே...’

என்றுகதறிக்கொண்டிருந்தாள்.

ஆறு மாதமாய் மருத்துவமனையில் பாலனோடு கெடந்து உழண்டதில் பாதி மேனியாகிக் கிடந்தாள். சமூகத்தில் மாற வேண்டியவர்களும். மாற்றத்தை நோக்கி நகர வேண்டியதுமான தேவைகளும் இன்னும் இருந்து கொண்டேதான் இருக்கிறது என்றவள் எண்ணிய போது ஒரு மூலையில் இருந்த சவரப்பெட்டி கண்ணில் பட்டது. அதன் மீது அந்தப் புத்தகத்தை வைத்து விட்டு திரும்பினாள் பூபதி. அப்பொழுது அப்பெட்டியின் மீது கிடக்கும் அப்புத்தகம் 'டாக்டர் அம்பேத்தார் வாழ்க்கை வரலாறு'' என்பதை உறுதியாய்ப் பிரதிபலித்தது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.