"நாட்டுப்பற்றாளர் "ஊடகர் திரு.பு.சத்தியமூர்த்தி அவர்கள்.!


ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட்டு 12-02.2022 உடன்   #13ம் ஆண்டுபூர்த்தி கொள்கின்றது.


தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ஊடகப் பணியினை தொடங்கினார்.


மட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட அவர் தந்தையின் பணி நிமிர்த்தம் யாழ்ப்பாணம் மண்டதீவில் வசித்து தனது ஆரம்பம் முதலான கல்வியைத் தொடர்ந்தார். யாழ். இந்துக்கல்லூரி மாணவரான அவர் மாணவப் பருவத்தில் இருந்தே எழுதும் பணியினை மேற்கொண்டு வந்த அவர் 1995 இன் பின்னர் யாழ். இடப்பெயர்வுடன் தனது பல்கலைக்கழக வாழ்க்கையை இடைநிறுத்த வேண்டிய சூழலை எதிர்கொண்டார்.


ஒரு ஊடகன் என்ற காரணத்தினால் அன்றைய தனது மேலதிக கல்வியை நிறுத்திக் கொண்ட அவர் வன்னியில் ஊடகங்களின் பங்களிப்பில் முனைப்புக் காட்டினார். ஆரம்பத்தில் ஈழநாடு பத்திரிகையிலும், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் ஆதாரம் சஞ்சிகையிலும் தனக்கான பங்களிப்பினைச் சரியாகப் பயன்படுத்தி பணியாற்றினார்.


கால ஓட்டத்தில் முல்லைமாவட்ட கல்வித் திணைக்களத்தில் பணியாற்றிய அவர் அதன் மூலமும் ஊடகச் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு முனைந்தார். அந்தக் காலப்பகுதியில் அவர் புதுக்குடியிருப்பைத் தளமாகக் கொண்டு செயற்பட்ட எழுகலை இலக்கியப் பேரவையில் முக்கிய செயற்பாட்டாளர்களாக அன்று விளங்கிய இளம் படைப்பாளர்களுடனும், ஆர்வலர்களுடனும் கைகோர்த்து அந்த அமைப்பின் வளர்ச்சியில் கூடுதல் பங்காற்றினார்.


இந்த நிலையில் எழுவின் ஆலோசனையுடன் எழு கலை இலக்கியப் பேரவை, ஈழநாதம் மக்கள் நாளிதழ், மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் துணையுடன் முல்லைமாவட்ட கல்வித் திணைக்களத்தின் முறைசாராக் கல்விப் பிரிவினால் இதழியல் கற்கை நெறி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தக் கற்கை நெறியின் போது வன்னியில் செயற்பட்டுவந்த பல்வேறு ஊடகத்துறைசார் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு பயிற்சிகளை வழங்கிவந்தனர். அந்தக் கற்கை நெறியில் பெருமளவான படைப்பாளர்களும், ஊடகச் செயற்பாட்டாளர்களும் வெளிவந்தனர்.


அவ்வாறானவர்களில் ஒருவராக பு.சத்தியமூர்த்தியும் தன்னைப் புடம் போட்டு இன்னமும் மெருகேற்றி வெளியேறினார். அந்தக் கற்கை நெறியினை முன்னெடுப்பதற்கான முழுமையான முனைப்பில் கல்வித்திணைக்களம் ஈடுபடுவதற்கான ஏற்பாட்டினை அவரே மேற்கொண்டிருந்தார்.


அதே காலப்பகுதியில் வன்னியில் இருந்து வெளிவந்த கலைபண்பாட்டுக் கழகத்தின் வெளிச்சம் கலை இலக்கிய சஞ்சிகை, மற்றும் ஈழநாதம் உட்பட்ட ஊடகங்களின் முக்கிய இடத்தினை சத்திய மூர்த்தியினுடைய படைப்புக்கள் பெற்றிருந்தன. அதன் பின்னர் சுகாதாரத் திணைக்களத்தில் பணியாற்றிய பு.சத்தியமூர்த்தியினுடைய ஊடகப் பணியானது புலம் பெயர் மக்களை நோக்கி விரிவடைந்தது. அரசியல் விமர்சனங்களை மேற்கொள்ளும் அவர் இலக்கியத்திலும் தன்னாலான பங்களிப்பினை மேற்கொண்டார்.


🔴விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் கீழ் செயற்பட்ட ரீ.ரீ.என் – (தமிழ் ஒளி), தரிசனம் தொலைக்காட்சிகளுக்கான நாளாந்த செய்திப்பார்வைத் தொகுப்பு, அரசியல் கலந்துரையாடல்கள், உள்ளுர் நடப்புக்கள் உட்பட்ட நிகழ்ச்சிகளை முன்னெடுத்த அவர் குறுகிய காலத்தில் புலம்பெயர் தமிழர்களால் நன்கறியப்பட்ட ஒருவராக மாற்றம் பெற்றார். இதே காலப்பகுதியில் அனைத்துலக தொடர்பகத்தின் கீழ் செயற்பட்ட இணையத்தளம் ஒன்றின் செய்தி தொகுப்பாளராகவும் செயற்பட்ட அவர் புலம் பெயர் ஊடகங்கள் பலவற்றிற்கும் எழுதிவந்தார். குறிப்பாக பரிஸ் ஈழமுரசு, எரிமலை சஞ்சிகை, கனடாவின் உலகத்தமிழர் பத்திரிகை உட்பட்ட பல ஊடகங்களில் இவரது பல்வேறு படைப்புக்கள் இடம்பெற்றிருந்தன.


அதேபோல தாயகத்தில் வெள்ளிநாதத்திலும், ஈழநாதத்திலும் குறிப்பிட்ட அளவான இவரது படைப்புக்கள் வெளிவந்தவண்ணமே உள்ளன. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் நாள்நோக்கு மற்றும் நிலவரம் நிகழ்சிகளில் இவரது செவ்விகள் அடிக்கடி இடம்பெற்றன. தாயகத்தில் ஊடக வளர்ச்சியினை இன்னும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் ஊடக அறிவியல் கல்லூரியின் தோற்றம் முதல் அதன் இறுதிக் காலம் வரையில் அவரது கல்லூரிக்கான பணி ஓயாதே இருந்தது. கல்லூரியின் கற்கைநெறியின் போது செய்தி தொடர்பிலான விரிவுரைகளாகவே அவரது பணி அமைந்திருந்தது.


வன்னியில் நடைபெற்ற அரசியல் சந்திப்புக்களின் போது பு.சத்தியமூர்த்தி நேரடியாகவே செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார். தனது பார்வையில் சரி எனப்பட்டதை எடுத்து வெளிப்படுத்துவதில் அல்லது அது தொடர்பில் விவாதிப்பதில் அவர் என்றும் பின்நின்றதில்லை. சமாதான காலத்தின் பின்னான பல சஞ்சிகைகள் வெளியீடுகள் வன்னியிலும், புலம் பெயர் தளத்திலும் அதிகமாக முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக போராளிகளுக்கான வழிகாட்டி, மற்றும் குறிப்பிட்டகாலம் மாணவர்களுக்காக வெளியாகிய கடுகு உட்பட்ட சஞ்சிகைகள் என்பனவற்றிலும் இவரது படைப்புக்கள் தொடராக வெளிவந்தன. பத்திரிகை முதல் தொலைக்காட்சி வரையான அவரது பரந்துபட்ட ஊடக அனுபவம் அவரிடம் நிறைந்தே காணப்பட்டது. பு.சத்தியமூர்த்தி மற்றும் சிந்துஜன் ஆகிய பெயர்களில் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றன.


கிளிநொச்சியில் அறிவியல் நகர்ப்பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து இடம்பெயர்ந்து படிப்படியாக ஒவ்வொரு இடமாக அவர் தனது பணி இடத்தினைச் சார்ந்தே குடியமர்ந்து வந்தார். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நெருக்கடியான காலத்திலும் ஒதுங்கிவிடாமல் ஊடகப்பணியினை ஆற்ற வேண்டும் என்ற வேட்கை அவரிடம் இருந்தததை அவதானிக்க முடிந்தது. இந்த நிலையில் இடப்பெயர்வின் தொடராய் வள்ளிபுனத்தில் இருந்து தனது குடும்பத்தினரை இரணைப்பாலை என்ற இடத்தில் இருத்திவிட்டு வள்ளிபுனம் பகுதிக்குச் சென்ற வேளை எறிகணைத் தாக்குதலுக்கு உட்பட்டு அவரது உயிர் பிரிந்தது. உடனடியாகவே தமிழீழ விடுதலைப்புலிகளால் அவர் நாட்டுபற்றாளராக மதிப்பளிக்கப்பட்டார்.


நாளை நானாக இருப்பேன் என்று சொன்னவர் இன்று போய் விட்டார்


🔴அவரின் ஒரு உருக்கமான பதிவு


அவரது நினைவு நிகழ்வுகள் புலம்பெயர் தேசமெங்கும் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவருக்கான எந்த ஒரு வணக்க நிகழ்வினையும் இன்றுவரையில் தாயகத்தில் நிகழ்த்தவில்லை என்ற சோகம் அல்லது துயர் இன்னமும் ஆற்றுப்படுத்த முடியாது உள்ளது. குறிப்பாக வன்னியில் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்தவிடயம் ஊடகவியலாளர்கள் இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளிலோ அல்லது தாயகப் பகுதிகளிலோ கொல்லப்படுகின்றபோது அவர்கள் தொடர்பான நிகழ்வுகளை வன்னிப் பகுதியில் நிகழ்த்தி முடிப்பதில் பு.சத்தியமூர்த்தி தீவிரமாக செயற்படுபவர் என்பது. அவரது மனைவி கமலநந்தினி, அவர் தனது சகோதரன் மாவீரர் சிந்துஜன் நினைவாக தனது மகளுக்கு சிந்து எனப் பெயரிட்டார். தனது மகளை ஒரு ராஜதந்திரி ஆக்கவேண்டும் என்பதே தனது ஆவல் என அவர் அடிக்கடி கூறுவதுதான் அவரது சுட்டி மகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் நினைவில் நிழலாடுகின்றது.


வன்னியில் ஊடகப்பணியில் தம்மை வெறுத்து சொற்களுக்குள் அடக்க முடியாத பணியாற்றிய பல ஊடகர்கள் தொடர்பில் இதுவரையில் வெளித்தெரியாத செய்திகளே உள்ளன. அவர்கள் ஒவ்வொருவரும் ஆற்றிய பணிகளும், நண்பர் சத்தியமூர்த்தி ஆற்றிய பணிகளும் வீண் போகுமா? அவர்களுக்கான அவர்களின் அர்ப்பணிப்புக்களுக்கான பலன் கிடைக்குமா? காலமே நீ பதில் சொல்வாய்..


சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக தமிழீழ விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.


🔴இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை அன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


சிறிலங்கா அரசாங்கம் தமிழினத்தின் மீது நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கையில் அது மேற்கொண்டு வரும் கருத்து ஆக்கிரமிப்பை உடைக்கும் தமிழ்த் தேசிய ஊடகப் பணியில் தாயகத்தில் இருந்து திறம்பட செயற்பட்டவர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி.


தாயகத்தின் ஊடகங்களில் தனது தமிழ்த் தேசிய ஊடகப்பணியை தொடக்கிய பு.சத்தியமூர்த்தி புலம்பெயர் தளத்தில் வாழ்ந்து வரும் மக்களிடம் தமிழ்த் தேசியக் கருத்தை வளர்த்தெடுக்கும் ஊடகப்பணியை தாயகத்தில் இருந்து செய்து வந்தார்.


புலம்பெயர் தளத்தில் விடுதலைப் போராட்டம் பற்றியும் தமிழ்த் தேசியக் கருத்தையும் தனது ஊடகப்பணி ஊடாக பு.சத்தியமூர்த்தி செய்து வந்தார்.


தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தனது ஊடகப்பணியை நெருக்கடிகள் இடம்பெயர்வுகள் அவலங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து மேற்கொண்டு வந்த அவரின் உயிரை சிங்களப் பேரினவாதம் பறித்துள்ளது.


தமிழ்த் தேசிய ஊடகப்பணியை திறம்படச் செய்து வந்த பு.சத்தியமூர்த்தி தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.