தமிழ் கலைத்திறன் போட்டியின் 2022ஆம் ஆண்டுக்கான போட்டி-யேர்மனி!!

 தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டியின் 2022ஆம் ஆண்டுக்கான போட்டியின் தொடராகத் தென்மாநிலத்துக்கான போட்டி கடந்த வாரம் 12.03.2022 ஸ்ருட்காட் நகரிலும், 19.03.2022 அன்று மத்தி மற்றும் வடமத்திய மாநிலங்களின் பகுதி இரண்டிற்கான போட்டி முன்சன்கிளட்பாக் நகரிலும் 08:30மணிக்கு மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயகீதம் என்பவற்றைத் தொடர்ந்து தெரிவுசெய்யப்பட்ட கலைவடிவங்களுக்கான போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.

கோலாட்டப் போட்டியோடு தொடங்கி விடுதலை நடனப் போட்டியோடு நிறைவுற்ற கலைத்திறன் போட்டி, தொடங்கியதிலிருந்து நிறைவுவரை மண்டபம் நிறைந்த பார்வையாளர்களோடு வில்லிசை, நாடகம், காவடி கரகம் பொய்க்காற்குதிரை, விடுதலை நடனங்;களில் ஆண்,பெண்,நுண்கலை என ஆடற்கலை வடிவங்களோடு அரங்கு ஒன்றித்திருக்கப் போட்டிகள் விறுவிறுப்போடு அரங்காற்றியமை சிறப்பு. அதேவேளை பகுதி ஒன்றாகப் பிரித்து நடாத்தப்பபட்ட மத்தி மற்றும் வடமத்திய மாநிலங்களின் வாய்ப்பாட்டு மற்றும் விடுதலைப் பாடற்போட்டிகளிலே முதல் மூன்று நிலைகளைத் பெற்ற வெற்றியாளருக்கான அரங்காற்றுகைக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலே பெரும்பாலான வெற்றியாளர்கள் விடுதலைகானங்களை விருப்போடு பாடியமைக் காணமுடிந்ததோடு, சிறுவர், சிறுமிகளாகப் பதிவுசெய்யப்பட்ட பின்னணி இசைக்கு ஈடுகொடுத்துப் பாடுவதென்பது ஒரு வளர்முகமென்பதில் ஐயமில்லையெனலாம்.

போட்டியிற் பங்கேற்ற ஒவ்வொரு மாணவருக்கும் பங்கேற்புக்கான மதிப்பளிப்பு வழங்கப்பட்டதோடு, நிறைவாக முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய தமிழாலயங்களுக்கான பாராட்டும் வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்பும் நடைபெற்றது. நடுவர்களுக்கான மதிப்பளிப்புடன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் வாழ்த்துரையும் இடம்பெற்றது.

நிறைவாகக் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்களின் நன்றியுரையை அடுத்து, தமிழினத்தின் நம்பிக்கையைப் பறைசாற்றிப் போட்டியரங்கம் விடைபெற்றது.


கலைத்திறன் போட்டி 2022இற்கான தென்மாநிலப்போட்டியிலே, ஸ்ருட்காட் தமிழாலயம் முதலாம் இடத்தையும், லுட்விக்ஸ்பேர்க் தமிழாலயம் இரண்டாம் இடத்தையும், நூர்ன்பேர்க் தமிழாலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொள்ள, மத்திய மாநிலப்போட்டியிலே, முன்சன்கிளட்பாக் தமிழாலயம் முதலாம் இடத்தையும் நொய்ஸ் தமிழாலயம் இரண்டாம் இடத்தையும் வூப்பெற்றால் தமிழாலயம் மூன்றாம் இடத்தையும் தமதாக்கிக் கொள்ள, வடமத்திய மாநிலத்திலே, வாறன்டோர்வ் தமிழாலயம் முதலாம் இடத்தையும் எசன் தமிழாலயம் இரண்டாம் இடத்தையும் றைனே தமிழாலயம் மூன்றாம் இடத்தையும் தமதாக்கிக் கொண்டன. அதேவேளை, புள்ளிகளின் அடிப்படையில் யேர்மன் தழுவிய மட்டத்தில் ஸ்ருட்காட் தமிழாலயம் முதலாம் இடத்தையும், பாட்சுவல்பாக் தமிழாலயம் இரண்டாம் இடத்தையும், வாறன்டொவ் தமிழாலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. மாநில மட்டத்திலும், யேர்மன் தழுவிய மட்டத்திலும் முதல் மூன்று நிலைகளைப்பெற்ற தமிழாலயங்களுக்கும், தமிழ்க் கல்விக் கழகத்தின் 32ஆவது அகவை நிறைவு விழா அரங்கிற் சிறப்பாக மதிப்பளிக்கப்படவுள்ளன. வடமாநிலத் தமிழாலயங்கள் தொற்றுநோய்ப் பரவலச்சம் கரணியமாகப் பங்குபற்றாமையினாற் போட்டி நடைபெறவில்லை.

போட்டியிற் பங்குபற்றிய, பாராட்டி மகிழ்ந்த தமிழாலயங்களின் பெற்றோர், ஆசிரியர்கள், நிர்வாகக் குழுவினர் என அனைவரதும் கூட்டு முயற்சி பாராட்டுதற்குரியதாகும். கொரோனாவினுள் முடங்கியிருக்காது முயற்சியே வெற்றிக்கான முதற்படியெனத் தமிழாலயங்களின் பெற்றோர், மாணவர், ஆசிரியரென ஒன்றிணைந்து அணியம் செய்தமையின் அறுவடையாகக் கலைத்திறன் 2022உம் பதிவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.