பஸ் போன பிறகு கை காட்டும் வேலை!

 


அரசின் சர்வகட்சி மாநாடு, பஸ் போன பிறகு கை காட்டும் வேலை ஆகும் என கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த அவர், இன்றைய அரசாங்கம், ஆரம்பம் முதல் இன்று வரை ஒரு தீர்மானத்தை கூட உரிய நேரத்தில் எடுக்கவில்லை. இன்று நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து நிற்கின்றது. முழு நாடும் கருப்பு சந்தையாக மாறி இருக்கின்றது. மொத்த பொருளாதாரமும் மீள கட்டியெழுப்ப முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது. இந்நிலைமை ஏற்படாமல் இருப்பதற்கு அரசாங்கத்திடம் பல மாதங்களுக்கு முன்னரே பல வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. செவிமடுக்கவில்லை. தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டது. இன்று சர்வகட்சி மாநாட்டை கூட்டுவது, பஸ் போன பிறகு கைக்காட்டும் வேலையாகும்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு செய்யக்கூடிய அனைத்து மோசமான நடவடிக்கைகளையும் செய்துவிட்டனர். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு, 2000 பில்லியனுக்கு அதிகமான பணம் அச்சிட்டுவிட்டனர். அதுவே ரூபாவின் கொள்வனவு சக்தியை வீழ்த்திவிட்டது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதியை ரூபா 200 ஐ விட அதிகரிக்க விட மாட்டோ என்று அடம் பிடித்தனர். பொருளாதார நிலைமைகளை மீறி கட்டுப்படுத்தினர். அதன் மூலம் தங்களை சுற்றியுள்ளவர்களுக்கு லாபம் உழைக்க வழிசமைத்து கொடுத்தனர். இதனால், மேலும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. டொலர் பிரச்சினை மேலும் நெருக்கடிக்கு உள்ளானது. கடன் சுமையை மீள கட்டமைக்குமாறு கேட்டோம். அதனையும் செய்யவில்லை. இன்று அனைத்தையும் முடித்துவிட்டு சர்வ கட்சி மாநாடு என்கிறார்கள். இதுவும் ராஜபக்ஸக்களின் வெறும் மூடி மறைப்பு நாடகமே ஆகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.