மக்களிடம் 20ம் திருத்தத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்

  


20ஐ அகற்றிக்கொண்டு 19ன் அம்சங்களை  உள்வாங்கி 21ம் திருத்ததை கொண்டுவர அரசு இணங்கியுள்ளதாக இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்தார். இந்நிலையில் 20ம் திருத்திற்கு ஆதரவாக கையை உயர்த்தி, ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு அதீத அதிகாரங்களை கொடுத்து, அதை நியாயப்படுத்தியும் பேசிய எம்பீகள், அதே கைகளை உயர்த்தி வாக்களித்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைமை இன்று உருவாகிவிட்டது.  இவ்வளவு சீக்கிரம் கோதாபய ராஜபக்சவின் சர்வதிகாரம் வீழும் என இவர்கள் கற்பனையிலும் நினைத்து இருக்க மாட்டார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி - தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். 

இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,   

இன்று பாராளுமன்ற வாளாகத்தில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில், 20ஐ அகற்றவும், 19ன் அம்சங்களை  உள்வாங்கி 21ம் திருத்த வரைபு ஒன்றை பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கவும் அரசாங்கம் தயார் என சபை முதல்வர் தினேஷ் குணவர்தன அறிவித்தார். இதை பிராதன எதிர்கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளோம். 

முழுமையாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்றும் யோசனையும் தனக்கு கிடைத்ததாக சபாநாயகர் கட்சி தலைவர்களுக்கு  கூறினார். எனினும் முழுமையாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமை அகற்றப்பட சர்வஜன வாக்கெடுப்பு நடத்திட வேண்டிவரும் என்பதால்,  அதற்கு நாடு இன்றைய சூழலில் தயார் இல்லை என்பதால்,  முழுமையாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை  தற்சமயம் அகற்ற பெரும்பாலான கட்சி தலைவர்கள் ஆதரவு வழங்கவில்லை.  

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்றப்பட்டால், விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்த மாகாணசபைகள் ஆகியவற்றையும்  அகற்ற வேண்டி வரும் என சில ஆளும்கட்சி பிரதிநிதிகள் அபிப்பிராயம் தெரிவித்தார்கள். இது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஏற்புடைய நிலைப்பாடுகள் இல்லை. தமது நிலைப்பாடும் இதுவே என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் நண்பர் ரிசாத் பதுர்தீன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் என்னிடம் தெரிவித்தார்கள்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.