குழந்தைகளிடத்தில் பரவும் மர்ம நோய்!

 


உலகம் முழுவதும் குழந்தைகளை மட்டும் குறிவைக்கும் மர்ம ஹெபடைடிஸ் நோய் ஒன்று பரவிவரும் நிலையில், தற்போது அது கனடாவுக்குள்ளும் நுழைந்துள்ளது.

பொதுவாக ஹெபடைடிஸ் என்னும் நோய், A, B, C, D அல்லது E வகை ஹெபடைடிஸ் வைரஸ்களால் உருவாகும். ஆனால், இம்முறை உலக நாடுகள் பலவற்றில் பரவி வரும் இந்த மர்ம ஹெபடைடிஸ், மேற்குறிப்பிட்ட எந்த வைரஸாலும் உருவாகவில்லை.

பிரித்தானியா, அமெரிக்கா உட்பட உலகின் 14 நாடுகளில் பரவி, சுமார் 200 சிறுபிள்ளைகளைத் தாக்கியுள்ள இந்த ஹெபடைடிஸ் எதனால் பரவுகிறது, அல்லது எந்த வைரஸ் இந்த நோயை உருவாக்குகிறது என்பதை அறியாமல் மருத்துவ உலகம் குழம்பிப்போயுள்ள நிலையில், இந்த மர்ம நோய்க்கு ஒரு குழந்தை பலியாகியுள்ளதுடன், 17 குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்படவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

கனடாவின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்த மர்ம நோய் பிரித்தானியாவிலும், அமெரிக்காவிலும் பரவிவரும் ஹெபடைடிஸுடன் தொடர்புடையதா என்பதை அறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கனடாவில் இந்த மர்ம நோயால் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில், இந்த மர்ம நோய் குறித்து அறிவியலாளர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பொதுமுடக்கத்தில் இருந்ததால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டு, அதனால், சாதாரண ஜலதோஷத்தை உருவாக்கும் அடினோவைரஸ் என்னும் வைரஸே இந்த நோயை உருவாக்கியிருக்கலாம் என்றும், ஒரே நேரத்தில் குழந்தைகள் கோவிட் மற்றும் அடினோவைரஸால் பாதிக்கப்பட்டதால் இந்த ஹெபடைடிஸ் உருவாகியிருக்கலாம் என்றும் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.