பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

 


பரீட்சையின் போது சகோதரனுக்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.


நாடு பூராகவும் கல்வி பொது சாதாரண பரீட்சை திங்கட்கிழமை (23) ஆரம்பித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை ஒன்றிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய குறிப்பிட்ட தனிப்பட்ட பரீட்சார்த்தி தூர இடமொன்றில் இருந்து வருகை தந்துள்ளதுடன் சமயபாட பரீட்சையை சகோதரனுக்கு பதிலாக எழுதியதுடன் தனது அடையாள அட்டையின் புகைப்படத்தை மாற்றியுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் இச்சம்பவத்தில் ஒரு முக தோற்றமுடைய இரண்டு சகோதரர்களும் தத்தமது அடையாள அட்டையில் மாற்றம் செய்து இந்த ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் 32 வயதுடைய தனது சகோதரனுக்கு பதிலாக 28 வயதுடைய தம்பி முறையான சகோதரனே இவ்வாறு பரீட்சை எழுதி சிக்கியுள்ளார்.

மேலும் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் ஆள்மாறட்டம் செய்து பரீட்சை எழுதிய சந்தேக நபரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் பின்னர் மறுநாளான செவ்வாய்க்கிழமை (24) அன்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இரண்டு நாட்கள் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இச்சம்பவம் குறித்து உரிய தரப்பினரிடம் விசாரணைகளை கல்வி அதிகாரிகள் பெரிய நீலாவணை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.