நிலத்திலும் புலத்திலும் "கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்"📸

கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்" என்ற தொனிப்பொருளில் தமிழ் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளில் யேர்மன் தலைநகரம் பேர்லினில் உள்ள தமிழாலயத்தில் புலம்பெயர் மண்ணில் பிறந்த ஈழத்து 3. ம் தலமுறைச் சிறார்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு இன்றைய தினத்தில் (14.05.2022) இடம்பெற்றது. இவ் நிகழ்வில் மாணவர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் என அனைவரும் உணர்வுடன் கலந்துகொண்டனர்.

2009, தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட போரின் இறுதி நாட்கள் அவை. நாற்றிசையும் சூழ்ந்திருந்த இராணுவம் அப்பாவி மக்களின் தலைகளைச் சுட்டுச் சிதறடித்துக்கொண்டிருந்தது. அதுபோதாதென்று ஏவப்பட்ட எறிகணைகள் கொத்துக்குண்டுகள் மக்களின் பதுங்குகுழிகள் மீது கொத்துக் கொத்தாய் வீழ்ந்து வெடித்தன. பிணங்களும், விழுப்புண்ணடைந்தோர் கொதிக்கும் குருதியுமாக முள்ளிவாய்க்கால் எனப்படும் ஈழ அவலநிலம் காட்சிதந்தது.
விடுதலையை அவாவிய ஒரு தேசத்தின் மக்களை மரணமும் பசியும் சூழ்ந்திருந்தது. பணத்திற்கு எந்த பெறுமதியும் இருக்கவில்லை, வாங்குவதற்கு எந்த உணவுப்பொருளும் இருக்கவில்லை.
இந்நிலையில்தான், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் சில தொண்டு நிறுவனங்களும் இணைந்து, வன்னி வன்னி பெருநிலப்பரப்பின் சொந்தக்காரர்களுக்கு அவர்தம் உயிர் பிழைப்புக்கென முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்கிற ஜீவாமிர்தத்தை அறிமுகப்படுத்தினர். நீரினுள் சிறிதளவு அரிசியையும் கிடைத்தற்கரிய உப்பையும் இட்டு காய்ச்சி உருவாக்கப்பட்டதே இவ்வுணவு.
சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் போன்றோர் வெறும் வயிற்றுடன் கஞ்சியினைப்பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த காத்திருப்பின்போதுகூட கொத்துக்குண்டுகளாலும் விமானத் தாக்குதல்களாலும் பல்லாயிரம் உயிர்கள் காவுவாங்கப்பட்டன. காத்திருந்து காத்திருந்து கையில் வாங்கிய கஞ்சியை, ஒரு மிடறு பருகி வயிற்றில் தாங்கிய சிசுவின் பசியாற்றுவதற்கு முன்பே வயிறு கிழிந்து, இரத்தம் பீறிட குடலும் கருவும் வெளிச்சிதறி மாண்டுபோன பேரவலங்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியின் விரும்பத்தகாத சுவையாக எம் தலைமுறையின் நனவிலியில் பதிந்துள்ளது.
நீதிகேட்டுப் போராடும் எம்மக்களின் அவலக்குரல்களை இந்த உலகம் செவிமடுக்கும் நாள்வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி' பெருவலியாகவும், அடையாளமாகவும் உணர்த்தப்படவேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகும்.
உணர்வுபூர்வமான இப்பெரும் மக்கள் எழுச்சியின் போராட்ட வழிமுறைகளில் 'முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வரலாற்றில் என்றும் நிலைத்தே நிற்கும்.







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.