கூலிப்படைகள் துடைத்தெறியப்பட வேண்டும்: முதல்வர்!


 தமிழகத்தில் கூலிப்படைகள் துடைத்தெறியப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மே 10 ) காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

அப்போது பேசிய முதல்வ்ர் ஸ்டாலின், “இந்த ஆட்சியில் வன்முறைகள், சாதிச் சண்டைகள், மத மோதல்கள், துப்பாக்கிச் சூடுகள் , அராஜகங்கள் இல்லை. இதுதான் இந்த ஆட்சியின், உள்துறையின் மிக முக்கியமான சாதனையாக அமைந்திருக்கிறது

தமிழக மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கான அடித்தளத்தை, அமைத்துத் தந்துள்ளோம். இந்த அமைதியை உருவாக்கித் தந்தது, தமிழக அரசின் காவல்துறை. இன்றைக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் வெளி மாநிலங்களுக்குச் சென்ற தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு மீண்டும் திரும்பி வந்துகொண்டிருக்கிறது.

புதிய முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழ்நாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே அமைதியான, பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்ற நற்பெயர் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது.

தமிழக அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், இன்னொரு கை காவல்துறை. இந்த இரண்டும் முறையாக, சரியாகச் செயல்பட்டால், அந்த அரசாங்கம் தலைசிறந்த அரசாங்கமாகப் பெயர் பெறும்.

அந்த வகையில் காவல்துறைக்கு சில கட்டளைகளை நான் பிறப்பித்திருக்கிறேன். காவல்துறை என்பது குற்றங்களே நடக்காத சூழலை உருவாக்கித் தரக்கூடிய துறையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை, இந்த அரசின் கொள்கை.

குற்றங்கள் குறைய வேண்டும் என்பதைவிடக் குற்றமே நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாகக் காவல் துறை மாறவேண்டும். கொலை, திருட்டு, பாலியல் தொந்தரவு, போதை மருந்துகள், வன்முறைச் சம்பவங்கள் ஆகியவை தான் மிகப்பெரிய குற்றங்கள். இவை எந்தச் சூழலிலும் நடைபெறாத வகையில் காவல்துறை திட்டமிடுதல் வேண்டும். எந்தச்சூழலிலும் பொதுமக்களுக்கு அச்சம் தரக்கூடிய சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அரசியல் ரீதியாகவோ, மதம் மற்றும் சாதி காரணமாகவோ வன்முறைகள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படித் திட்டமிட்டு அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் மோதல்களை உருவாக்க நினைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதேநேரத்தில் காவல்துறையை யாரும் கைநீட்டி குற்றம் சொல்லமுடியாத துறையாகவும் இருக்க வேண்டும்.

எங்கோ ஒரு காவலர் செய்யக்கூடிய தவறு, இந்த ஆட்சியின் தவறாகக் குற்றம்சாட்டப்படும். அவர் மீது நடவடிக்கை எடுத்திருந்தாலும், ஆட்சி மீதுதான் கறையாக அந்தச் சம்பவம் பேசப்படும். எனவே காவல்துறையைச் சேர்ந்த ஒவ்வொருவரும், விமர்சனத்துக்கு இடமில்லாமல் தங்கள் பணிகளைச் செய்ய வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும். எந்த திசையிலிருந்து அழுத்தங்கள் வந்தாலும், சிபாரிசு வந்தாலும் நீங்கள் சட்டத்தின் பக்கமே நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளும் தவறு செய்யக் கூடாது. தவறு செய்யும் அதிகாரிகளுக்கு இந்த அரசில் இடமில்லை.

போதைப் பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாவது கவலையளிக்கிறது. எனவே குட்காவைத் தடுத்து நிறுத்துங்கள். போதைப் பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள். எந்த போதைப் பொருள் நடமாட்டமும் தமிழகத்தில் இருக்கக் கூடாது.

கூலிப்படை வைத்துக் கொலை செய்த வழக்குகளை, விசாரணையை விரைந்து முடித்து, கூலிப்படைகளுக்கே முற்றுப்புள்ளி வையுங்கள். கூலிப்படை வைத்திருப்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள் முழுமையாகத் துடைத்தெறியப்பட வேண்டும்” என்று பேசினார்.

-பிரியா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.