யாழில் இராணுவத்தின் உதவியுடன் Gas விநியோகிக்க நடவடிக்கை!!

 யாழ். மாவட்டத்திலுள்ள சகல மக்களுக்


கும் தேவையான எரிவாயு வழங்கும் செயற்பாட்டிற்கு யாழ்ப்பாண மாவட்ட லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர் ஒத்துழைக்காவிட்டால் இராணுவத்தினரின் உதவியுடன் பொதுமக்களுக்கான எரிவாயுவினை விநியோகிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணத்தில் குடும்ப பங்கிட்டு அட்டைக்கு எரிவாயு விநியோகிக்க மாவட்ட செயலகத்தினால் முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் யாழ். மாவட்ட எரிவாயு பிரதான விநியோகஸ்தர் ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதன் காரணமாக இராணுவத்தினரின் உதவியுடன் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாரம் லிட்ரோ காஸ் நிறுவனத்தினரால் நாடு பூராகவும் எரிவாயு விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிவாயுவினை குடும்ப பங்கீட்டு அட்டைக்கு விநியோகிக்க முற்பட்டபோது யாழ்மாவட்ட லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனினும் எதிர்வரும் நாட்களில் பிரதேச செயலகங்கள் ஊடாக கிராம சேவையாளர்களின் ஒத்துழைப்புடன் குடும்ப அட்டை மூலம் எரிவாயு விநியோகம் இடம்பெறவுள்ளதாகவும், அதேவேளை எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் போது எரிவாயு விநியோகஸ்தர்களால் இடையூறு ஏற்படுத்தப்படும் என்பதை கருத்திற் கொண்டு இராணுவத்தினரின் உதவியினை பயன்படுத்தி குறித்த எரிவாயு சிலிண்டரை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட செயலக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-நிருபர் பிரதீபன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.