சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சிறுவர்களுக்கு விளக்கமறியல்

 


அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 16 வயது சிறுவர் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (31) உத்தரவிட்டார்.


அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள 11 வயதான சிறுமி ஒருவர் சம்பவதினமான கடந்த 23 ம் திகதி தனது குடும்பத்துடன் கடற்கரைக்குச் சென்றுள்ள நிலையில் இடைநடுவே குறித்த சிறுமியின் மூத்த சகோதரி வீடு செல்ல நேரிட்டமையினால், ஏனைய உறவினர்கள் கடற்கரையில் வீற்றிருக்க விளையாடிக் கொண்டிருந்த 11 வயதான சிறுமியை சகோதரியின் பாதுகாப்பிற்காக வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

தனது சகோதரியை வீட்டிற்கு கொண்டு சென்று விட்டுவிட்டு 11 வயதான சிறுமி தனிமையாக மீண்டும் கடற்கரைக்கு இரவு 10.30 மணிக்கு தனியாக திரும்பிக் கொண்டிருந்த போது வீதியின் இடைநடுவில் சிறுமியை இடைமறித்த இரு சிறுவர்களும் அவரின் வாயை கையினால் பொத்தி அருகில் உள்ள வீட்டிற்கு தூக்கி சென்று அங்கு ஒருவர் வெளியில் காவல் இருக்க மற்றையவர் அந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பின்னர் வீட்டிற்குள் ஒருவர் உள்வரும் சத்தம் கேட்டு அந்த சிறுமியை மிரட்டி யாரிடமும் சொல்ல வேண்டாம், மீண்டும் கூப்பிட்டால் வர வேண்டும் என தெரிவித்து சிறுமியை மதிலுக்கு மேலால் தூக்கிப் போட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்ததையடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் 16 வயதுடைய இரு சிறுவர்களையும் கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (31) அஜர்படுத்திய நிலையில் இருவரையும் எதிர்வரும் 15 ம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.