அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆற்றிய உரை!!

 


புலம்பெயர் தரப்பினருடனும், நாட்டின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சிவில் சமூக அமைப்புக்களுடனும் இணைந்து செயற்படுவதாக இலங்கை திறந்த நிலையில் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது அமர்வில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இந்த அமர்வு எதிர்வரும் ஜூலை மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.


இந்தநிலையில் நேற்று கருத்துரைத்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அண்மைய வாரங்களில் இலங்கை எதிர்கொள்ளும் பாரதூரமான சமூக மற்றும் பொருளாதார நிலைமையை சர்வதேச சமூகம் உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


சவால்களை அங்கீகரித்து, அனைவரையும் உள்ளடக்கிய முறையில் முன்னோக்கிச் செல்வதில், இளைஞர்கள் உட்பட மக்களின் அனைத்துப் பிரிவுகளினதும், அபிலாஷைகளுக்கு செவிசாய்ப்பது மிகவும் முக்கியமானதாக கருதுகிறோம்.


எதிர்காலத்திற்கான நிலையான அடித்தளமாக, பரந்த அடிப்படையிலான அரசாங்கத்தின் ஊடாக தேசிய பிரச்சினைகளுக்கு ஒருமித்த அணுகுமுறையை ஜனாதிபதியும் பிரதமரும் கோரியுள்ளனர்.


புதிய பிரதமரின் நியமனம் மற்றும் பல கட்சிகளை உள்ளடக்கிய புதிய அமைச்சரவையின் நியமனம் ஆகியவற்றுடன் அரசியல் மாற்றங்கள் ஏற்கனவே இடம்பெற்று வருகின்றன.


அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் தேவை, நாடாளுமன்றம், சுயாதீன நிறுவனங்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரங்களின் மீதான சரிபார்ப்பு மற்றும் சமநிலை ஆகியவற்றில் உள்ள அடிப்படை ஜனநாயக விழுமியங்களை ஒருங்கிணைப்பதற்காக, அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.


இந்த சீர்திருத்தங்கள் ஜனநாயக அரசியலமைப்புக் கட்டமைப்பிற்குள் மற்றும் உரிய நடைமுறைக்கு ஏற்ப நடைபெறுவதை கூட்டாக உறுதி செய்ய வேண்டும்.


மாற்றத்தின் செயன்முறையானது, வலுப்படுத்த விரும்பப்படும் ஜனநாயக அமைப்புக்களை அழிக்கக்கூடாது.


கருத்து வேறுபாடுகள் அமைதியானதாகவும், ஜனநாயக வெளிக்குள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.


அண்மைய இடையூறுகளின் போது, சட்டம் மற்றும் பொது ஒழுங்கைப் பேணுவதற்காகவும் அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி விநியோகிக்க அனுமதிக்கும் ஒரே நோக்கத்திற்காகவும் வரையறுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, அவசரகால விதிமுறைகள் விதிக்கப்பட்டன.


மே 9ஆந் திகதி நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் அதன் பின்விளைவுகள் தொடர்பாக முழு அளவிலான விசாரணைகள், சட்டமா அதிபரின் முன்மாதிரி மற்றும் நேரடியான நீதித்துறை மேற்பார்வையின் கீழ் நடைபெற்று வருகின்றன.


இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இந்த சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


முன்னோக்கிச் செல்வதில், உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்காளிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் உரையாடுகின்றோம்.


பொருளாதாரத்தை மீண்டும் நிலையான அபிவிருத்திப் பாதையில் வைப்பதற்கும், உணவு, உரம், எரிசக்தி மற்றும் மருந்துகள் போன்ற தேவைகளை வழங்குவதற்கும் ஒரு ஒத்திசைவான கட்டமைப்பை ஒன்றிணைத்து வருகின்றோம்.


தற்போதைய சூழ்நிலை, எதிர்கால சீர்திருத்த நடவடிக்கைகள் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


எனவே, இந்த விளைவுகளைத் தணிப்பதற்கான இலக்கு சார்ந்த சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உறுதியாக உள்ளோம்.


மனித உரிமைகள் பிரிக்க முடியாதவை, ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்தவை என்பதை ஒரு முக்கிய நம்பிக்கையாக அங்கீகரிக்கின்றோம்.


ஒரு பரந்த சமூக சூழலில் குறைகள் மற்றும் சிக்கல்களைத் தீர்க்க முற்படுகையில், உள்நாட்டு செயன்முறைகள் மூலம் மோதலுக்குப் பிந்தைய ஒருங்கிணைப்பில் மேலும் உறுதியான முன்னேற்றத்தை நிரூபிப்பது கட்டாயமானதும், சவாலானதுமாகும்.


இந்த சபையுடன் செயலில் ஈடுபடுவதன் மூலம் அதைத் தொடர்ந்தும் மேற்கொள்வோம்.


சமீபத்திய சவால்கள் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், சில முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.


பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்து, அது நிறைவேற்றப்பட்டது.


இந்தத் திருத்தங்களின் ஒட்டுமொத்த விளைவு, தற்போதுள்ள சட்டத்தில் கணிசமான முன்னேற்றத்தையும், ஆழமான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இது இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் மனித சுதந்திரங்களுக்கான காரணத்தை மேலும் அதிகரிக்கும்.


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்வதில் உரிய நடைமுறையைப் பின்பற்றுமாறும், மிகவும் அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துமாறும் சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளுக்கு காவல்துறைமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.


இந்த சபையின் கடைசி அமர்வுக்குப் பின்னர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 22 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், அதன் சரிபார்ப்பு செயன்முறையின் ஒரு பகுதியாக, விசாரணைக் குழுவிற்கு அழைக்கப்பட்ட 83 சதவீதத்துக்கும் அதிகமான நபர்களை சந்தித்துள்ளது.


இழப்பீடுகளுக்கான அலுவலகம், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஆண்டுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்காக, அதன் ஆரம்ப ஒதுக்கீடான 759 மில்லியன் ரூபாவுக்கும் மேலதிகமாக, 53 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.


மோதலின் முடிவில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 92 சதவீதத்துக்கும் அதிகமான தனியார் நிலங்கள் முறையான உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.


மீதமுள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்த 8 ஆயிரத்து 90 மக்களை மீள்குடியேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.


உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக, சட்டமா அதிபர் உயர் நீதிமன்றங்களுக்கு பல குற்றப்பத்திரிகைகளை அனுப்பியுள்ளதோடு, அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


இலங்கையின் சவாலான சமூக மற்றும் பொருளாதார நிலைமை குறித்து இந்த சபையின் புரிதலை நாடுகின்றோம்.


எமக்கு முன்னால் உள்ள பல பணிகளில் ஈடுபடவும், சட்டபூர்வமான கடமைகளை மதிக்கவும் உறுதியளிக்கின்றோம்.


சவால்களை அதிகமாகவோ அல்லது ஒடுக்கப்படாமலோ அங்கீகரிப்பதே எமது அணுகுமுறையாகும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.