இளம் குடும்பப் பெண் வன்புணர்வு

 


நாவலப்பிட்டி இகுரு ஓயா அதிதுஷ்கர பிரதேசத்தில் வீட்டில் தனித்திருந்த இளம் குடும்பப் பெண் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

அந்த கிராமத்திற்கு போக்குவரத்து வசதியின்மையால் நள்ளிரவில் 5 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று அவரை மீட்ட பொலிசார், புகையிரதத்தை வழிமறித்து அதில் பெண்ணை ஏற்றி, நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

நாவலப்பிட்டியில் இருந்து இருபத்தி இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இந்தப் பகுதிக்கு செல்லும் இங்குரு ஓயா பாலம் கடந்த மழையில் உடைந்ததால் நடந்தே செல்ல வேண்டியுள்ளது.

36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான இவரின் கணவர் இராணுவ சிப்பாய் எனவும் அவர் வெளிமாகாணத்தில் பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவரது 13 வயது மகனும், 7 வயது மகளும் பாடசாலைக்குச் சென்ற பின்னர், ​​அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார். அவர் இராணுவத்தில் இருந்து தப்பியோடி வந்தவர் என பொலிசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுடன், கணவனின் தாயாரும் வசிக்கிறார். அன்று அவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் கிளினிக்கிற்குச் சென்றிருந்தார்.

சந்தேக நபர் தனது மகனுடன் பெண்ணின் வீட்டிற்கு வந்து, நோட்டம் பார்த்துள்ளார். பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து, மீண்டும் தனிமையில் வந்துள்ளார். சாப்பாடு தருமாறு கூறி வீட்டிற்குள் நுழைந்தவர், அந்த பெண்ணை வீட்டின் ஒரு அறைக்கு இழுத்துச் சென்றுள்ளார். அவரின் பிடியிலிருந்து பெண் தப்பியோடிய போதும், மீண்டும் அவரிடம் சிக்கியதாக பொலிசாரிடம் கூறியுள்ளார்.

அவர் கடுமையான பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கப்பட்டு, பாதிக்கப்பட்டார்.

சம்பவத்தின் பின்னர் சந்தேக நபரின் அச்சுறுத்தல்களாலும், போக்குவரத்து வசதி இல்லாததாலும் ஊரை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

மாலையில், கணவனின் தாயார் வந்த பின்னர் விடயத்தை தெரிவித்துள்ளார்.

கணவனின் தாயார் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, பொலிசார் நள்ளிரவில் நடந்து அந்த வீட்டையடைந்தனர்.

ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை நடந்து அழைத்து செல்ல முடியாத நிலையில், பொலிசார் மாற்று ஏற்பாடு செய்தனர்.

பதுளை நாவலப்பிட்டி புகையிரத பாதை இப்பகுதியினூடாக செல்வதால், புகையிரத திணைக்களத்துடன் இணைந்து பொலிஸார் புகையிரதத்தை இடைநிறுத்தி பெண்ணை அதில் ஏற்றி கலபொட புகையிரத நிலையத்திற்கு அழைத்துச் சென்று நாவலப்பிட்டிக்கு திரும்பியுள்ளனர்.

சம்பவத்தின் பின்னர், தோட்டத்தின் காட்டில் கைவிடப்பட்ட கட்டிடமொன்றில் மறைந்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நாவலப்பிட்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.