என் மனைவி - கவிதை!!
ஆழ்ந்த உறக்கத்தில்
அமைதியாக உறங்கும்
என் மனைவியை சற்று
அமைதியாக கூர்ந்து பார்க்கிறேன்...
இத்தனை வருட வாழ்வில்
அவள் ஆசைகள் என்ன
என்பதைக் கூட
அறியாத ஆண்மகனாக
நான்... இருப்பதை நினைத்து
முதன் முதலாக
என்னையே வெறுக்கிறேன்...
என் கையைப் பற்றி
என்னோடு வாழ வருகையில்
அவள் ஒரு வளர்ந்த குழந்தையாகவே
எனக்குத் தெரிந்தாள்..
விட்டு வைத்தேனா?
இளமையின் மிடுக்கில்
தடுக்கி விழுந்த இரவுகளில்
முனகல்களோடு
என்னை அணைத்துக் கொள்வாள்.
வாலிபத்தின் திமிரில்
அவளின் வலிகளை
உணர்ந்ததில்லை நான்
எப்பொழுது பசித்தாலும்
உணவு தயார் பண்ணி
என்னை உபசரித்து மகிழும்
அவளின் பசியறியாமலே
புசித்திருக்கிறேன்...
கோபங்கள் எழும் போதெல்லாம்
வார்த்தைகளால் வைதிருக்கிறேன்..
திருப்பி ஒரு நாளேனும்
என்னை திட்டியதில்லை அவள்..
திட்டி இருந்தால் திருந்தியிருப்பேனோ..
ஏனடி எல்லா வலிகளையும்
உனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாய்..
மெதுவாக அவள் கைகளை எடுத்து
என் கண்ணில் ஒற்றிக் கொள்கிறேன்..
கரடு முரடான
அவள் கைகளின் கீறலில்
என் கண்களில் நீர்..
வலி .... கை பட்டதால் அல்ல..
மென்மையான அவள் கைகள் இன்று
கரடு முரடான காரணம் நினைத்து..
எங்கே இருந்தேன் இத்தனை நாளும்
என்னருகிலேயே இருந்தவளை
இத்தனை நாளும் எப்படித் தொலைத்திருத்தேன்..
பாவியம்மா நான்..
பருவ வயதுகளில் உன்னை
தூங்க விடவில்லை நான்....
பின் நான் பெற்றதுகளும்
உன் நாத்தனார்களும்..
செல்வமே
அத்தனை சொத்துக்கள் சேர்த்த
எனக்கு..
கிடைத்த சொத்து உன்னை
பாதுகாக்க மட்டும் எப்படி மறந்தேன்..
இத்தனை வருடமும்
உன் நிழல் கொண்டு
குடும்பம் காத்தவள் நீ
நாங்கள் அத்தனை பேரிருந்தும்
உனக்குள் அனாதை போல வாழ்ந்தவள் நீ
எப்படி மறந்தேன் உன்னை
நானில்லாத போதும்
நீ தைரியமாக கடந்து விடுவாய்
உன் இறுதி நாட்களை
நீயில்லாமல் என் வாழ்க்கை
நினைத்தும் பார்க்க முடியவில்லை
என்னால்..
தீர்க்க சுமங்கலியாகி
நீ முந்திக் கொண்டால்
ஊரே போற்றும் உன்னை..
உன்னைத் தொலைத்து விட்டு
நானிருந்தாலோ
ஏறெடுத்தும் பாரார் என்னை
நீ இருக்கும் வரையில் தான்
என் திமிரெல்லாம்...
சத்தியமாக சொல்கிறேன்
நீ மட்டும் போதுமடி எனக்கு
உன்னை விட எதுவும்
என்னை ஈர்க்காது இனிமேல்..
சாகும் வரையில் உன் காலடி போதும்
உன் மார்போடு
எனை அணைத்து தாலாட்டு போதும்..
படித்ததில் பிடித்தது
கருத்துகள் இல்லை