இருந்தாலும் மறைந்தாலும் வரி ஒன்றுதான்... !!!
வருவார் என்போர் சொல்லட்டும்
மறைந்தார் என்போரும் சொல்லட்டும்
எதுவாய் இருந்தாலும்
இறைவன் அவனேதான்
அப்படியே அவரை இருக்க விடுங்கள்...
துதி பாடிப் பாடியே
துரோகம் இழைத்தீர்கள்
தூரத்தில் இருந்து கொண்டே
யாவும் அடைந்தீர்கள்...
கதை பேசிப் பேசியே
காலம் கழித்தீர்கள்
கடைசி வரை அவரை
காப்பாற்ற மறந்தீர்கள்...
முகவரிகள் தெரியாமலே
முடிந்து போனோர் ஆயிரம்
முடமாகித் தெருவெங்கும்
அலைந்து போனோர் ஆயிரம்...
தொலை தூரம் போய் அலைந்து
தொலைந்து போனோர் ஆயிரம்
ஒரு வேளை உணவின்றி
உருக்குலைந்தோர் ஆயிரம்...
இதுவரைக்கும் இருந்த இடம்
இல்லாதோர் ஆயிரம்
இருப்பதற்கு ஏதுமின்றி
இருப்பவர்கள் ஆயிரம்...
அவனிருந்தால் அத்தனைக்கும்
ஆறுதல்கள் கிடைத்திருக்கும்
ஆகையினால் ஐயா வேண்டாம்
கொச்சைப் படுத்தாதீர்...
எதுவரைக்கும் போகுமென்று
எவருக்கும் தெரியாது
ஏறெடுத்துக் கேட்கின்றோம்
எங்களை விற்காதீர்... !!!
அவரை அப்படியே வாழ விடுங்கள்... !!!
கருத்துகள் இல்லை