உயிர்ப்பூ - ராம் பெரியசாமி!!
நீயென்னை காதலால்
ரட்சிக்கும் படி உனை
மன்றாடி வருகிறேன்
சிலுவைகள் போர்த்தாத தேவாலயம் ஒன்றை கட்டி வைத்திருக்கிறேன்
நீயேற்றி வைக்கும் மெழுகுவர்த்தியில் தான் என் இருளை நீக்கி சயனிக்கப் போகிறேன்
உன் சந்நிதியில் நானழுது
உபவாசித்து தரித்திருந்து
தனித்திருந்து
உன் மகிமையுணர்ந்த
நாளொன்றில்
என் சகலபாவங்களையும்
தீயிற் பலியிட்டு
இக்காதலால் நானடைகிறப்
புனிதத்தை உன் கையில்
ஒப்புக்கொடுக்கிறேன் ...
ஆதியில் நீயென்னிடம்
கொண்டிருந்த அன்பை
கடவுளின் ஒளியாக
நானேற்று என் பாவங்களில்
நான் மரித்து
மீண்டும் என்னை புதியவுயிராய்
புதுப்பித்து உன்னில் சரணடைந்து
உயிர்த்தெழுகிறேன்
இனியொரு போதும்
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
ஆமென் மாயா
ராம் பெரியசாமி
கருத்துகள் இல்லை