லைகா நிறுவன அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

 


லைகா படத்தயாரிப்பு நிறுவனத்தில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.

லைகா படத்தயாரிப்பு நிறுவனத்தில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான லைகா புரோடக்‌ஷன்ஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சென்னையில் இயங்கி வருகிறது. பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து அதனை வெளிநாடுகளிலும் திரையிட்டு வருகிறது.

ரஜினிகாந்த், கமல், விக்ரம், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது. சமீபத்தில் பெரிய பொருட்செலவில் தமிழ் சினிமாவின் நட்சத்திர பட்டாளமே நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை அடையாறு, தி.நகர், காரப்பாக்கம் உள்ளிட்ட லைகா நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் துணை ராணுவ பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (மே 16) சோதனையில் ஈடுபட்டனர்.

சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் லைகா நிறுவன நிர்வாகி வீடுகளிலும் இந்த சோதனையானது நடைபெற்றது.

இந்நிலையில் அடையாறு, தி.நகரில் உள்ள லைகா நிறுவனம், எம்.ஆர்.சி நகரில் உள்ள லைகா சி.இ.ஓ தமிழ்குமரன் வீடு உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது.

இந்த சோதனையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்திற்கான ஆவணங்கள் மற்றும் பொன்னியின் செல்வன் பட வருவாய் தொடர்பான ஆவணங்கள் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோனிஷா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.