வித்தகரான விபுலானந்தர்!!

 

               


16 - 07 - 2023

—————————————


மீன்பாடும் தேனாட்டி லுதித்த

வித்தகராம் விபுலானந்தர்

இத்தரையி லென்றும்

முத்தென ஒளிர்பவர் !


மயில்வாகன மென்னும்

திருநாமங் கொண்டவர்தான்

மகத்தான நற்பணிகளால்

விபுலானந்த அடிகளானார் !


முத்தமிழின் தேர்ச்சியினால்

சித்தத்தின் சீர்மையால்

கத்துங் கடலோர மெல்லாம்

தன்புகழை நட்டவர் !

தமிழர் மனங்களைத் தொட்டவர் !


சாதி சமய பேதமின்றி

சமத்துவப் பயிர்வளர

நீதிநெறி போதித்து

நீணிலத்தில் வாழ்ந்தவர் . . . .


இருள்சூழ் உலகத்தில்

ஒளிக்கதிர் பாய்ச்சி

மருள்களைந்து மண்ணிலே

மணித்துறவி யானவர் . . . .


பன்முக ஆளுமை

கொண்டவரின் படையலாய்

பல்வகை நூல்கள்

பாரெங்கும் பரிமளம் !


பண்டைய மக்களின்

பாவனையில் பலயாழ்கள் ;

அத்தனை யாழ்களும்

யாழ்நூலில் கண்விழித்து

யாழிசை மீட்டும் .


வெள்ளைநிற மல்லிகையோ ?

வேறென்ன மாமலரோ ?

வள்ளல் அடியினுக்கு

வாய்த்த மலரெதுவோ ?

என்னும் பாடலதை

உச்சரிக் காதவுத டுகளுண்டோ ?


ஆய்வுக் கட்டுரைகள்

அளப்பரிய நூல்களென

அன்றவ ரளித்ததை

அகிலமின்றும் போற்றும் .


பள்ளிக் கூடங்களை

பாரெங்கும் தான்நிறுவி

ஆசிரியராய் அதிபராய்ப்

பேரா சிரியராய்த் தானுயர்ந்தார் .


தன்னிக ரில்லாத்

தமிழ்ப் பணிசெய்தே

ஈழத்திரு நாட்டின் பெயரை

இமயத்தில் பதித்துவிட்டார் .


பிரமச்சரிய விரதத்தை

விருப்புடனே தானேற்று

விழுமியம் தழைப்பதற்கு

விதைதூவி நின்றாரே !


விதைதூவிச் சென்றதனால்

வீழ்ந்தவராய்த் தெரியவில்லை !

ஆழிசூழ் உலகத்தில்

அவர்புகழ் அழிவுறுமா ?




இரா . சம்பந்தன் - ஜேர்மனி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.