மனிதம் தொலைத்த மனிதா....!
மனிதா மனிதத்தை எங்கே தேடுகிறாய்.
அது உன்னிடம் இருக்கிறதா என்று ஒரு முறை கேட்டுப்பார்.
மண்ணிலே மனிதப் பிறவி எடுத்தலே பெரும் பாக்கியமாம்.
இங்கே ஏன் இந்தப் பிறவி என்று எண்ணத் தோன்றுகிறது.
எதற்காக இந்தப் பிறவி எடுத்தாய்
ஆனால் இப்போது எதை நோக்கிச் செல்கிறாய்.
என்ன தான் காணப்போகிறாய் இறுதியில்.
பச்சிளங் குழந்தை தாய் இன்றித் தவித்திட.
பள்ளிச் சிறார்கள் புத்தகங்கள் காத்திட.
வயிற்றுக்குள் பிள்ளை வறண்டு போயிட.
தாயின் நா வறண்டு நனைக்க நீரும் இன்றி
புழுவென துடித்திட.
பிள்ளையின் துடிப்பு நின்றிட.
துண்டு துண்டாக கண் முன்னே சிதறும் பிள்ளை உடல் கண்டு
பேச்சிளந்து
தாய் பித்துப் பிடித்திட
மூச்சின்றி பேச்சின்றி அத்தனையும் அடங்கிப் போய் விட.
ஐயோ ஐயோ என்ற அவலக் குரலும் எழுப்பத் தெம்பின்றி
இடுகாடாய் தேசமெங்கும்
தோன்றிட.
துண்டாண பிண்டங்கள் போல சிதறுண்ட சடலங்கள் எங்கும் திகைப்பை ஊட்டிட
ஏனிந்த பிறப்பென்று இறைவனை கேள்விகள் கேட்டிட.
இத்தனைக்கும் காரணம் என்னதான் மனிதா.
எதை பிடிக்கப் போகிறாய்
நிலமா!
இறுதியில் நீ கொண்டு செல்வாயா?
பணமா,நகையா!
உன் படுக்கையோடு வருமா?
மானம், மரியாதையா! உன்னோடு எடுத்துச் செல்வாயா?
பட்டம்,பதவி!
ஒன்றுமே உன்னோடு வரப்போவதில்லை?
உன் உயிரே உனக்குச் சொந்தமில்லை.
நீ எதை சொந்தம் கொள்கிறாய்.
காலம் தான் பதில் சொல்ல வேண்டும் கல் நெஞ்சம் படைத்தவர்களுக்கு.
மனம் கனத்துச் செல்கிறது.
இவள்!
அனுஹறி வதனி
கருத்துகள் இல்லை