தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2023 - சுவிஸ்!


தமிழீழ விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை தமிழினம் தலை தாழ்த்தி வணங்கி, நிமிர்ந்து உரம் பெறுகின்ற நவம்பர் மாதத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் ஆண்டுதோறும் நடாத்துகின்ற பேச்சுப்போட்டி உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. 18.11.2023 சனிக்கிழமை சூரிச், பேரண் ஆகிய நகரங்களில் 5 – 11 வயதுப்பிரிவுகளுக்கான வலயமட்டப் போட்டிகளும் 19.11.2023 ஞாயிறு நாடுதழுவிய வகையில் 13 – 30 வயதும் அதற்கு மேற்பட்டவர்களுக்குமான போட்டிகளும் நடைபெற்றன.


இப்போட்டியில் 274 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தார்கள். இவர்களுள் 5, 6, 7 வயதுப்பிரிவுகளிலே பங்குபற்றியவர்களுள் பெரும்பாலானோர் சுவிஸ் நாட்டிலே பிறந்து வளர்ந்த இளந்தலைமுறையினரின் பிள்ளைகள் என்பதுவும் அவர்களது தமிழ் உச்சரிப்பும் உணர்வும் வெளிப்பாடும் உச்சம் தொட்டிருந்தமையும் எல்லோராலும் பாராட்டப்பெற்றது. 5 – 8 மற்றும் 13, 15 ஆகிய பிரிவுகளிலே கூடுதலான போட்டியாளர்கள் பங்குபற்றியதால் அப்பிரிவுகள் ஒவ்வொன்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு போட்டி நடாத்தப்பட்டது. போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் நினைவுப்பரிசிலும் சான்றிதழும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
இருநாள்களும் அந்தந்த நாளுக்குரிய போட்டிகள் நிறைவுபெற்றதும் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பேச்சுப் போட்டியிலே பங்குபற்றிய போட்டியாளர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுகள். அவர்களை நெறிப்படுத்தி அரங்கேற்றிய பெற்றோர், ஆசிரியர்கள், உணர்வாளர்களுக்கும் எமது பாராட்டுகள். அனைத்துப் பிரிவுகளிலும் வெற்றி பெற்ற வெற்றியாளர்களை உளமார வாழ்த்துகிறோம்.
வெற்றிபெற்றவர்களுக்கான வெற்றிப்பரிசில் பாசல் மாநிலத்தில் (Messe Basel) 27.11.2023 நடைபெறும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளன்று வழங்கப்படும். இவ்வாண்டுக்கான பேச்சுகளில் பெரும்பாலானவை தமிழீழ வரலாற்றை மாணவர்கள் அறியக்கூடிய தலைப்புகளை உள்ளடக்கியதாக ஆக்கப்பட்டிருந்தமை எல்லோராலும் பாராட்டப்பெற்றது.
எமது இளந்தலைமுறைகளும் வளர்ந்தவர்களும் தமது தனித்தன்மையான ஆற்றல்களையும் இனப்பற்றையும் வளர்த்துக்கொள்வதற்கும் ஆளுமை மிக்கவர்களாக வளர்வதற்குமே எம்மால் இவ்வாறான போட்டிகள் நடாத்தப்படுகின்றன. எனவே, தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் அனுசரணையுடன் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் நடாத்துகின்ற இத்தகைய போட்டி நிகழ்வுகள் அதன் இலக்கை அடைய அனைவரது ஒத்துழைப்புகளையும் உரிமையுடன் வேண்டி நிற்கிறோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.