ஓட்டங்களின்றி 8 விக்கெட்டுக்கள் சாய்த்த கொழும்பு இந்துக் கல்லூரி வீரர் !


இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் (SLSCA) 13 வயதின் கீழ்ப்பட்ட டிவிஷன்-II பாடசாலைகள் இடையிலான முதல்தரக் கிரிக்கெட் தொடரினை ஒழுங்கு செய்து நடாத்தி வருகின்றது. இந்தக் கிரிக்கெட் தொடரில் நேற்று (24) முல்லேரியாவில் வைத்து கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் பத்தரமுல்ல MDH ஜயவர்தன மஹா வித்தியாலய அணிகள் இடையிலான போட்டி நடைபெற்றிருந்தது.



தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பத்தரமுல்ல MDH ஜயவர்தன மஹா வித்தியாலயம் முதலில் இந்துக் கல்லூரி வீரர்களை துடுப்பாடப் பணித்தது. அதன்படி போட்டியில் முதலில் ஆடிய இந்துக் கல்லூரி வீரர்கள் தமது முதல் இன்னிங்ஸிற்காக 126 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்த போது ஆட்டத்தினை இடை நிறுத்தினர்.


இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய பத்தரமுல்ல MDH ஜயவர்தன மஹா வித்தியாலயம் ரிஷியுதனின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே திணறியிருந்ததோடு 28.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து மொத்தமாக 28 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தனர்.


இந்த நிலையில் மிகச் சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்திய கொழும்பு இந்துக் கல்லூரி வீரர் செல்வசேகரன் ரிஷியுதன் ஓட்டங்கள் எதனையும் பறிகொடுக்காது 8 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார். வெறும் 10 வயது மாத்திரமே நிரம்பிய ரிஷியுதன் இப்போட்டியில் 09 ஓட்டமற்ற ஓவர்களை (Maiden) வீசி அசத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.