தன்னை நம்புதல்....
“தன்னைத்தான் காதலியுங்கள்
உங்களை நீங்களே நம்புங்கள்”
நம்மைப் பற்றி நாமே தாழ்வாக நினைப்பது, நமது திறமைகளை வீணடித்து விடும். நம்மைப் பற்றி நாம் எப்பொழுதும் உயர்வாகவே நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும். அப்போது தான் நாம் எடுத்த செயலை வெற்றியடைய வைக்க முடியும் பல முன்னேற்றங்களைப் பெறமுடயும். அதற்கு முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும். இந்த எண்ணம் தான் நம்மை உயர்த்திக் கொண்டே போகும். அது நமக்கு மாபெரும் வெற்றிகள் கிடைப்பதோடு, நமது எதிரிகள் கூட நம்மை வாழ்த்துவதற்கு முன் வருவார்கள்.
மாவீரன் நெப்போலியனுக்கு, அவனுடைய தளபதிகள் விருந்து கொடுத்தார்கள். பழரசக் கோப்பைகளைத் தட்டி இசை எழுப்பி, ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
இது முடிந்ததும் நெப்போலியனுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் குண்டு வெடிக்க வேண்டும். இந்த ஏற்பாடுகளைத் தளபதிகள் செய்து இருந்தார்கள்.
நெப்போலியனுக்கு இந்த விபரம் தெரியாது.
அனைவரும் வாழ்த்துக்களைப் பரிமாறிய பின்பு, குண்டு வெடித்தது தளபதிகளின் கைகளில் இருந்தப் பழரசக் கிண்ணங்கள் அதிர்ச்சியில் கீழே விழுந்து நொறுங்கி விட்டன.
ஆனால் நெப்போலியன் கை மட்டும் சிறிதும் நடுங்கவில்லை. அவன் கையில் இருந்த கிண்ணத்தில் பழரசம் கூடத் ததும்பவில்லை.
இதைப் பார்த்த தளபதிகள் நெப்போலியனிடம் கேட்டார்கள்.
“பிரபுவே! இது நாங்கள் செய்த ஏற்பாடு தான்! இருந்தும் கூட நாங்கள் ஏமாந்து பழரசக் கிண்ணங்களைத் தவற விட்டு விட்டோம்.
ஆனால் உங்களுடைய கை கொஞ்சம் கூட நடுங்கவில்லை. எவ்வளவு விழிப்புணர்வோடு இருக்கிறீர்கள்!” என்று பாராட்டினார்கள்.
உடனே நெப்போலியன் சொன்னான். “அதனால் தான் நான் சக்கரவர்த்தியாக இருக்கிறேன். நீங்கள் தளபதியாக இருக்கின்றீர்கள்” என்றான்.
உண்மை தான்! நெப்போலியன் தன் மீது மிகுந்த நம்பிக்கையும், மன உறுதியும் கொண்டு இருந்தார்..
அத்துடன் எதிலும் ஏமாந்து போகாத விழிப்புணர்வு அதிகமாக இருந்தது.
நெப்போலியனின் மாபெரும் வெற்றிகளுக்கு இவைகள் தான் காரணம்! ஒவ்வொரு கணமும் நெப்போலியன் தன்னை மிகவும் நம்பினான்.
ஆகவே
தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புதலாகும், கடின உழைப்பு, விடாமுயற்சி, திட்டமிடல் என்றெல்லாம் சொல்லுகிறோம் இவைகள் எல்லாம் சும்மா வெறுமனே பின்பற்ற முடியாது, தன்னம்பிக்கை இருந்தால் தான் அவைகள் எல்லாம் கைகூடும்.எனவே எல்லாவற்றுக்கும் அடிப்படைத் தன்னை நம்புவது ஆகும்.. நம்புங்கள் நம்மால் முடியும்.
நம்பிக்கையை
புலியின் பல்லிலும்
நரியின் கொம்பிலும்
ஜோசியரின் சொல்லிலும்
ராசிக்கல்லிலும்
கிளியின் கூட்டிலும்
ஜாதக ஏட்டிலும்
கருங்காலி மாலையிலும்
வைப்பதை விட்டுவிட்டு
உங்களில் நீங்கள் வையுங்கள்
'முடியுமா? என்பது மூடத்தனம்
முடியாது என்பது கோழைத்தனம்.
உன்னால் முடியும் என்பதே மூலதனம்...
தமிழ் மக்களுக்கு இது மிகவும் அவசியமான ஒன்று.
தவா - கனடா.
கருத்துகள் இல்லை