விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண் விடுதலை!


இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்றின் நடத்துநரின் பயணச்சீட்டு இயந்திரத்தை திருடிய  சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணை விடுவிக்குமாறு காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகமகே உத்தரவிட்டார்.

இமதுவ ஹவ்பே பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


இமதுவ ஹவ்பே பகுதியில் வசிக்கும் குறித்த பெண், ஹவ்பேயில் அமைந்துள்ள வீட்டுக்குச் செல்வதற்காக அண்மையில் இமதுவவிலிருந்து அக்குரஸ்ஸ டிப்போவிற்கு சொந்தமான பஸ்ஸில் ஏறியுள்ளார்.

குறித்த வயோதிப பெண் பஸ்ஸில் ஏறியதும், நடத்துநர் டிக்கெட் இயந்திரத்தை இருக்கையில் வைத்துவிட்டு, தண்ணீர் குடிக்க சாரதியின் இருக்கைக்குச் சென்றார்.

அப்போது பஸ்ஸில் சில பயணிகள் மட்டுமே இருந்துள்ளனர்.

இதன்போது குறித்த பெண் பஸ்ஸில்  ஏறியதும் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் டிக்கெட் இயந்திரம் இருப்பதை பார்த்து, நவீன கைப்பேசி என நினைத்து அதனை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.

வீட்டிற்குச் சென்றதும் புதிய கைப்பேசியில் அழைப்புகளை மேற்கொள்ள எண்களை டயல் செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் அந்த எண்களை டயல் செய்யும் போது அழைப்புகளுக்கு பதிலாக பஸ் டிக்கெட்டுகள் வெளி வந்தன.

இது கையடக்கத் தொலைபேசியல்ல, பயணச்சீட்டு இயந்திரம் என்பதை அறிந்து மறுநாள் காலி பஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் கொடுத்துள்ளார்.

சம்பவத்தை அறிந்த அதிகாரி, அவரை தடுத்து நிறுத்தி, பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் சந்தேக நபரை இமதுவ பொலிஸ் சார்ஜன்ட் பிரேமசிறி காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.