யாழில் விமானப்படையின் 73 ஆவது ஆண்டு சிறப்புக் கண்காட்சி!

 விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் சிறப்புக் கண்காட்சி - எயர் வைஸ் மார்ஷல் முடித மகவத்தகே தெரிவிப்பு!

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை நடத்தவுள்ளதாக விமானப்படையின் எயர் வைஸ் மார்ஷல் முடித மகவத்தகே தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில அவர் மேலும் கூறுகையில் –
இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிகழ்வை முன்னிட்டு, ‘நட்பின் சிறகுகள்’ எனும் செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளது. அத்துடன் இம்முறை வடமாகாணத்தை முன்னிலைப்படுத்தி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.
அதன் ஒருகட்டமாக ‘எனது புத்தகமும் வடக்கில்’ எனும்


தொனிப்பொருளில் 73 ஆயிரம் புத்தகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 73 பாடசாலைகளை புனர்நிர்மானம் செய்யும் செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதேவேளை வடக்கில் 73 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் 6 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் “தொழில்நுட்பம், கல்வி மற்றும் அபிவிருத்தி” எனும் தொனிப்பொருளில் கண்காட்சிகள் நடைபெறவுள்ளன.
கண்காட்சிகள் நடைபெறும் தினங்களில், விமானப்படையின் சாகச நிகழ்வுகள் கலை நிகழ்வுகள் என்பன நடைபெறவுள்ளன. இக்கண்காட்சிகளுக்கு பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாகவும், ஏனையோருக்கு நுழைவுக் கட்டணம் 100 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.
கண்காட்சிக்கு, இரண்டு இலட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம். ஜெட் விமான இயந்திரமொன்றையும் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தவுள்ளோம். கண்காட்சியின் முடிவில், அதனை யாழ். பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.