சாபம்...!
நினைவுகள் தழும்பிய
நீள்பொழுதொன்றில்
இருளைக் கிழித்தபடி
பார்த்துக்கொண்டிருக்கிறேன்...
வானாந்தர மேகங்களின்
வலியைப்போல
நீண்டுகொண்டிருக்கிறது
நீலம் பாரித்த நினைவுகள்....
யாரோ
எப்போதோ தூக்கிப்போட்ட
வெண்சங்கு
முகாரி இசைத்துக்கொண்டிருக்கிறது.
காலதேவனின் கைபிடித்த
கொடிய விதி
கருமை தரித்து
அலங்காரமாய் நிற்கிறது.
கழன்று கொள்ளா
எண்ணச் சிலுவைக்குள்
ஏகாந்தமாய்
ஒரு இராகம்...
ஒரு துயரக்கனம்
பந்தாய்
அடைத்துக்கொண்டிருக்கிறது
தொண்டைக்குழியை.
யூதாசின் முத்தங்களும்
காக்கையனின் கனவும் கூட
இரத்த நிலத்தில்
கேட்பாரற்றுக் கிடக்கிறது.
வெள்ளொளி காணாத
இந்த வாழ்வியல் சாபம்
இதோ இதோ
கண்ணீரால் கழுவப்படுகிறது.
கோபிகை.
கருத்துகள் இல்லை