இருவரின் உயிர்களை பலி எடுத்த காட்டு யானைகள்!📸


 மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் இருவரின் உயிர்களை பலி எடுத்த காட்டு யானைகள்


மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் யானையின் தாக்குதல்களால் விவசாயிகள், பண்ணையாளர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.


ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவு ஈரளக்குளத்தில் நேற்றிரவும் (16/03) , கிரான் பிரதேச செயலக பிரிவு திகிலிவெட்டையில் இன்று அதிகாலையிலுமே (17/03) மேற்படி சம்பவம் இடம் பெற்றிருக்கிறது.


இரு வெவ்வேறு பிரதேச செயலகப்பிரிவுகளிலும் நடைபெற்ற மரணத்திற்கான மரண விசாரணைகளை , திடீ. மரண விசாரணை அதிகாரிகளான MSM.நஸீர், K.பவளகேசன் ஆகியோர் கரடியனாறு மற்றும் சந்திவெளி பொலிஸாருடன் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று மேற்கொண்டனர்.


ஆவெட்டியாவெளியில் மாடு வளர்ப்பில் ஈடுபட்ட, சித்தாண்டியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான பத்மநாதன் மோகனதாஸ் (45) என்பவர் நேற்று மாலை உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று, பண்ணையை நோக்கி இரவு 09 மணியளவில் நடந்து செல்லும்போது ஈரளக்குளத்தில் வீதியோரமாக நின்ற யானையொன்றினால் தாக்குண்டு சம்பவ இடத்திலேயே மரணித்ததோடு,


திகிலிவெட்டை, குளத்துவெட்டையை சேர்ந்த நாகராசா முரளிதரன் (31)என்ற ஒரு பிள்ளையின் தந்தையான இவர் நண்பர் ஒருவருடன் நள்ளிரவு வேளை வலைவீசி மீன் பிடிக்கச் சென்று அதிகாலை வேளை குளத்தின் ஓரமாக நின்ற மதுரை மரத்தின் கீழ் படுத்துறங்கிய போது யானையின் தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார்.


இரு சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.