கடவுள் தோன்றினால்.


கோடையிலும்

வற்றாத குளம் கேட்பேன்.

நாடெல்லாம்

ஒரே அளவு மழை கேட்பேன்.

எங்கும்  எரிமலை சீற்றமும்

மண் சரிவும் வேண்டாம் என்பேன்.


மேடைகளில் பொய் பேசாத

அரசியல் தலமை கேட்பேன்.

கலை ஆர்வலர்களை சந்திக்கும்

வாய்ப்பை கேட்பேன்.


வைரஸ் தொற்றிக் கொள்ளாத

தேகம் கேட்பேன்.

நினைத்தவுடன் கவிதை

எழுதும் திறன் கேட்பேன்.


பாடையிலே போகுமுன்னர் தமிழ்

ஈழம் மலரக் கேட்பேன்,

ஐ நா முன்றலில் புலிக் கொடி

பறக்க கேட்பேன்,

அதிராத குரல் கொண்ட

நண்பண் கேட்பேன்.

அளவோடு பேசும் அற்புத

உறவுகளின் சொந்தம் கேட்பேன்.


உயிர் சென்று தடவுகின்ற

தென்றல் கேட்பேன்

தேசியத்தை நேசிக்கும்

இதயங்களை காட்டென்பேன்.


எப்போதும் நேசிக்கின்ற

படைப்பாளிகளின் படைப்பில்

தப்பேதும் நிகழாத

தமிழைக் கேட்பேன்.


இப்போதும் இருக்கின்ற

என் இளமை போதுமென்பேன்.

சாகும் வரை  யார் மனதும்

நோகும் படி நடக்காதிருக்கும்

நற் பண்பை வழங்கும் படி கேட்பேன்.


16.03.24

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.