எதிர்வரும் 1ம் திகதி முதல் 5ம் திகதி வரை கிழக்கில் மழை !
எதிர்வரும் 01.06.2024 வங்காள விரிகுடாவில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக எதிர்வரும் 01.06.2024 முதல் 05.06.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் மிதமான முதல் கனமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாண்டுக்கான தென்மேற்கு பருவக்காற்று இன்று இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு வீசத் தொடங்கியுள்ளது. அதனால் இலங்கையின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் உயர்வாக இருக்கும். அத்தோடு கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் உயர்வாக காணப்படும். கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் இலங்கையின் அனைத்து பகுதி மீனவர்களும் எதிர்வரும் 31.05.2024 வரை கடலுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது.
அதேவேளை தென்மேற்கு பருவத்தின் தொடக்க நிலைமை காரணமாக அதிகளவிலான ஈரப்பதன் நிறைந்த காற்றினால் இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை பகுதிகளுக்கு மிகக்கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் இப்பகுதிகளில் வெள்ள அனர்த்தங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே மேற்கூறிய மாவட்டங்களின் மக்கள் கன மழை தொடர்பாகவும் வெள்ள அனர்த்தங்கள் தொடர்பாகவும் அவதானமாக இருப்பது அவசியம்.
-நாகமுத்து பிரதீபராஜா-
கருத்துகள் இல்லை