ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை சந்திப்பு!

 


இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை, இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்று (11) சந்தித்து பேச்சு நடத்தினார்.


மே 18 முதல் 20 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கி இருக்கும் குருஜி நுவரெலியா, சீதையம்மன் ஆலயத்துக்கும் வருகை தரவுள்ளார்.இந்நிலையில் குருஜியின் அதிதியாக பெங்களுரூ சென்றிருந்த அமைச்சர், அவரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.


இலங்கையின் தற்போதைய நிலைவரம், மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நகர்வுகள் பற்றி குருஜிக்கு அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். அதேபோல பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் பற்றியும் விவரித்துள்ளார். மலையக சமூக மாற்றத்தில் இது முக்கிய திருப்பமாக அமையுமென அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


வாழும் கலை நிறுவனத்தின் கீழ், பிரஜா சக்தி, தொண்டமான் அறக்கட்டளை போன்றவற்றின் ஊடாக எமது மக்களுக்கு தொழில் பயிற்சி, தொழில் மேம்பாடு மற்றும் புத்தாக்க வாய்ப்புகள் பற்றி ஆராயுமாறு இதன்போது அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.


அதேபோல நீர்வளத்துறை பற்றியும் இருவருக்கும் இடையில் கருத்தாடல் இடம்பெற்றுள்ளது.


இச்சந்திப்பின்போது இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக சமூகத்தைச் சேர்ந்த செல்லையா கோபாலன் என்ற கலைஞர் வரைந்த ஓவியத்தை குருதேவிடம் அமைச்சர் நினைவு பரிசாக வழங்கினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.