அரோர் ஒளி நடனம்.!


கடந்த இரண்டு நாட்களாக பிரெஞ்சு நிலத்தின் வானம் வேடிக்கை காட்டியபடி உள்ளது என புலம்பெயர் சகோதரர் ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அவர் இவ்விடயம் பற்றி தெரிவித்த கருத்துகள் பற்றி பார்ப்போம். 

வானம் ரோஜா பூ நிறத்தில் இரவுகளில் தெரிந்தால் எப்படி இருக்கும் ?

இது ஆபத்தான சகுனம் எனவும் இயற்கையை மனுசன் கொல்லும்போது வரும் குருதி எனவும் அங்குள்ள சிலர் தெரிவிக்கின்றனர். 

ஆனால் இந்த வானச்சீலைகளின் நடனம் அரோர் ஒளி என்று (les aurore)  அழைக்கப்படுகிறது. வழமையாக துருவப் பகுதி நாடுகளில் பச்சை, ஊதா, சிகப்பு. மஞ்சள் ஒளியாக இவை வெளிப்படுவதுதான். 

கடந்த இரண்டு நாட்களாக குங்குமம் மற்றும் ரோஜா நிறங்களில் இரவு வானத்தில் நடனமிடக்காரணம்  சூரியப் புயல் பூமியை நோக்கி  பல நூறு கி.மி வேகத்தில் வீசுவதாகும். 

இசைப்புயலை அறிந்த நமக்கு சூரியப் புயல் புதிதாக இருக்கலாம். 

சூரியன் ஒரு நெருப்பு நடனக்காரன். அவன் ஆடுகிற ஆட்டத்தில் சில அசைவுகளின் சுவாலைகள் நம் பூமியின் பகுதிக்கு வந்துவிடுகிறது.

அல்லது பூமி அவன் நாட்டியத்தை எட்டிப்பார்த்துவிடுகிறது. அதனால் வரும் அனல் பூமியின் காந்தப்புலன்களை சந்திக்கிறபோது  இந்த ஒளி நடனம் நடக்கிறது. சூரியனின் தீ நடனத்தை பார்த்து பூமியின் காற்று மண்டலம் துள்ளிக்குதிக்கிறது.

இப்போது வந்திருக்கிற சூரிப்புயல்போல் மனிதர்கள் பதிந்து வைத்திருக்கும் வரலாற்றில் 1859 இல் பல் மடங்கு பெரிதான சூரியப் புயல் ஏற்பட்டதாகவும் வானத்திரைச்சீலை நடனம் நிகழ்ந்ததாகவும் அப்போது தந்தி வலைப்பின்னல் பாதிக்கப்பட்டதாகவும் பதிவுகள் உண்டு.


இரவு ஒரு மணிக்கு பத்திரிகை படிக்கக்கூடியதாக இருந்ததை அப்போது வெளியான பத்திரிகைகள் பதிவு செய்துள்ளன.


இந்த‌ ஒளிக்கு 1621 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டைச் சேர்ந்த தத்துவஞானியும், அறிவியலாளரும், வானியல் வல்லுநருமான பியர் கசண்டி (Pierre Gassendi) என்பவர் aurora என்ற ரோமானியப் பெண் தெய்வத்தின் பெயரைக் கொண்டும், வடபருவக்காற்றை கிரேக்க மொழியில் குறிக்கும் Boreas என்ற சொல்லைக்கொண்டும்  பெயர் வழங்கினார்.


நோர்வே நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளில் சிலர் இந்த ஒளி பற்றி தினமும் பதிவுசெய்தும் ஆராய்ந்தும் வருகின்றனர்.  


இந்த ஒளி தோன்றும் காலங்களில் வளிமண்டலத்தில் மின்சாரம் நிறைகிறது என்பது அவர்களின் முடிபு. கிரிஸ்டியான் பிர்க்கலாண்ட் (Kristian Birkeland) எனப்படும் ஒரு அறிவியலாளர் துருவ ஒளி மின்சாரத்தோடு வைத்திருக்கும் உறவை அறிவித்த அறிஞர்.


அண்மைக்காலத்தில் அணு ஆயுதப் போர் பற்றி ‘பெரிய’ தலைவர்கள் பேச ஆரம்பித்திருக்கும் நிலையில் சிலர் அச்சப்பட்டதுபோல் அதிர்ச்சியான சம்பவங்களும்  நடக்கலாம்.







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.